சடுதியில் மரபுகவி: பாவிலக்கணம்
ஆக்கியோன்: குருநாதன் ரமணி
வெண்பா இலக்கணமும் மரபும்பொது இலக்கணம் | பொது மரபு | நேரிசை வெண்பா | இன்னிசை வெண்பா | குறள் வெண்பா
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய .. நான்கு பாவகைகளில் .. தனித்த, தூய இலக்கணம் கொண்டது வெண்பா. .. இதனால் வெண்பாவிற்கு வெள்ளைப்பா, ஒண்பா .. போன்ற பெயர்கள் உண்டு. வெண்பா பொது இலக்கணம் * வெண்பாவின் அடிகளாக அமைவன .. ஈற்றடி தவிர்த்து ஏனை அளவடிகள் (நாற்சீர்) .. ஈற்றடி சிந்தடி (முச்சீர்). * கீழெல்லை 2 அடிகள் .. மேலெல்லை கவிஞன் உள்ளம் பொறுத்து * வெண்பா வகைகள் .. அமையும் அடிகள் பொறுத்து: .. இரண்டடியில் குறள் வெண்பா .. மூன்றடியில் சிந்தியல் வெண்பா .. நாலடியில் அளவியல் வெண்பா .. .. (இதற்கே வெண்பா என்னும் பொதுப்பெயர்) .. ஐந்து முதல் பன்னிரண்டடிகள் பஃறொடை வெண்பா .. பதின்மூன்றும் மேலும் கலிவெண்பா. * நேரிசை, இன்னிசை வெண்பா வகைகள் .. குறள் வெண்பா தவிர்த்த பிற வெண்பா வகைகள் .. நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, .. என்று இருவகைப்படும். * வெண்பாவின் சீர்களாக அமைவன .. ஈரசை இயற்சீர் நால்வகையும் .. .. (தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்) .. மூவசைக் காய்ச்சீர் நால்வகையும் .. .. (தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்). .. இயற்சீர் ஆசிரிய உரிச்சீர் என்றும், .. காய்ச்சீர் வெண்பா உரிச்சீர் என்றும் பெயர்பெறும். * வெண்பாவின் தளைகளாக அமைவன .. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை .. ஆகிய இருவகைத் தளைகள் மட்டுமே .. பிறவகைத் தளைகள் விரவலாகா. .. * இயற்சீர் வெண்டளை .. மா-முன்-நிரை, விளம்-முன்-நேர் வருவது * வெண்சீர் வெண்டளை .. காய்-முன்-நேர் வருவது. * செப்பலோசை .. வெண்டளையான் எழும் ஓசை .. அது மூன்று வகைப்படும். .. ஏந்திசைச் செப்பலோசை: வெண்சீர் வெண்டளை மட்டும் .. தூங்கிசைச் செப்பலோசை: இயற்சீர் வெண்டளை மட்டும் .. ஒழுகிசைச் செப்பலோசை: இருவகை வெண்டளைகளும் விரவி. * வெண்பாவின் ஈற்றுச்சீராக அமைவது .. அசைச்சீர் எனப்படும் ஓரசைச் சீர். * ஈற்றுச்சீர் வாய்பாடு .. நாள், மலர், காசு, பிறப்பு .. நாள் => தனி நேரசை (க, கு) .. மலர் => தனி நிரையசை (பல, பலர், கலா, கலாம்) .. காசு => தனிக்குறில் அல்லாத நேர் + குற்றியலுகரம் (கொக்கு, மூப்பு, வீடு) .. பிறப்பு => தனிநிரை + குற்றியலுகரம் (சிறகு, சிறப்பு, வரைவு, இசைந்து). * வெண்பாவில் எதுகை மோனை * அடியெதுகை .. வெண்பாவில் அடியெதுகைக்கு விகற்பம் என்று பெயர். .. அடிகளெலாம் ஓரெதுகையாய் (ஒரு விகற்பம்) அல்லது .. இரண்டடிக்கு ஓரெதுகையாய் (இரு விகற்பம்) அல்லது .. அடிக்கொன்று எனப் பலவெதுகையாய் (பல விகற்பம்) அமையலாம். .. முதலிரு வகைகளே சிறப்பு. * மோனை .. மோனை பற்றியேதும் இலக்கண வரையறை யில்லை. .. ஆயினும் அடிகளில் சீர்கள் ஒன்றிலும் மூன்றிலும் வரும் .. பொழிப்பு மோனை அமைவது சிறப்பு. * வெண்பாவில் வாராதன .. நால்வகைக் கனிச்சீர் .. வெண்டளையன்றி வேறு தளை .. அளவடி, சிந்தடியின்றி வேறடி. கீழ்வரும் காளமேகப் புலவர் பாடலில் .. (இருவிகற்ப நேரிசை வெண்பா) .. .. நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் .. வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த் .. தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில் .. பாம்பாகும் வாழைப் பழம். .. .. நாதர்முடி => தேமாங்கனி .. ஆயின் இடையின ஒற்று அலகுபெறாததால் .. நாதமுடி => கூவிளங்காய் ஆகும். நேரிசை வெண்பா இலக்கணம் * நேரிசை வெண்பா என்பது .. இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று வரும் .. அந்தத் தனிச்சொல் ஒரூஉ எதுகையாகச் .. சீர்கள் 1-4-இல் அமைந்து வரும். .. முதலடி, இரண்டாம் அடி, அதன் ஒரூஉ எதுகை .. இவை மூன்றும் ஓரெதுகையாக அமையும். .. இம்மூன்று எதுகைகளும் நேராக இசைந்து வருவதால் .. நேரிசை வெண்பா என்ற பெயர். .. தனிச்சொல்லை ஒரு சிறு கோடிட்டு (hyphen) .. மூன்றாம் சீரிலிருந்து பிரித்துக் காட்டுவது வழக்கம். * நேரிசை வெண்பா .. நான்கு அடிகளும் ஒரு விகற்பத்தில் அல்லது .. முன்னிரண் டடிகளும் பின்னிரண்ட் டடிகளும் .. ஒவ்வொரு விகற்பம் என்று இரு விகற்பத்தில் அமையும். .. இரண்டின் மேற்பட்ட விகற்பம் எனில் .. தனிச்சொல் இருந்தாலும் அது நேரிசை யாகாது, .. இன்னிசை வெண்பாவாகக் கருதப்படும். இன்னிசை வெண்பா இலக்கணம் * இன்னிசை வெண்பா என்பது .. நேரிசை இலக்கணம் அமையாத வெண்பா .. அனைத்தும் இன்னிசை வெண்பா வாகும். .. இது ஒரு விகற்பம், இரு விகற்பம், .. அன்றிப் பல விகற்ப எதுகைகளில் .. தனிச்சொல் பெற்றோ பெறாமலோ அமையும். .. பொதுவாகத் தனிச்சொல் இன்றி அமையும். * இன்னிசை வெண்பாவில் தனிச்சொல் .. நான்கடிகளில் எங்கும் வரலாம். .. இரண்டாம் அடியில் வந்தால் .. வெண்பா பல விகற்பத்தில் அமையும். .. (ஒரு/இரு விகற்ப வெண்பாக்களில் .. இரண்டாமடித் தனிச்சொல் வந்தால் .. அது நேரிசை யாகும் என்றறிக). .. ஒன்றுக்கு மேற்பட்ட தனிச்சொற்கள் வரலாம். .. அடிதோறும் தனிச்சொல்லாகவும் வரலாம். வெண்பா மரபு * ஈற்றடி .. ஈற்றடி பேசுமே வெண்பாவின் தாற்பரியம் .. ஈற்றடி பேசுமே வெண்பாவின் அலங்காரம் .. ஈற்றடி பேசுமே வெண்பாவின் சித்திரம் .. ஈற்றடியே வெண்பா வுயிர். * ஈற்றுச் சீர் .. காசு, பிறப்பு வாய்பாட்டில் .. முடியும் ஈற்றுச் சீர்கள் .. குற்றியலுகரத்தில் முடிதல் வேண்டும் .. முற்றியலுகரத்தில் முடிவது அரிது. * விளாங்காய்ச் சீர் தவிர்த்தல் .. நடுவசை குறில்-நெடில், குறில்-நெடில்-ஒற்று .. என்று வரும் கூவிளங்காய், கருவிளங்காய்ச் சீர்களால் .. செப்பலோசை குறைவதால் இத்தகு சீர்கள் .. வெண்பாவில் வருவது தவிர்க்கப்படும். * சான்று: விளாங்காய்ச் சீர்கள் .. கண்ணதாசன், என்னதான்சொல் => கூவிளாங்காய் .. மழையிலாது, மழையிலாக்கான் => கருவிளாங்காய்) .. இவை கண்ண தாசன், என்ன தான்சொல் .. என்பதுபோல் ஈரசைச் சீர்களாக, .. இயல்பாகப் பிரிவது காண்க. * மோனை .. சீர்கள் 1-3-இல் வரும் .. பொழிப்பு மோனை பொதுவாக .. ஈற்றடி தவிர்த்து ஏனை அடிகளில் வரும். .. ஈற்றடியிலும் வருவது சிறப்பு. * பொழிப்பெதுகை .. பொழிப்பு மோனை அமையாத போது .. பொழிப்பு எதுகை அமையலாம். .. எனினும், பொழிப்பு மோனையே சிறப்பு. * வகையுளி .. சீர்-தளைக்காகச் சொல்லைப் பிரிப்பது .. வகையுளி எனப்படும். .. வெண்பாவில் வகையுளி ஈற்றடியில் அமையலாம். .. ஏனை அடிகளில் தவிர்ப்பது மரபு. .. சீர்களைப் புணர்ச்சியுடன் எழுதுவதும் .. வகையுளியும் வேறு என்றறிக. * சான்று: ஈற்றடியில் வகையுளி .. மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் .. நிலமிசை நீடுவாழ் வார். .. --திருக்குறள் 001:03. * சான்று: வகையுளி யில்லா வெண்பா .. (இருவிகற்ப நேரிசை வெண்பா) .. .. ஆற்றங் கரையின் மரமு மரசறிய .. வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - யேற்ற .. முழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர் .. பழுதுண்டு வேறோர் பணிக்கு. .. --ஔவையார், நல்வழி 12 * வெண்பா யாப்பின் அளவுகோல் .. புலவர் குழந்தையின் யாப்பிலக்கண .. நூல்கள் சொல்லும் பலவித யாப்பமைதிகளின் .. தொகுப்பு கீழுள்ள அட்டவணை.
