Sunday, March 31, 2019

பயிலிழை சிவெ.01. ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா: தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

02. சிந்தியல் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை சிவெ.01. ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா: தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/324739411589930/
பாவலர் சீனி பழனி
(ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

மழைக்காள மேகம் மலையிடையே தூறல்
நிழலில்லாத் துன்னிருள் வானில் – தழலில்
இழையிடி ஏந்திழை ஏர். ... 1

ஐப்பசி மாதம் அடைமழைக் காலமென
உப்பும் உணவும் உரியிடை – வைப்பதும்
தப்பா வழக்க மது. ... 2

நனவில் கனவென நாள்மழை மேகம்
தினமும் இரவினில் திங்கள் – மனமே
வனமும் அழகே பழகு. ... 3

ஊழலில் மன்னவன் உன்மத்தன் மக்களே
கேழலும் தெய்வமே கீழ்களின் – நீழலே
ஏழையின் ஏற்றமோ பாழ். ... 4

வேர்விடும் மாமரம் வெந்தணல் கைக்கிளை
யார்முகம் என்றிலை தின்றிடும் – கூர்மனம்
பார்வையில் பாவையோ நோய். ... 5

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்
(ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

கேசவன் மேன்மைகள் தேசிகர் பேசினார் 
ஆசுடைக் கீழ்மையன் ஆக்கினேன் - நீசன்யான்
தேசுடை ஆசான்தாள் தூசு. ... 1

செழித்துக் கிளைத்திடும் செந்தமிழ்ச் சொற்கள் 
கொழித்து மிளிர்ந்திடும் கொப்பு - விழித்தேன்
இழிந்தேன் விழுவேன் இணை.. ... 2

சந்திர சூர்யரொடு செந்தீமுக் கண்ணாக 
நந்தாபம் நீக்கிடுவான் நான்மறை - அந்தமாம் 
சிம்ஹதாபிச் செம்பொருளே சீர். ... 3

கண்ணெனக் கொள்வாய் கருமமே கொள்ளாக்கால் 
எண்ணிலாத் துன்பே இலக்கெனப் - பன்னிடும்
எண்ணிலா நூற்பொருள் ஏல். ... 4

சுரங்களின் சேர்க்கையாம் சூழிருள் போது
அரனார் கழுத்தில் அணிசெய் - நிரலாம் 
இராக இராராகம் கம். ... 5

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
(ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவன்
எந்த நிலையிலும் இன்னுயிராய்த் தானிருந்து
நிந்தனை செய்வோர்க்கும் நீராக - வந்தருளி
விந்தைகள் செய்யு மிறை. ... 1

இயற்கை
காடுமே டெல்லாமும் கட்டாந் தரையாக்கி
வீடுயர்த்தி வானையே வீணாகச் - சாடுவது
கேடுவரச் செய்யுமே கேள். ... 2

உழவு
உழவுத் தொழிலும் உயர்வுற வேண்டி
கழனிகள் எல்லாம் கனியாய்ச் - செழிக்க
அழலாடி செய்வான் அருள். ... 3
(அழலாடி= சிவன்)

கணினி
விண்ணையும் மண்ணையும் விண்டா லிணைத்திடும்
மண்ணில் மயங்கிடும் மாந்தரின் - கண்களைக்
கண்ணியாய்க் கட்டும் பொறி. ... 4

காதல்
காதலுக்குத் தூண்டும் கயவர் தொடர்புகள்
சாத மறிந்தபின் தாவினால் - சாதலால்
பேதலிப்போ உற்றவர் பெட்பு. ... 5

[சாதம் = உண்மை; தா = வருத்தம்; பெட்பு  = ஆசை\

★★★
கவிஞர் திசேசு
(ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவி
வக்கிரங்கள் பல்கி வகைவகையாய் நாட்டினில்
அக்கிரமத் தோரணங்கள் ஆடுதம்மா - மிக்குயர்ந்து
தக்கோர்கள் வாழபலம் தா. ... 1

இயற்கை
மந்தியினம் குட்டியுடன் மாமரத்தில் தாவிநிதம்
வந்துவந்து செங்கனியில் வாய்வைத்துச் - சொந்தமுடன்
பந்தியிடும் காட்சிசுகந் தான். ... 2

உழவு
நீர்நிலையில் செங்கற்கள் நேர்ந்துகுடி ஏறுவதால்
ஏர்பூட்டிச் செல்வதற்கும் ஏதுநீரே - பார்மீதில்
கார்மேகக் கண்ணே கதி. ... 3

கணினி
எல்லாமே செய்யுமிது இம்மென்னும் முன்னாலே
நல்லோர்கை தீபமெனும் நற்கணினி - வல்லோர்க்கு
வல்லதாக வாய்த்த தது. ... 4

காதல்
சந்தனத்தில் வார்த்தெடுத்த சல்லாபச் சோலையவள்
எந்தேகக் கூட்டிலுறை ஏந்திழையாள் - வந்ததினால்
மந்தன்நான் ஆனேன் மகான். ... 5

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
(ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவன்
தேரேறி தெய்வம் தெருவில் வலம்வர
ஊரொன்று சேர்நாளாய் உற்சவம் - வேரோடித்
தீரா வினைகளுக்குத் தீர்வு.

இயற்கை (ஹைக்கூ பாணி)
இழைவண்ணம் எங்கும் இயற்கையில். நல்ல
மழைபெய்தே ஓய்ந்தது வானம். - குழையும்
மழைத்துளியில் சிக்கும் மலை.

உழவு
காராடும் வானம் கனிந்தே பொழிந்தால்தான்
ஏராடும் மண்ணில் எருதுகளின் - சீரோடிப்
போராடும் வாழ்வில் பொழில்.

கணினி
கணினியைப் போற்று கணினியைப் போற்று
பணிகளைச் செய்திடும் பாங்கில் - அணியாம்
மணித்துளியில் வேலையாம் மாண்பு.

காதல்
கண்ணிரண்டும் பேசவெழும் காதலில் பெற்றவர்
எண்ணம் அறிந்தே இறங்குவாய் - பெண்ணேவுன்
திண்ணத்தில் இல்லையோர் தீர்வு.

★★★★★

No comments:

Post a Comment