Sunday, March 24, 2019

பயிலிழை குவெ.21. மிறைக்கவி வகைக்குறள்: பிந்துமதி

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.21. மிறைக்கவி வகைக்குறள்: பிந்துமதி

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/313098056087399/

சித்திரம் இல்லாத பற்பல 
.. மிறைக்கவி வகைகளில் ஒன்றான பிந்துமதி வெண்பா

இக்காலத்தில் ஒவ்வொரு அசையிலும் அடுத்தடுத்து 
.. ஒற்று வரும் தேமாங்காய்ச் சீர்களால் இயன்று 
.. ஒற்று வரும் நாள் வாய்பாட்டில் முடிகிறது.

முற்காலத்தில்
.. எகர ஒகரங்கள் தலையில் 
.. புள்ளிவைத்தே எழுதப் பட்டன.
.. இதனால் பிந்துமதிச் செய்யுள் தொன்மை வழக்கில்,  
.. எகர ஒகரங்களும் ஒற்றெழுத்துகளும் கலந்து வருவதாக, 
.. அதாவது வரும் எழுத்துகள் எல்லாம் 
.. ஒற்றெழுத்துகளாகச் செய்யப்பட்டன.

இந்தப் பயிலிழையில் நாம் பிந்துமதியின்
.. இன்றைய வழக்கில் குறள் வெண்பாக்கள் புனைவோம்.

***
இன்றைய வழக்கு பிந்துமதி வெண்பா விதிகள்
1. ஈற்றுச் சீர் தவிர்த்து அனித்தும் தேமாங்காய்ச் சீர்கள்.

2. தேமாங்காய்ச் சீர்களின் ஒவ்வோர் அசையும் 
.. ஒற்றெழுத்தில் முடியும் (பொன்வண்ணம் என்பதுபோல்).
.. இங்ஙனம் அடுத்தடுத்த எழுத்துகள் ஒற்றாக வரும்.

3. இரண்டு ஒற்றுகள் தொடர்ந்து வரலாலாது.
.. (கண்டாய்ந்தார், மண்பார்த்தாள் என்பனபோல்).

4. ஐகாரக் குறுக்கம் போன்றவற்றால் உச்சரிக்கப்படும்
.. ஒற்றுகள் வரலாகாது (கை (கய்) தந்தார் என்பதுபோல்)

5. காய்ச்சீர்களின் ஈற்றசை ஒற்று வரும் சீருடன் 
.. சந்தி சேரும்போது மறைந்துவிட லாகாது.
.. (என்னென்பேன் என்னுள்ளம் => என்னென்பே னென்னுள்ளம் என்று ஒற்று மறையும்).

6. மகரக் குறுக்கத்திலும் ஒற்று மறையும் வாய்ப்புண்டு.
.. (பொன்தேட்டம் மண்ணாக்கும் => பொன்தேட்ட மண்ணாக்கும் என்றாகும்.)

7. ஈற்றுச்சீரும் ஒற்றில் முடியும் 
.. நாள் வாய்பாட்டில் அமையும் (சொல், தேன் என்பனபோல்).

*****
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.21. மிறைக்கவி வகைக்குறள்: பிந்துமதி
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: மிறைக்கவிக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. ஒரு விகற்பக் குறளாக 
.. (பொழிப்பு மோனை கட்டாயம் இல்லை)
.. ஐந்து (5) இன்றைய வழக்கு பிந்துமதிக்
.. குறள் வெண்பாக்கள் புனைந்தெழுதுவோம்.

இன்றைய வழக்கு பிந்துமதி விதிகள் மேலே.

தொகுப்பு
பயிலிழை வெளியான நாள் முதல்
.. இரண்டு வாரங்கள் வரை வரும்
.. பதிவுகளில் தேர்வு பெற்றைவை
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
(மிறைப்பா: பிந்துமதிக் குறள் வெண்பா)

இறைவன்
எண்ணத்தில் நின்றாள்வார் துன்பத்தைக் கொண்டாள்வார்
கண்ணுக்குள் கால்வைத்தோம் காண். ... 1

கல்லுக்குள் மண்ணுக்குள் காட்டுக்குள் வீட்டுக்குள்
சொல்லுக்குள் நின்றாள்வார் யார்? ... 2

காளி
பொல்லாப்பெண் நின்றாள்வாள் துல்லம்செய் பெண்ணாள்காண்
தில்லம்கொள் தெய்வத்தாய் தேர். ... 3
[துல்லம் = பேரொலி, தில்லம் = காடு]

மின்சாரம்
மின்னல்கண் பொன்தேட்டில் மின்சத்தைக் கண்டுற்றார்
நன்றென்றோம் கொண்டாள்வோம் நாம். ... 4

[முன்னர் எழுதியது:
மின்னல்கண் பொன்தேட்டம் மின்சத்தைக் கண்டாய்ந்தார்
நன்றென்றோம் துய்த்தாள்வோம் நாம்.

கண்டாய்ந்தார், துய்த்தாள்வோம் => தொடர்ந்து இரு ஒற்றுகள் கூடாது;
பொன்தேட்டம் மின்சத்தைக் => மகரக் குறுக்கத்தில் ஒற்று மறையும்.]

செல்வம்
இக்கட்டில் திக்கற்றார் நெக்குண்டார் துன்புற்றார்
சிக்குண்டார் செல்வத்தின் சீர்! ... 5

சமையல்
உப்பென்றேன் சாம்பார்தான் கல்லென்றேன் சாப்பாட்டில்!
தப்பித்தேன் செய்தாள்நம் தாய்! ... 6

குடும்பம்
இன்பத்தைக் கொண்டோம்நாம் துன்பத்தைத் தூள்செய்தோம்
சென்மத்தில் கட்டுண்ணும் சேய். ... 7

செய்யுள்
கல்லுக்குள் நந்தெய்வம் கட்டுண்ணும் நம்செய்யுள்
சொல்லுக்குள் கட்டுண்ணும் சூழ். ... 8

தோட்டம்
பொன்வண்டார் தோட்டத்தில் பூந்தென்றல் கொண்டுள்ளம்
தன்னெண்ணம் விட்டுப்போம் சால். ... 9

காதல்
கண்ணுக்குள் பெண்வைத்தேன் கட்டுக்குள் கண்வைத்தேன்
புண்தந்தாள் நெஞ்சுக்குள் போர். ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

No comments:

Post a Comment