Tuesday, February 12, 2019

பயிலிழை குவெ.16. அலங்காரக் குறள்: உருவகவணி தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.16. அலங்காரக் குறள்: உருவகவணி தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/301069487290256/
கவிஞர் திசேசு

விரி உருவக அணி
கூந்தலெனும் மேகமதும் கொஞ்சி விளையாடல்
ஏந்தும் முகமாம் மதி. ... 1 (உருவகம் 2)

நினைவெனும் கோவிலில் நித்தமும் பூசையெனில்
மனமே ஒலிக்கும் மணி. ... 2

தொகை உருவக அணி
மழைப்பேய் சூழ மலையாள தேசம்
இழைத்ததென்ன பாவம் இயம்பு. ... 3 (உருவகம் 1)

முத்தமழைச் சாரலும் மோதிரக்கை குட்டலும்
நித்தமென்றன் தந்தை நினைவு. ... 4

விரி, தொகை கலப்புருவக அணி
வீச புயலரக்கி வெள்ளமெனும் கூற்றுவன்
கூசா தழிப்பான் குடி. ... 5 (உருவகம் 2)

பாசநெய் யூற்றி பண்பாம் உணவூட்டி
நேசமிகல் அன்னை நினைவு. ... 6

ஏகதேச உருவக அணி
சினத்தீ பெருக்கிடும் வன்சொல்லால் மாந்தர்
மனம்-அது வாடி விடும். ... 7 (உருவகம் 1)

கல்விக் கடைவணிகம் கட்டித் தருவதுண்டோ
ஒல்கா அறிவின் உயர்வு. ... 8

உருவக உருவக அணி
இதழ்க்கனி உண்டு இழுத்தவலி மாற
உதட்டமுத ஒத்தட முண்டு. ... 9 (உருவகம் 2)

மொழிபேசும் கண்வேலால் மூர்ச்சித்த வீரன்
விழியமுதம் ப்ட்டெழுந்தான் மீண்டு. ... 10

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்

விரி உருவக அணி
விழிவண்டாய்த் தாள்மலர் வீழ்ந்து சுவைக்க 
மொழிகண்டாய்த் தித்திக்கும் முந்து. ... 1 (உருவகம் 3)

இன்பெனும் கேணி இயல்பழிந்து வற்றினும் 
அன்பெனும் ஊற்றால் அமைவு. ... 2

தொகை உருவக அணி
விழிமலர் வீசும் எழில்விரை மோந்தே 
விழிகுள மாகும் வியன். ... 3 (உருவகம் 2) 

நாசித்தும் பைப்பூ நறுமுல்லை மூரலை 
நேசித்தெம் மரையுள்ளம் நேடு. ... 4

விரி, தொகை கலப்புருவக அணி
குணக்குன்றைக் கட்டக் குழல்வேலி யாக 
மனக்கொன்றை வீசும் மணம். ... 5 (உருவகம் 3)

வாணிலா மூரல் வாசமலர்த் தேறல் 
நாணிலான் வேட்டநறுந் தேன். ... 6

ஏகதேச உருவக அணி
எண்ணக் கயிற்றினை எட்டும் வரையிலும்
விண்ணில் எறியும் விழைவு. ... 7 (உருவகம் 1)

[எண்ணம் = பிடிமானக் கொக்கி கொண்ட கயிறு. விண்ணை அது பற்றும் உச்சியாக உருவகிக்கவில்லை.]

உருவக உருவக அணி
விழிமலர் விந்தை விளைத்திடும் சிந்தை 
விழிகுள மாக்கும் வியன். ... 8 (உருவகம் 2)

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்

விரி உருவக அணி
விழிக்கோலம் கோபமாய் வீழ்பேச்சு தேளாய்
அழித்திடும் ஊழியாய்ப் பெண். ... 1 (உருவகம் 2)

தொகை உருவக அணி
குரல்கோகு கண்கூகை கூந்தலோ கோரை 
அரம்பை யவன்மன தில்.. ... 2 (உருவகம் 3)

