Sunday, March 24, 2019

பயிலிழை குவெ.20. மிறைக்கவி வகைக்குறள்: நிரோட்டியம்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.20. மிறைக்கவி வகைக்குறள்: நிரோட்டியம்

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/307552939975244/

சித்திரம் இல்லாத பற்பல 
.. மிறைக்கவி வகைகளில் ஒன்றான நிரோட்டியம்
.. பண்டை வழக்கில் நிரோட்டம், நிரோட்டகம், நிரோட்டியம்
.. என்னும் பெயர்களில் வழங்கப்பட்டு வந்தது.
.. இன்றைய வழக்கில் இதை இதழகல் என்பர்.

ஓஷ்டம் என்ற வடமொழிச் சொல்லுக்கு உதடு என்று பொருள். 
.. நிரோஷ்டம் என்றால் உதடு ஒட்டாமலோ, குவியாமலோ வருவது. 
.. இவ்வாறு இதழ்கள் ஒட்டாமல், குவியாமல் வரும்
.. எழுத்துகள் அமையப் பாடுவது நிரோட்டியம் 
.. எனப்படும் சொற்றிற மிறைக்கவி வகையாகும்.

உஊஒஓ ஔபம வ‍இவற் றியைபு
சேரா நிரோட்டத் திறத்து.
--என்பது தண்டியலங்கார நூற்பா.

அதாவது, நிரோட்டியத்தில்
.. கீழ்க்காணும் எழுத்துகள் வருதல் கூடா.
..
.. 005 உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்கள்
.. 003 ப்,ம்,வ் மெய்கள்
.. 036 ப,ம,வ உயிரெழுத்து வருக்கம்
.. 075 ப்,ம்,வ் நீக்கி மீதம் 15 மெய்கள்  உ,ஊ,ஒ,ஓ,ஔ
.. ----------
.. 119 ஆகும் மொத்த எழுத்துகள்
.. ----------

நிரோட்டியம் இலக்கியச் சான்று
(நேரிசை வெண்பா)

சீலத்தால் ஞானத்தால் தேற்றத்தால் சென்றகன்ற
காலத்தால் ஆராத காதலால் - ஞாலத்தார்
இச்சிக்கச் சாலச் சிறந்தடி யேற்கினிதாங்
கச்சிக்கச் சாலைக் கனி.
--தண்டியலங்காரம்

***
திருக்குறள் நிரோட்டியச் சான்றுகள்
(குறள் வெண்பா)

யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். ... 341

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே 
செய்தற் கரிய செயல். ... 489

நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.20. மிறைக்கவி வகைக்குறள்: நிரோட்டியம்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: மிறைக்கவிக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. ஒரு விகற்பப் பொழிப்பு மோனைக் குறளாக
.. ஐந்து (5) நிரோட்டிய (இதழகல்)
.. குறள் வெண்பாக்கள் புனைந்தெழுதுவோம்.

தொகுப்பு
12/10/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****

அடியேன் பங்காக
(மிறைப்பா: நிரோட்டியக் குறள் வெண்பா)

சர்பத்
கடைதன்னில் தண்டேன் கனிச்சா றிறக்க
நடையிற் செறிந்த நசை. ... 1

கழுதை
காள்காள் எனநால் கரங்கள் கதறலில்!
ஆளில்லாச் சாலை யனல்! ... 2
[கரம் = கழுதை]

சீட்டு
சீட்டாட்டக் கச்சேரித் திண்ணையினி யில்லையென்றாள்
கேட்ட கணத்தில் கிலி. ... 3

கன்னி
கன்னி கலியாணக் காலங் கடந்தனள்
தன்நிலை யானாள் தனி. ... 4

கதகளி
இதழியை யாதே யெழுதினாள் நெஞ்சில்
கதகளி யாட்டக் கனி. ... 5

--குருநாதன் ரமணி

★★★★★

No comments:

Post a Comment