Sunday, March 24, 2019

பயிலிழை குவெ.19. அலங்காரக் குறள்: தற்குறிப்பேற்ற அணி தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.19. அலங்காரக் குறள்: தற்குறிப்பேற்ற அணி தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/328981151165756/
கவிஞர் திசேசு
பெயர்பொருள் தற்குறிப்பேற்றணி
(குறள் வெண்பா)

வாராதே பின்னால் வனிதைதன் முந்தானை
கூறும் வலமிடம சைந்து. ... 1

சாலையைச் சீராக்க வீசுவாள் தேய்த்தபடி
காளையர் பேருந்தில் காண். ... 2

அயல்நாடு செல்லுதோ ஐம்பொற் சிலைகள்
கயமைக்கு ஈந்ததால் காப்பு. ... 3

ஆற்றுமணல் அள்ளுகிறார் ஆழப் படுத்துவதற்கு
தூற்றுவது ஞாயமா சொல். ... 4

பிறப்பு மிறப்புமிங்கு பேருலகில் ஒன்றாம்
சிறப்பிதைக்காட் டுஞ்செங் கதிர். ... 5

பெயராப்பொருள் தற்குறிப்பேற்றணி
(குறள் வெண்பா)

கூப்பிய கைகளாய் கோபுரங்கள் நிற்குமெழில்
காப்பில் வாழும் கலை. ... 6

குருபலன் வேண்டியே கொன்றையும் பூக்க
மரமெலாம் மஞ்சள் மலர். ... 7

தோட்டத்துப் பூவெல்லாம் தோகை முகங்காண
கூட்டமாய் நிற்கும் மலர்ந்து. ... 8

கண்ணின் படபடப்பு காரிகை காட்டுகின்ற
வண்ணவர வேற்பு மடல். ... 9

குழற்கற்றை காதோரம் கொஞ்சிநிதம் பேசும்
அழகுமயில் வாழ்வே அவன். ... 10

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
பெயர்பொருள் தற்கூறிப்பேற்றணி
(குறள் வெண்பா)

மாலைக் கதிரின் மயக்கமேன் வாள்மங்கை
வாலைக் குமரி நகை. ... 1

பார்வையில் பொங்கிடும் பாரியாள் கண்ணீரைக்
கார்முகில் கண்டு திகைப்பு. ... 2

காலில் சகடம்தான் கட்டினாற்போல் ஓட்டமேன்?
வேலிதாண்ட விண்ணப்ப மோ! ... 3

வேலையின்றிச் சுற்றிவரும் வீணோரை எள்ளுமே
நூலை அரித்திடும் செல். ... 4

சில்லென வீசிடும் தென்றல் உணர்த்திடும்
மெல்லிய லாள்ஸ்பரி சம். ... 5

பெயராப்பொருள் தற்குறிப்பேற்ற அணி
(குறள் வெண்பா)

மழலைச் சிரிப்பில் மகிழ்விக்கும் மற்றோர் 
குழவியாய்ப் பூச்சர மே. ... 6

மனிதன் சுரண்டும் மலைதனைப் பார்த்து
தனியே நகைக்கும் எலி. ... 7

அலைவர நாணி அமிழ்ந்தெழும் நாணல்
தலைப்பவிழ நாணாநங் கை. ... 8

உழலும் மனதை உறவும் ஒதுக்க
நிழல்தேடி வாடும் சவுக்கு. ... 9

என்றும் தளர்வுறா என்மனம் என்வீடோ
இன்பதுன்பில் போன திடிந் து. ... 10

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
பெயர்பொருள் தற்குறிப்பேற்றணி
(குறள் வெண்பா)
(அசையும் பொருள்மேல் தற்குறிப்பேற்றும் அணி)

அல்லியைக் கண்ட அழுக்காற்றில் வெண்மதி-மங்
குல்பின் மறைந்தொளியும் கூத்து! ... 1

மழலை விழிக்க மனமகிழ்செஞ் சோதி
தழுவும் கரங்கள் தளிர். ... 2

காற்றைத் துரத்தும் கடிமலர் வண்டொன்று
சேற்றில் நனையும் சிறிது! ... 3

நெற்களப் பொற்குவியல் நீள்பிரி யாய்வைக்கோல்
பொற்கரம் தூற்றும் பொலிவு. ... 4

வான்மலர் சோதி வழியிலோர் மேகம்பின்
தான்மறையும் கொஞ்சம் தளர்ந்து. ... 5

பெயராப்பொருள் தற்குறிப்பேற்றணி
(குறள் வெண்பா)
(அசையாப் பொருள்மேல் தற்குறிப்பேற்றும் அணி)

மரங்கள்தம் கையேந்தி வான்மழை வேண்டும்
பெருமூச்சில் வானின் பெயல். ... 6

கொடியிடை பூக்கள் குரல்கொடுக்க வந்தே
துடியிடை ஆட்டும் சுரும்பு. ... 7

சன்னலொன்று கண்விழிக்கச் சட்டெனக் கண்பட்ட
கன்னிமுகம் உள்ளக் களிப்பு. ... 8

பனிப்போர்வை யில்தூங்கும் பட்டணத்து வீடு
தனியாய் விழித்திருக்கும் நாய். ... 9

பொன்னிற மாலைப் பொலிவினில் கோபுரம்
நின்றெழில் காணும் நிழல். ... 10

★★★★★

No comments:

Post a Comment