Sunday, March 24, 2019

பயிலிழை குவெ.21. மிறைக்கவி வகைக்குறள்: பிந்துமதி தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.21. மிறைக்கவி வகைக்குறள்: பிந்துமதி தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/333937354003469/
கவிஞர் அரங்க இரகுநாதன்
(மிறைப்பா: பிந்துமதிக் குறள் வெண்பா)

செய்யென்றெண் செஞ்சொல்லெண் பொற்பொன்றெண் மெய்யொன்றெண் 
பொய்ச்சொல்லென் வெஞ்சொல்லென் எண். ... 1

எண்ணுங்கள் நம்வாழ்வின் துன்பங்கள் வெல்லுஞ்சொல் 
திண்ணம்நம் கண்ணன்தான் தேர். ... 2

வண்டொக்கும் பூச்சிக்கோர் வண்ணத்தைத் தந்தின்பம் 
மண்ணுக்குக் கூட்டும்வண் மால். ... 3

விண்ணுக்கும் மண்ணுக்கும் விட்டுய்வைத் தந்தின்பப் 
பண்ணாக்கம் செய்கின்றான் பார். ... 4

பற்றற்றான் பற்றும்தாள் பற்றென்றார் மற்றெல்லாம்
பற்றில்லாச் சுற்றங்கள் தான். ... 5

கற்பென்னும் திண்மைக்கோர் காப்பென்றும் தந்திட்டார் 
பொற்பென்றும் போற்றல்நன் றாம். ... 6

★★★
கவிஞர் திசேசு 
(மிறைப்பா: பிந்துமதிக் குறள் வெண்பா)

நின்றென்றும் காப்பாற்றும் மெய்யன்பர் தம்மில்லம்
குன்றொன்றும் கந்தப்பன் வேல். ... 1

பொட்டிட்டுச் சொல்லெல்லாம் பூங்காற்றுப் போற்கொஞ்சித்
தொட்டென்றன் பாட்டுக்குள் சீர். ... 2

பெண்டாட்டம் போட்டார்தம் கொண்டாட்டம் போய்முற்றித்
திண்டாட்டம் வந்தூட்டும் காண். ... 3

மூப்புற்றோர் நோய்கொள்ளச் சொந்தங்கள் வஞ்சித்தால்
தீப்புண்ணில் வேல்பாய்தல் போல். ... 4

யாப்பொன்றும் பாக்கள்தான் தேன்சொட்டத் தித்திக்கும்
காப்பிட்டால் தப்பென்பார் யார். ... 5

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
(மிறைப்பா: பிந்துமதிக் குறள் வெண்பா)

இறைவன்
எண்ணத்தில் நின்றாள்வார் துன்பத்தைக் கொண்டாள்வார்
கண்ணுக்குள் கால்வைத்தோம் காண். ... 1

கல்லுக்குள் மண்ணுக்குள் காட்டுக்குள் வீட்டுக்குள்
சொல்லுக்குள் நின்றாள்வார் யார்? ... 2

காளி
பொல்லாப்பெண் நின்றாள்வாள் துல்லம்செய் பெண்ணாள்காண்
தில்லம்கொள் தெய்வத்தாய் தேர். ... 3
[துல்லம் = பேரொலி, தில்லம் = காடு]

மின்சாரம்
மின்னல்கண் பொன்தேட்டில் மின்சத்தைக் கண்டுற்றார்
நன்றென்றோம் கொண்டாள்வோம் நாம். ... 4

செல்வம்
இக்கட்டில் திக்கற்றார் நெக்குண்டார் துன்புற்றார்
சிக்குண்டார் செல்வத்தின் சீர்! ... 5

சமையல்
உப்பென்றேன் சாம்பார்தான் கல்லென்றேன் சாப்பாட்டில்!
தப்பித்தேன் செய்தாள்நம் தாய்! ... 6

குடும்பம்
இன்பத்தைக் கொண்டோம்நாம் துன்பத்தைத் தூள்செய்தோம்
சென்மத்தில் கட்டுண்ணும் சேய். ... 7

செய்யுள்
கல்லுக்குள் நந்தெய்வம் கட்டுண்ணும் நம்செய்யுள்
சொல்லுக்குள் கட்டுண்ணும் சூழ். ... 8

தோட்டம்
பொன்வண்டார் தோட்டத்தில் பூந்தென்றல் கொண்டுள்ளம்
தன்னெண்ணம் விட்டுப்போம் சால். ... 9

காதல்
கண்ணுக்குள் பெண்வைத்தேன் கட்டுக்குள் கண்வைத்தேன்
புண்தந்தாள் நெஞ்சுக்குள் போர். ... 10

★★★★★

No comments:

Post a Comment