பாவிலக்கணம்: வெண்பா - 02

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி: பாவிலக்கணம்
ஆக்கியோன்: குருநாதன் ரமணி

சிந்தியல் வெண்பா இலக்கணமும் மரபும்
சிந்தியல் வெண்பா
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய 
.. நான்கு பாவகைகளில்
.. தனித்த, தூய இலக்கணம் கொண்டது வெண்பா.
.. இதனால் வெண்பாவிற்கு வெள்ளைப்பா, ஒண்பா
.. போன்ற பெயர்கள் உண்டு.

சிந்தியல் வெண்பா இலக்கணம்

* வெண்பாவின் பொதுவிலக்கணம் முழுதும்
.. சிந்தியல் வெண்பாவில் அமைய வேண்டும்.

* முதல் இரண்டு அடிகள் அளவடி (நாற்சீர்)
.. இரண்டாமடி சிந்தடி (முச்சீர்).

* சிந்தியல் வெண்பா வகைகள்
.. நேரிசைச் சிந்தியல் வெண்பா
.. இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

* நேரிசைச் சிந்தியல் வெண்பா என்பது 
.. நேரிசை வெண்பா இலக்கணத்தில் வரும்.
.. அதாவது,
.. ஒரு விகற்பம் அல்லது இரு விகற்பம்
.. இரண்டாம் அடியில் ஒரூஉ எதுகை பெற்ற தனிச்சொல்.
.. முதலடி, இரண்டாம் அடி, அதன் ஒரூஉ எதுகை
.. இவை மூன்றும் ஓரெதுகையாக அமையும்.

* நேரிசைச் சிந்தியல் வெண்பாவில்
.. ஒரு தனிச்சொல் மட்டுமே பயிலும்.
.. அது இரண்டாம் அடியில் பயிலும்.
.. அதற்கேற்ப,
.. மூன்றடியும் ஒரு விகற்பமாகவோ
.. முதலிரண்டடி ஓர் விகற்பம்
.. மூன்றாம் அடி இரண்டம் விகற்பம்
.. என்றோ அமையும்.
.. இரண்டு அடிகளில் தனிச்சொல் வந்தால்
.. எவ்வகை விகற்பமாயினும்
.. அது நேரிசை யாகாது
.. இன்னிசைச் சிந்தியல் வெண்பா வாகும்.

* இன்னிசைச் சிந்தியல் வெண்பா என்பது 
.. இன்னிசை வெண்பா இலக்கணத்தில் வரும்.
.. அதாவது,
.. நேரிசை வெண்பா இலக்கணம் அமையாது
.. ஒரு/இரு/பல விகற்பமாகத்
.. தனிச்சொல் பெற்றோ பெறாமலோ வரும்.

தனிச்சொல் பெற்றால்
.. அது இரண்டாம் அடியில் வந்தால்
.. சிந்தியல் வெண்பா மூன்று விகற்பமாக அமையும்.
.. (ஒரு/இரு விகற்பம், இரண்டாம் அடித் தனிச்சொல்
.. நேரிசை வெண்பா என்றறிக).
.. தனிச்சொல் முதலடியிலோ
.. (மூன்று விகற்பம் எனில்) இரண்டாம் அடியிலோ 
.. அல்லது இரண்டு அடிகளிலுமோ வரலாம்.

சிந்தியல் வெண்பா மரபு

* வெண்பா மரபுக் கூறுகள் யாவும்
.. சிந்தியல் வெண்பாவில் அமைதல் வேண்டும்.

* சிந்தியல் வெண்பா யாப்பில் சிறக்க
.. ஒரு விகற்பம் (மூன்றடிகளிலும் ஒரே எதுகை)
.. பொழிப்பு மோனை.
.. எதுகையின் சிறப்பு அடிகளில்
.. மோனையின் சிறப்பு சீர்களில்.

சிந்தியல் வெண்பா இலக்கியச் சான்றுகள்
நேரிசைச் சிந்தியல் வெண்பா

* ஒரு விகற்பம்
அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து
செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச் -- சிறந்தார்
சிறந்தமை ஆராய்ந்து கொண்டு.
--யா.கா.மே. 26

பாடிப் படித்துப் பயின்று பொருள்தெளிந்து
நாடி யுணர்ந்தொழுகும் நல்லவரைத் -- தேடியே
கூடி வணங்கு முலகு.
--கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90
★
* இரு விகற்பம்
நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு
சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே -- பொற்றேரான்
பாலைநல் வாயில் மகள்.
--யா.கா.மே. 26

படைக்கலம் ஏந்தாமற் பாரித்துப் போரை
நடத்தியவன் காந்தியெனும் நல்லான் -- அடற்கெதிரே
ஆரேநின் றாற்றுகிற் பார்.
--கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

* ஒரு விகற்பம், தனிச்சொல் இன்றி
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் 
கொங்கலத்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகளித்த லான்.
--இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 

கண்ணன் அடியே கருதி வணங்குபவர்
எண்ணமெலாம் எண்ணியவா றீடேறும் என்பதனைத்
திண்ணமாய் நெஞ்சே அறி.
--கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90
★
* இரு விகற்பம், தனிச்சொல் இன்றி
சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை.
--யா.கா.மே. 26

சொல்லிற்குள் ளேபொருளில் தோய்ந்துணர்வி லேயூறி
நல்லசுவை கண்டுவகை நாட்டமுடை யோர்பாவின்
இன்பமெலாம் காண்பர் இனிது.
--கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90
★
* பல (மூன்று) விகற்பம், தனிச்சொல் இன்றி
தெய்வந் தெளிந்தோர் சிறிதும் பிறர்க்கின்னல்
சூழாது நன்மைசெய்யும் தூயோர் அறமொன்றே
ஆற்றுவோர் நல்லோர் அறி.
--கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.91
★
* முதலடியில் தனிச்சொல்
முன்புவெண் பாவுரைப்பேன் முப்பாவும் - பின்புரைப்பேன்
பூவிற் சிறந்தது தாமரை பொன்மயிலே!
பாவிற் சிறந்ததுவெண் பா!
--பாரதிதாசன்
★
* முதல் இரண்டடிகளிலும் தனிச்சொல்
முல்லை முறுவலித்துக் காட்டின - மெல்லவே
சேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற - போயினார்
திண்டேர் வரவுரைக்கும் கார்.
--யா.கா.மே. 26
★
புனைவுச் சான்று
இன்னிசைச் சிந்தியல் மட்டும் வெண்பா
இரண்டம் அடியில் தனிச்சொல், மூன்று விகற்பம்

கண்டதும் காதலாம் கன்னியுடன் காளை
எதிர்த்தனர் பெற்றோர் இருவர் - மதியாதார்
வீட்டைத் துறந்த மிடுக்கு.

★★★

No comments:

Post a Comment