விரி, தொகை கலப்புருவக அணி
மொழியது தேனாம் சிரிப்பது மொக்குள்
அழியுமோ கன்னி நினைப்பு?. ... 3 (உருவகம் 2)

ஏகதேச உருவக அணி
பாசமலர் பூத்தல் பகைநுனி குத்துதல்
நேசச்சொல் காட்டும் வினை.. ... 4 (உருவகம் 1)

உருவக உருவக அணி
கண்வடுக் காரிகையின் கண்மலர்ப் பாசமே
விண்ணில் பறக்கும் வியல்.. ... 5 (உருவகம் 2)

★★★
பாவலர் சீனி பழனி

விரி உருவக அணி
நடைநன்றாம் நங்கை நலிவுமொழி கண்கள்
இடைமின்னல் ஆவாள் இவள். ... 1 (உருவகம் 1)

தொகை உருவக அணி
பூந்தளிர் மேனி புதுப்புனல் நாறணி
கூந்தல் குளிர்குடை யாள். ... 2 (உருவகம் 2)

மார்கழி மென்பனி மண்மகள் கண்மலர்
வார்குழல் ஆல மருள். ... 3
பொருள்
மார்கழி மாத மென் பனியில் மண்ணாம் மகள் துயில்நீங்கித் தன் கண் மலர்ந்து பார்க்கிறாள்:
வாரிய நீண்ட குழல் போல் தொங்கும் ஆல விழுதுகளில் இன்னும் தங்கியிருக்கும் இருள்.

விரி, தொகை கலப்புருவக அணி
சொன்னடைப் பாக்களின் சொன்மலர் வாசத்தில்
இன்னிசையாம் தேனே இயல். ... 4 (உருவகம் 2)

ஏகதேச உருவக அணி
மேருவாம் ஆக்கம் விழைவு கவியேக்கம்
யாருக்கும் எப்போதும் உண்டு. ... 5 (உருவகம் 1)

(செல்வத்தை மேருவாக உருவகித்து, விழைவின் ஏக்கத்தை அதன்மேல் கவியும் முகிலாக உருவகிக்காததால் ஏகதேசம்.)

உருவக உருவக அணி.
குளிர்மதி வெண்ணிலா கூப்பும் விரல்கள்
தளிருடன் காந்தள்போ தாம். ... 6 (உருவகம் 2)

★★★
கவிஞர் குருநாதன் ரமணி

விரி உருவக அணி
கருவிழி வண்டாய்க் கனியிதழ் தேனாய்
உருவெடுத்து வந்தாள் உமா. ... 1

கொற்றம் குடையாம் கொடுகரம் வாழையாம்
குற்றம் ஒறுத்தாண்டான் கோ. ... 2

***
தொகை உருவக அணி
குழல்முகில் தாள்மரை கொற்றவையே உன்னை
வழுத்துவோர்க் கில்லை வலி. ... 3

குழல்மொழி கண்வண்டு குப்பத்தில் முத்தாள்
குழந்தை யொருமலர்க் கொத்து. ... 4

***
விரி, தொகை கலப்புருவக அணி
பாளையாம் புன்னகை பல்வரிசை முத்தாரம்
காளைமேல் கன்னி கணை. ... 5

குயில்மொழி கண்மரை கூந்தல் குடையாம்
கயல்விழி யாளென் கனவு. ... 6

***
ஏகதேச உருவக அணி
இன்சொற் பயிரென் இயல்பாய் வளர்த்தாலும்
வன்சொலால் வாடும் வயல். ... 7

பாகைக்கும் ஏனைப் பணத்துக்கும் தத்தமது
ஈகை உரைகல் என. ... 8

[பாகை = இங்கு பதவியைக் குறித்தது]

***
உருவக உருவக அணி
தாள்மலர் கைமரை சக்தியின் கைச்செம்பொன்
தாள்நிழற் கீழென் தலை. ... 9

[கை => தாமரை, செம்பொன்; தாள் => மலர், நிழல்]

கண்மலர்க் கன்னியின் கண்ணம்பால் கட்டுண்டேன்
எண்ணம் செயல்மொழி யென்று. ... 10

[கண் = மலர், அம்பு]

★★★★★

No comments:

Post a Comment