சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
மரபில் பாவகைகள் பாவினங்கள் அனைத்தும் புனையரங்கம்
முகநூல் குழும வலைப்பூ
Facebook group address: https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/
காப்புச் செய்யுள் (நேரிசை வெண்பா) நால்வகைப் பாக்களுடன் நானாவாம் பாவினமும் ஏல்வகை யாகும் இலக்கணம் - சால்வகையாய்க் கற்றுப் புலமைக் களிப்பேறிச் சாதிக்கப் பற்றுவோம் தெய்வப் பதம். சடுதியில் மரபுகவி பயிலரங்கம்: வலைப்பூ (ஒருவிகற்ப நேரிசை வெண்பா) செந்தமிழ்ப் பாட்டுகள் செய்யுளாய் ஊற்றெடுக்க அந்தமில் யாப்பை அறிந்தபின் - சொந்தமாய்ப் பற்பலவாம் யாப்பினில் பாக்கள் புனைந்துநாம் கற்கும் பயிலரங் கம். நிறுவனர் அறிமுகம்என் பெயர் குருநாதன் ரமணி. சில ஆண்டுகளாக மரபில் நான் எழுதிவரும் கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது என் பேறு.
சென்ற வருடம் மே மாதம் 'சடுதியில் யாப்பு' என்ற முகநூல் குழுமம் தொடங்கி அடிப்படை யாப்பிலக்கணம் சடுதியில் அறிந்து மரபில் பாக்கள் புனையப் பயிற்றுவித்தேன். இக்குழுமத்தில் உறுப்பினர்கள் அகவற்பா, குறள், அளவியல் வெண்பா, தரவு கொச்சகக் கலிப்பா ஆகிய பாவகைகள்; அறுசீர், எழுசீர், எண்சீர் ஆசிரிய விருத்தம், குறள் வெண்செந்துறை, வெளிவிருத்தம், கலித்துறை, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம் ஆகிய பாவினங்கள்; இவற்றின் இலக்கணம் கற்றுப் பயிலரங்கப் பயிற்சிகளில் பங்கேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக, யாப்பறிந்து தொடக்க நிலையில் உள்ள கவிஞர்கள் நால்விதப் பாவகைகள், அவற்றின் பாவினங்கள் அனைத்தும் பயிலவும், யாப்பறிந்த பாவலர்கள் தம் திறனைப் பிறர் அறியச் செய்து, பேணி வளர்த்துக்கொள்ளவும், 'சடுதியில் மரபுகவி' என்று பெயரிட்டு அடியேன் தொடங்கிய முகநூல் குழுமம் வெற்றிகரமாகத் தொடர்கின்றது. இந்த வலைப்பூ அக்குழுமத்தின் பயிலரங்க இழைகளில் நானும் மற்ற பாவலர்களும் புனைந்து பதிந்த மரபுகவிதைகளின் தொகுப்பாகும்.
இன்னமும் அடியேன் மாணவனாக இருந்து, ஆசிரியர்கள் கவிமாமணி இலந்தை இராமசாமி, பேராசிரியர் பசுபதி, மரபுமணிப் பாவலர் வரதராசன், பாட்டரசர் கி.பாரதிதாசன் போன்றோர் குழுமங்களில் சேர்ந்து கற்றுப் பயிற்சிகள் செய்துவருபவன். இந்நிலையில்
கற்கச் சிறந்தவழி கற்பித்தல் என்றுசொல்வர் கற்கையில் கற்பிக்கும் கற்பனை - உற்றெதெனில் கற்பதில் நுண்மைகள் கண்டே விரிக்குமுளம் விற்பனம் கொள்ளும் மிளிர்ந்து. என்ற எண்ணத்தில் நாம் நம் முகநூல் குழுமத்தைத் தொடர்வோமாக! ★★★★★
No comments:
Post a Comment