சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
02. சிந்தியல் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை சிவெ.02. இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா: தொகுப்பு
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
(இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)
இறைவன்
பித்தன் சுடலையாடி பிஞ்ஞகன் ஆலுண்டோன்
அத்தனென பக்தர்தம் அன்பினால் - சித்தத்தில்
சீவனெனத் தங்கும் சிவன். ... 1
இயற்கை
கருமேகம் சூழக் களிப்பு மிகுந்து
பெருகி மழைவரல் பேறாய்க் - கருதி
குடையெடுக்கக் கூம்பும் குளிர். ... 2
உழவர்
பெய்தாலும் பொய்த்தாலும் பேரழி வில்வாழ்வு
நெய்தலும் பாலையாயின் நெஞ்சத்தில் - குய்யமின்றி
வெள்ளை மனத்துடன் மெய். ... 3
(குய்யம் = வஞ்சம்)
கணினி
விழிபிதுங்கிப் போனேன் விபரமறி யாது
இழிவாய் உணர்ந்து இதயம் - கிழியக்
கணினிதானே காரணமாச் சே! ... 4
காதல்
இருமனம் ஒன்றி இருப்பதே காதல்
ஒருமனம் சற்றே ஒதுங்கி - இருப்பின்
துவளும் மனத்தில் துயர். ... 5
★★★
கவிஞர் திசேசு
(இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)
இறைவி
கையில் கிளியோடு கண்ணில் ஒளியோடு
வையம் புரந்திடும் மீனம்மா- மைந்தர்க்குத்
தாயன்றித் தக்கதுணை யார்? ... 1
உழவு
அருகியும் துன்பம் பெருகியும் துன்பம்
பெருந்துயர் பெற்றனர் நீரால் - முருகா
விவசாயம் ஆவதோ வீண். ... 2
இயற்கை
பிள்ளையணில் ஓடுமதன் பின்தொடர்ந்து அன்னையணில்
துள்ளியோட அங்குமிங்கும் தொங்குகிளை - கொள்ளையெழில்
கொண்டதெங்கள் கொய்யா மரம். ... 3
கணினி
மடியில் கிடக்கும் மனதில் நினைக்க
நொடியில் அளிக்கும் நியமம் - கடவுளாய்
மாறுதோ மாக்கணினி தான். ... 4
காதல்
தஞ்சமென வந்தயென்றன் தங்கமயில் நின்னைநானும்
கொஞ்சுதற்கும் என்னதடை கோமளமே - அஞசுகத்தாய்க்
காலடியில் அச்சமில்லை காண். ... 5
★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்
(இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)
இறை
அணுக்கத் திருந்தே அவன்தாள் பணிய
துணுக்குற் றொழியும் துயர்கள் - பணுகந்து
பாவலர் போற்றும் பரம். ... 1
நெருங்க நெருங்கநம் நெஞ்சம் நெகிழும்
மருங்கில் மலராய் மறுவில் - தரங்கம்
உதித்த தளிராம் உயர்வு. ... 2
சுரும்பாய் இசைக்கும் சுவையார் சுரங்கள்
அரும்பும் அனையவள் அந்தாள் - துரும்பாய்
இகத்தே இருத்தலெனக் கின்பு. ... 3
★★★
கவிஞர் குருநாதன் ரமணி
(இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா)
இறைவன்
கண்ணால் கடவுளைக் கற்சிலை யிற்கண்டு
பண்ணால் துதித்துப் பரவுவோம் - எண்ணம்
அகன்றே மனங்கொள்ளும் அன்பு.
இயற்கை
வான்மழை பெய்ய வளம்சூழ் மரத்திலே
தேன்மொழிப் பண்ணாய்ச் செவியுறும் - கான்பொழில்
மலர்களில் தோயும் மனம்.
[கான் = மணம்]
உழவு
நீர்க்கால் நிலைத்தே நிறைத்த வயலில்
ஏர்க்கால் ஓட விளைநிலம் - தேர்க்கால்
விரைசாலை யாகும் வெறுப்பு.
[தேர் = இந்நாளைய மோட்டார் வண்டிகள்]
கணினி
எழுத்தெல்லாம் எண்ணாக்கி எண்ணியதைச் செய்யும்
விழுமப் பொறியாம் வியப்பு - பழுதுற்றால்
பதைபதைத்தே நிற்கும் பணி.
காதல்
அன்பே அடித்தளமாய்க் காதலாம் சூழலில்
உன்னத மான உலகமை - நன்மையாம்
காண்டேகர் சொன்ன கருத்து.
[வி.எஸ்.காண்டேகர்: ஞானபீட விருது பெற்ற
.. புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர்.
.. இவரது கதைகள் மொழிபெயர்க்கப் பட்டுத்
.. தமிழ்க் கதையுலகில் விரும்பிப்
.. படிக்கப்பட்டன.]
★★★★★
No comments:
Post a Comment