Sunday, March 31, 2019

பயிலிழை சிவெ.02. இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

02. சிந்தியல் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை சிவெ.02. இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/324583138272224/
நினைவிற் கொணர
ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பாவில்
.. மூன்று அடிகளுக்கும் ஒரே எதுகை (ஒரு விகற்பம்).
.. இரண்டாம் அடியில் சீர்கள் 1-4-இல் வரும்
.. ஒரூஉ எதுகை பெற்ற தனிச்சொல்.
.. அடிகளில் பொழிப்பு மோனை அமைதல் மரபு.

பயிலிழை சிவெ.02. இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: நேரிசைச் சிந்தியல் வெண்பா

விரும்பும் பாடுபொருள்களில்
.. பொருளுக் கொன்றாக
.. மொத்தம் ஐந்து (5)
.. இருவிகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா
.. புனைந்தெழுதுவோம்.

தொகுப்பு
23/11/2018 இரவு வரை வரும் பதிவுகளில்
.. தேர்வுபெற்றவை தொகுக்கப்பட்டுக்
.. குழுமத்தில் பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
(இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவன்
கண்ணால் கடவுளைக் கற்சிலை யிற்கண்டு
பண்ணால் துதித்துப் பரவுவோம் - எண்ணம்
அகன்றே மனங்கொள்ளும் அன்பு.

இயற்கை
வான்மழை பெய்ய வளம்சூழ் மரத்திலே
தேன்மொழிப் பண்ணாய்ச் செவியுறும் - கான்பொழில்
மலர்களில் தோயும் மனம்.
[கான் = மணம்]

உழவு
நீர்க்கால் நிலைத்தே நிறைத்த வயலில்
ஏர்க்கால் ஓட விளைநிலம் - தேர்க்கால்
விரைசாலை யாகும் வெறுப்பு.
[தேர் = இந்நாளைய மோட்டார் வண்டிகள்]

கணினி
எழுத்தெல்லாம் எண்ணாக்கி எண்ணியதைச் செய்யும்
விழுமப் பொறியாம் வியப்பு - பழுதுற்றால்
பதைபதைத்தே நிற்கும் பணி.

காதல்
அன்பே அடித்தளமாய்க் காதலாம் சூழலில்
உன்னத மான உலகமை - நன்மையாம்
காண்டேகர் சொன்ன கருத்து.

[வி.எஸ்.காண்டேகர்: ஞானபீட விருது பெற்ற 
.. புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர். 
.. இவரது கதைகள் மொழிபெயர்க்கப் பட்டுத்
.. தமிழ்க் கதையுலகில் விரும்பிப்
.. படிக்கப்பட்டன.]

--குருநாதன் ரமணி

★★★★★

No comments:

Post a Comment