சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.18. அலங்காரக் குறள்: உயர்வு நவிற்சி அணி தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/325038138226724/
கவிஞர் திசேசு
உயர்வு நவிற்சி அணி
(குறள் வெண்பா)
இற்றிடுமோ என்றுதன் ஏந்திழை இன்மருங்கு
பற்றிடாது நின்றதவன் பாடு. ... 1
வானவில்லில் அம்பெய்தி வாலிபன் சாதிப்பான்
மான்விழியாள் காதலுக்காய் மற்று. ... 2
காதள வோடிய வாயினாள் கட்டியவனை
காதடையச் செய்தாள் செவிடு. ... 3
ஓங்கியடி ஒன்றரை யானைபலம் தாக்கத்தை
தாங்குவனா தம்பிப் பயல். ... 4
வாய்திறந்தால் வான்பறவை வந்துகொத்தத் தின்பவனை
நோய்நின்று கொல்லுமே நேர்ந்து. ... 5
எண்ணியதும் வந்தாய் இருநூறே ஆயுளென்பார்
மண்ணில் மகானாநான் சொல். ... 6
ஊசிவிழு மோசை உரத்துச் செவிகேட்கும்
மாசிலா மன்றமதன் மாண்பு. ... 7
சினத்தொடு பற்கள் கடித்தவொலி கேட்டு
வனத்திடை அஞ்சும் விலங்கு. ... 8
கோபுரங்கள் மேகமதை கொஞ்சிடவே ஓங்கிநிற்கும்
மாபெரும் மன்னுதமிழ் நாடு. ... 9
வானத்தை வில்லாய் வளைப்போர் வாய்ச்சொல்லின்
ஊனத்தை யாருரைப்பார் சொல். ... 10
★★★
பாவலர் சீனி பழனி
உயர்வு நவிற்சி அணி
(குறள் வெண்பா)
காற்றைப் பிடித்துக் கடிதாய்க் கடித்திடும்
வேற்று கிரகம்போல் வீழ்வு. ... 1
வானத்தில் நாற்று வயலிடை வாழ்வென
கானம் கனவு மழை. ... 2
அழலிடைத் தூக்கம் அவள்மனத் தாசை
விழலிடை வேர்விடு நெல். ... 3
கனவுப் பறவை கலையா இரவில்
மனத்தில் உலவும் மகிழ்வு. ... 4
கடலின் உவர்ப்பெனக் கைமிகு நட்பு
விடலையின் வேட்கை விடு. ... 5
வானத்து மீன்களாம் வையெயிற்று வாள்விழி
தேனினும் தெள்ளிது தான். ... 6
செவ்வாய்க் கிரகம் சிறிதே அருகில்
செவ்வாய்ச் சிரிப்பில் சிலை. ... 7
பரணி படைப்போம் பரமே வரினும்
கருணை விடுகளி றே. ... 8
நாகமணி மின்னும் நகையில் நடிகையாம்
மோகமணி மூடர் பதர். ... 9
★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
உயர்வு நவிற்சி அணி
(குறள் வெண்பா)
விண்மீன் தொடுமந்த வேர்போ லருகியதே
மண்ணினைத் தேற்று முழைப்பு. ... 1
குன்றைத் துளைக்கும் குறட்டை ஒலியிடை
நன்றாய் உறங்குவதெங் கே. ... 2
எரிமலைக் கண்ணுடன் என்னவள் நோக்கப்
பரியாய்ப் பறந்தேன் பயந்து. ... 3
வானவில்லின் ஜாலமாய் வாய்ப்பந்தல் போடுவார்
மோனக் கிறுக்காய்த்தொண் டர். ... 4
வால்விண்மீன் கண்ணால் வசியமாக்கும் பார்வையில்
கால்கீழ் வியர்த்துநொந் தேன். ... 5
★★★
கவிஞர் குருநாதன் ரமணி
உயர்வு நவிற்சி அணி
(குறள் வெண்பா)
தென்றல் நடைபயின்று திங்களின் நாட்டியம்
மன்றினில் மாமன் மகள். ... 1
திங்களில் தோன்றினாள் செவ்வாயில் வாழ்கின்றாள்
மங்கையை நாடுமன வான். ... 2
கொய்தவிண் மீன்கள் குடலையில் வீழமங்கை
கையலையில் நாணும்தென் காற்று. ... 3
கருவிழி விண்வெளியில் கப்பலாய் நீந்தி
ஒருவழியாய்ச் சேர்ந்தேன் உளம். ... 4
அறுபத யானை அலர்விழி அஞ்சும்
குறுவில்லை கண்பொருத்தும் சேய்! ... 5
காத்தாடி ஏறிக் கடவுளைத் தொட்டவனாய்க்
கூத்தாடும் பிள்ளைக் குணம். ... 6
அன்னை புடவையும் அப்பா பணங்காசும்
மின்னும்-ஆ காயம்விண் மீன். ... 7
ஊரெங்கும் வெள்ளி யுருக்கிவிடு திங்களால்
காரெலியை வெள்ளெலியாய்க் காண். ... 8
ஏழ்கடலும் சேர்ந்த இடிமழை யானதோ
பாழ்வெள்ளம் மாய்க்கும் பயிர். ... 9
பெருவிரலால் தொட்டார் பிரபஞ்ச மதிர்(வு)
ஒருவிரலில் நின்றத(து) ஓய்ந்து. ... 10
★★★★★
No comments:
Post a Comment