Sunday, March 31, 2019

பயிலிழை சிவெ.03. தனிச்சொல் அற்ற ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா: தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

02. சிந்தியல் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை சிவெ.03. தனிச்சொல் அற்ற ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா: தொகுப்பு

(தனிச்சொல் அற்ற ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கவிஞர் அரங்க இரகுநாதன்
காதல்
காதல் கனிந்து கருத்தில் நிலைத்திடச் 
சாதல் அகந்தை; சரிநிகர் சிந்தனை; 
மோதல் இலாத முனைப்பு. ... 1

வானம்
வருந்தும் உளத்தை வருடும் வகையில் 
மருந்தாய் இருந்து மகிழ்வுறச் செய்தே 
விருந்தாய் விளங்கும் வியன். ... 2

சுற்றம்
உற்றவர் சுற்றமும் ஒல்கிடாப் பற்றுடைப் 
பெற்றவர் நண்பரும் பேறெனத் தேரிடின் 
பெற்றியே வையப் பிறப்பு. ... 3

நட்பு
நயந்துநாம் பேண நலந்தரும் நட்பு 
பயன்தரும் சுல்வி பரிவளிக்கும் சுற்றம் 
வயப்படும் வாழ்வில் வளம். ... 4

கற்பு
கற்புடைப் பெண்டிர் களிதரும் மக்களும்
பொற்புடைச் சான்றோர் பொறுப்புடன் ஆள்வோரும் 
கற்படை ஒப்பர் கருது. ... 5

★★★
பாவலர் சீனி பழனி
புயல்
காற்றும் மழையும் கடிதென வந்திடக்
கூற்றுவ னாகக் குடிசை மரங்களும்
சீற்றத்தில் சிக்கின காண். ... 1

வறுமை
நதியில் இருந்தது நாளும் குறையா
நிதிதரு மீனுடன் நித்திலக் குப்பை
பதியில் வறுமை பகர். ... 2

கணினி.
காலக் கணினி கனவெனக் கைகளில்
நூலும் நொடியில் நுவலாக் கனிவுடன்
வேலை எளிதே இனி. ... 3

எழுத்தாணி. 
ஓலைச் சுவடி ஒருகை சுமந்திட
ஆலைக் கரும்பாய் மறுகையி லேந்துவ
காலைக் கதிரெழுத்தா ணி. ... 4

வீடு
அன்னைமகிழ் தந்தையுடன் ஆசைமிகு பாசமழை
கன்ன(ல்)மொழி கைப்பிள்ளை காதல் மடவார்கள்
என்னவென வேண்டுமகிழ் வீடு. ... 5

★★★
கவிஞர் திசேசு 

பேரறியாப் பித்தனெனைப் பேரருளால் பேசவைத்தே
ஊரறியச் செய்துவிட்ட ஓங்கார மீனாவுன்
சீரறியப் பாடேனோ நான். ... 1

நன்றியிலா நண்பர்கள் நல்லோர்போல் கூடிடுவார்
கொன்றிடுவார் வார்த்தைகளால் கோமகனாய் இங்கிவரை
மன்றங்கள் வாழ்த்துவதேன் சொல். ... 2

சோலைக்குள் வந்தநிலா சொன்னதெலாம் கேட்டபின்னர்
பாலைக்குள் நீரூற்றுப் போலாகிப் பாடலானேன்
காலைக்குள் கண்ட கனா. ... 3

வயல்வெளியில் பாடுபட்டும் வாட்டமுறும் கையில்
வயப்படாமல் வாழ்வின் வசந்தங்கள் போகத்
தயக்கமேன் வெல்வோம் தடை. ... 4

தூக்கமின்றிச் சோம்பலின்றி ஓடுகின்ற சிற்றெறும்பை
ஏக்கமுடன் பார்த்துமனம் எண்ணுவதை சொல்லுடுத்திப்
பாக்களாக்கிப் பாடாதார் யார்? ... 5

கணினியின் மூளையைக் கண்டுவக்கும் மாந்தர்
கணினியைக் கண்டுணர்ந்த மூளைபடைத் தானை
கணியாரோ மேலென் றதற்கு. ... 6

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
(தனிச்சொல் அற்ற ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உணவு
வற்றல் குழம்புடன் வட்டில் சுடுசோறு
குற்றிக் கரம்பிசைந்தே கொண்டோர் கவளத்தைப்
பற்சுவைக்கத் தீரும் பசி.

கவிதை
எண்ணம் மொழியாக ஏதோ குறைதெரியும்
வண்ணம் ஒலியும் வளம்பொருளும் கொண்டாலும்
நண்ணியது காணா நலிவு.

காலம்
நேற்றெல்லம் உள்ளே நினைவாகும் இன்றெனத்
தேற்றுவதும் போமே தெளியாதே நாளையும்
காற்றாய்ப் பறந்திடும் கால்.

குடும்பம்
கூட்டுக் குடும்பம் குலைத்தே இருவரும்தம்
வீட்டுக் குடும்பமாய் வெல்லப் பணத்தாசை
ஆட்டு குடும்பமென் றாம்.

பேச்சு
மூச்சைத் தடைசெய் மொழியதுவே வாயுறும்
பேச்சாகும் அஃது பெருகினால் உள்ளத்தின் 
வீச்சைக் குறைக்கும் விழல்.

★★★★★

No comments:

Post a Comment