குறள் வெண்பா இலக்கணமும் மரபும் குறள் வெண்பா விலக்கணமும் மரபும் கொள்ளும் .. பல்வேறு கூறுகளுக்குச் சான்றுகள் யாவும் .. திருக்குறளிற் காணலாம். குறள் வெண்பா பொது இலக்கணம் * வெண்பாவின் பொதுவிலக்கணம் முழுதும் .. குறள் வெண்பாவில் அமைய வேண்டும். * முதலடி அளவடி (நாற்சீர்) .. இரண்டாமடி சிந்தடி (முச்சீர்). * குறள் வெண்பா வகைகள் * இனக்குறள் வெண்பா .. ஈறடிக்கும் ஓரெதுகையாய் ஒருவிகற்பத்தில் வருவது. * விகற்பக்குறள் வெண்பா .. ஈறடிக்கும் வேறெதுகையாய் இருவிகற்பத்தில் வருவது. குறள் வெண்பா மரபு * வெண்பா மரபுக் கூறுகள் யாவும் .. குறள் வெண்பாவில் அமைதல் வேண்டும். * தொடை .. எதுகை, மோனை, முரண், இயைபு, அளபெடை .. அந்தாதி, இரட்டை, செந்தொடை .. ஆகிய எட்டு வகைகளில் .. எதுகை, மோனை, முரண் பொதுவாகப் பயின்றுவரும். .. .. அளபெடைத் தொடை இன்று வழக்கில் இல்லை. .. ஆயின் திருக்குறளிற் காணலாம். .. செந்தொடை வரினும் செப்பலோசை வேண்டும். * குறள் வெண்பா யாப்பில் சிறக்க .. ஒருவிகற்பம் (ஈறடிக்கும் ஓரெதுகை) .. பொழிப்பு மோனை (இரண்டு அடிகளிலும்) .. பொருள் பற்றி முரண்தொடை. .. .. எதுகையின் சிறப்பு அடிகளில் .. மோனையின் சிறப்பு சீர்களில். திருக்குறள் சான்றுகள்: இனக்குறள் குறள் 1. அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே திரு. --திருக்குறள் 018:09 [ஒருவிகற்பம் அதே எழுத்து; அளவடி: பொழிப்பு மோனை அதே எழுத்து; சிந்தடி: பொழிப்பு மோனை அதே எழுத்து.] இதேபோல் சில குறட்பாக்களை அளவிட்டதில் கிடைத்தவை கீழே: குறள் 2. இனிய யுளவாக வின்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. --திருக்குறள் 010:10 [ஒருவிகற்பம் அதே; அளவடி: பொழிப்பு மோனை அதே; சிந்தடி: பொழிப்பு மோனை கிளையெழுத்து.] குறள் 3. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். --திருக்குறள் 020:10 [ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ மோனை; சிந்தடி: பொழிப்பு மோனை அதே.] குறள் 4. மனைமாட்சி இல்லாள்க ணில்லாயின் வாழ்க்கை யெனைமாட்சித் தாயினு மில். --திருக்குறள் 006:02 [ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ மோனை; சிந்தடி: பொழிப்பு மோனை கிளை.] குறள் 5. அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி. --திருக்குறள் 051:06 [ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ எதுகை; சிந்தடி: பொழிப்பு மோனை அதே.] குறள் 6. ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் றிரு. --திருக்குறள் 022:05 [ஒருவிகற்பம் கிளையெழுத்து; அளவடி: ஒரூஉ மோனை; சிந்தடி: பொழிப்பு மோனை கிளை.] குறள் 7. ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. --திருக்குறள் 015:05 [ஒருவிகற்பம் அதே; சிந்தடி: பொழிப்பு மோனை அதே.] குறள் 8. பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்க ணில். --திருக்குறள் 015:01 [ஒருவிகற்பம் அதே; அளவடி: பொழிப்பு மோனை கிளை.] குறள் 9. அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை யிகழ்வார்ப் பொறுத்த றலை. --திருக்குறள் 016:01 [ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ மோனை.] குறள் 10. பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க நோதக்க நட்டார் செயின். --திருக்குறள் 081:05 [ஒருவிகற்பம் கிளை; அளவடி: பொழிப்பு மோனை கிளை;] குறள் 11. வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். --திருக்குறள் 009:05 [ஒருவிகற்பம் கிளை; அளவடி: ஒரூஉ மோனை.] குறள் 12. அகலா தணுகாது தீக்காய்வார் போல்க விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். --திருக்குறள் 070:01 [ஒருவிகற்பம் அதே.] திருக்குறள் சான்றுகள்: விகற்பக் குறள் (ஒரூஉ எதுகை) மனத்துக்கண் மாசிலன் னாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. ---திருக்குறள் 004:04 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். ---திருக்குறள் 014:01 உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னார் உடைத்து. ---திருக்குறள் 067:07 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. ---திருக்குறள் 109:01 (செந்தொடை) அமிழ்தினும் ஆற்ற வினிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். ---திருக்குறள் 007:04 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு. ---திருக்குறள் 040:07 திருக்குறளில் பொருள் சிறக்க வரும் முரண்தொடை சொல்முரண் செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. ---திருக்குறள் 009:06 ... [செல்விருந்து வருவிருந்து] மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல். ---திருக்குறள் 007:10 ... [மகன் தந்தை] சொற்பொருள் முரண் அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. [அறம் மறம்] ---திருக்குறள் 008:06 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். [அல்லவை நல்லவை] ---திருக்குறள் 010:06 இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. ---திருக்குறள் 010:10 ... [இனிய இன்னாத => சொற்பொருள் முரண்; கனி காய் => சொல்முரண்] தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும். ---திருக்குறள் 012:04 ... [தக்கார் தகவிலர்] திருக்குறளில் நிரோட்ட/இதழகல் பாக்கள் பார்க்க: http://muelangovan.blogspot.in/2012/03/blog-post_26.html நிரோட்டம் அல்லது இதழகல் என்றால் .. சொல்லும்போது உதடுகள் .. ஒட்டாமலோ, குவியாமலோ அமைவன. நிரோட்டம்/இதழகலுக்கு ஆகாத எழுத்துகள் .. கீழ்வரு மாறு கணக்கு. உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன், ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8 ப்,ம்,வ் ௧௨ உயிர்கள் உறழ்ந்து 36 உ,ஊ,ஒ,ஓ,ஔ x15மெய்யுடன் உறழ்ந்து,(ப்,ம்,வ் நீங்கலாக) 75 ஆக 119. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். ---திருக்குறள் 035:01 எய்தற் கரிய தியைந்தகாண் அந்னிலையே செய்தற் கரிய செயல். ---திருக்குறள் 049:09 ஔவையின் குறள்மூலம் மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால் ஈசனைக் காட்டு முடம்பு. 016 எழுபத் தீராய நாடி யவற்றுள் முழுபத்து நாடி முதல். 031 முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால் பின்னைப் பெறுமுணர்வு தான். 084 பத்துத் திசையும் பரந்த கடலுலகும் ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். 191 பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது கற்றதனா லென்ன பயன். 214 சாகா திருந்த தலமே மவுனமது ஏகாந்த மாக விரு. 272 ★★★
No comments:
Post a Comment