Sunday, March 24, 2019

பயிலிழை குவெ.19. அலங்காரக் குறள்: தற்குறிப்பேற்ற அணி

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.19. அலங்காரக் குறள்: தற்குறிப்பேற்ற அணி

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/302573873806484/

தற்குறிப்பேற்ற அணி
(பிற பெயர்கள்: தற்குறிப்பேற்றணி)
இயல்பாக நிகழும் ஒன்றன்மேல் 
.. கவிஞர் தம் கற்பனையால் 
.. ஒரு காரணத்தைக் கூறி 
.. (இவ்வாறு தன் குறிப்பை அதன்மேல் ஏற்றிப்)
.. படிப்போர் மனத்தில் தாம் விரும்பும்
.. உணர்வைக் கிளர்ந்தெழச் செய்வது
.. தற்குறிப்பேற்ற அணி.

தற்குறிப்பேற்றம், இல்பொருள் உவமை, உயர்வு நவிற்சி 
.. இவை மூன்றும் எவ்வகையில் ஒன்றுக்கொன்று 
.. வேறுபட்டு நிற்பன என்றறிதல் முக்கியம்.

மங்கை வந்தாள் மலர்கள் அசைந்தன => தற்குறிப்பேற்றம் 
.. பொதுவான நிகழ்வின்மேல் தற்குறிப்பை ஏற்றிச் சொல்வது.

குதிரையின் கொம்பால் குவிகனி கொய்தாள் => இல்பொருள் உவமை
.. கனி பறிக்கும் துறட்டுக்கோலை இல்லாத பொருளான
.. குதிரைக் கொம்பிற்கு உவமையாக்கியது.

கொய்தனள் விண்மீன்கள் குடலையில் சேர்த்தனள் => உயர்வு நவிற்சி
.. பூக்களை விண்மீன்களாக உயர்த்தி
.. அவற்றைக் கொய்ததாகச் சொல்லும் வியப்பு.

தண்டியலங்கார சூத்திரம்

தண்டியலங்காரம் தற்குறிப்பேற்றணியை இவ்வாறு வரையறுக்கிறது.

பெயர்பொருள் அல்பொருள் எனவிரு பொருளிலும்
இயல்பின் விளைதிற னன்றி அயலொன்று
தான்குறித் தேற்றுதல் தற்குறிப் பேற்றம்.

மேற்கண்ட சூத்திரம் இவ்வணியை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறது.
.. பெயர்பொருள் (அசையும் பொருள்) தற்குறிப்பேற்றம்
.. அல்பொருள் (பெயராப் பொருள், அசையாப் பொருள்) தற்குறிப்பேற்றம்.

பெயர்பொருள் தற்குறிப்பேற்றணி சான்று
(குறள் வெண்பா)

தாகத்தால் சோதி தடாகநீர் உள்ளிழுக்க
மேகமுரு வானது வே!
[சோதி = சூரியன், பெயரும் பொருள்]

பெயராப்பொருள் தற்குறிப்பேற்றணி சான்று
(குறள் வெண்பா)

மலைக்கார் மகளவள் மார்பணி யாக
அலைவீழ் அருவி அழகு.
[மலை = அசையாப் பொருள்]

பயிலிழை குவெ.19. அலங்காரக் குறள்: தற்குறிப்பேற்ற அணி

அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிலரங்கில் பங்கேற்கலாம்.
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.19. அலங்காரக் குறள்: தற்குறிப்பேற்ற அணி
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. ஒரு விகற்பப் பொழிப்பு மோனைக் குறளாகப்
.. பெயர்பொருள் தற்குறிப்பேற்றணி அமைவதாக
.. ஐந்து (5) குறள் வெண்பாக்களும்
.. பெயராப் பொருள் தற்குறிப்பேற்றணி அமைவதாக
.. ஐந்து (5) குறள் வெண்பாக்களும்
.. ஆக மொத்தம்
.. பத்து (10) குறள் வெண்பாக்கள்
.. புனைந்தெழுதுவோம்.

குறிப்பு
பெயர்பொருள் (அசையும் பொருள்), 
.. பெயராப் பொருள் (அசையாப் பொருள்)
.. பற்றிய விளக்கமும் சான்றுகளும் மேலே.

தொகுப்பு
28/09/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
பெயர்பொருள் தற்குறிப்பேற்றணி
(குறள் வெண்பா)
(அசையும் பொருள்மேல் தற்குறிப்பேற்றும் அணி)

அல்லியைக் கண்ட அழுக்காற்றில் வெண்மதி-மங்
குல்பின் மறைந்தொளியும் கூத்து! ... 1

மழலை விழிக்க மனமகிழ்செஞ் சோதி
தழுவும் கரங்கள் தளிர். ... 2

காற்றைத் துரத்தும் கடிமலர் வண்டொன்று
சேற்றில் நனையும் சிறிது! ... 3

நெற்களப் பொற்குவியல் நீள்பிரி யாய்வைக்கோல்
பொற்கரம் தூற்றும் பொலிவு. ... 4

வான்மலர் சோதி வழியிலோர் மேகம்பின்
தான்மறையும் கொஞ்சம் தளர்ந்து. ... 5

பெயராப்பொருள் தற்குறிப்பேற்றணி
(குறள் வெண்பா)
(அசையாப் பொருள்மேல் தற்குறிப்பேற்றும் அணி)

மரங்கள்தம் கையேந்தி வான்மழை வேண்டும்
பெருமூச்சில் வானின் பெயல். ... 6

கொடியிடை பூக்கள் குரல்கொடுக்க வந்தே
துடியிடை ஆட்டும் சுரும்பு. ... 7

சன்னலொன்று கண்விழிக்கச் சட்டெனக் கண்பட்ட
கன்னிமுகம் உள்ளக் களிப்பு. ... 8

பனிப்போர்வை யில்தூங்கும் பட்டணத்து வீடு
தனியாய் விழித்திருக்கும் நாய். ... 9

பொன்னிற மாலைப் பொலிவினில் கோபுரம்
நின்றெழில் காணும் நிழல். ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

No comments:

Post a Comment