Tuesday, February 26, 2019

பயிலிழை குவெ.18. அலங்காரக் குறள்: உயர்வு நவிற்சி அணி

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.18. அலங்காரக் குறள்: உயர்வு நவிற்சி அணி

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/297095271021011/

உயர்வு நவிற்சி அணி
(பிற பெயர்கள்: அதிசய அணி, அதிசயோக்தி)

உள்ளதை உள்ளபடி அழகுடன் விளக்குதல் தன்மையணி.
உள்ளதை நனிமிகைப்பட உயர்த்திக் கூறுதல் உயர்வு நவிற்சி அணி.

* உயர்வு நவிற்சி அணியின் கூறுகள்
.. கற்பனைத் திறன்
.. படிப்போரை வியப்பில் ஆழ்த்தல்
.. உலக வரம்பை மீறாதபடி கூறல்.

’நிலவின் களங்கத்தை இவள் பெருவிரல் 
.. துடைத்துவிடும்.’ => உயர்வு நவிற்சி
.. இவ்வகை எண்ணமே கற்பனைத் திறன்.
.. இவ்வகை ஒப்புமை படிப்போரை வியப்பில் ஆழ்த்தக் காணலாம்.
.. நிலவின் களங்கம், பெருவிரல் இரண்டும் 
.. உலகறிந்த பொருள்களாய் உலக வரம்பை மீறாதன.

உலக வரம்பை மீறுவது எப்போது?
.. பேய்ப்பெண்ணாள் => பேய், பெண் இரண்டும் உலகம் அறிந்தவை.
.. மண்ணை யுண்டு மனிதரைப் பெற்றெடுக்கும் பேய்! என்றால்,
.. இவ்வகைப் பேய் இல்லாததால் உலக வரம்பை மீறுவது என்றறிக.

தற்குறிப்பேற்றம், இல்பொருள் உவமை, உயர்வு நவிற்சி 
.. இவை மூன்றும் எவ்வகையில் ஒன்றுக்கொன்று 
.. வேறுபட்டு நிற்பன என்றறிதல் முக்கியம்.

மங்கை வந்தாள் மலர்கள் அசைந்தன => தற்குறிப்பேற்றம் 
.. பொதுவான நிகழ்வின்மேல் தற்குறிப்பை ஏற்றிச் சொல்வது.

குதிரையின் கொம்பால் குவிகனி கொய்தாள் => இல்பொருள் உவமை
.. கனி பறிக்கும் துறட்டுக்கோலை இல்லாத பொருளான
.. குதிரைக் கொம்பிற்கு உவமையாக்கியது.

கொய்தனள் விண்மீன்கள் குடலையில் சேர்த்தனள் => உயர்வு நவிற்சி
.. பூக்களை விண்மீன்களாக உயர்த்தி
.. அவற்றைக் கொய்ததாகச் சொல்லும் வியப்பு.

***
தண்டியலங்கார சூத்திரம்

தண்டியலங்காரம் அதிசய அணியை இவ்வாறு வரையறுத்து

மனப்படும் ஒருபொருள் வனப்புவந்து உரைப்புழி
உலகுவரம் பிறவா நிலைமைத் தாகி
ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம்.

அதை ஆறு வகைகளாகப் பிரிக்கிறது.

அதுதான்
பொருள் குணம் தொழில் ஐயம்
துணிவே திரிபு-எனத் தெருளுறத் தோன்றும்
நிலைமைத் தென்ப.

அதாவது, அதிசய அணியானது,
.. பொருள், குணம், தொழில், ஐயம், துணிவு, திரிபு
.. என்னும் ஆறு வகைப்பட்டு அமையும்.

இந்த ஆறு வகைகளையும் தனித்தனியாகக் 
.. குறள் வெண்பா வடிவில் அமைப்பது குறைப்படும் என்பதால்
.. நாம் இப்பயிலிழையில் உயர்வு நவிற்சி அணியை
.. வகை காணாத பொது வகையாக அமைத்துக்
.. குறள் வெண்பாக்கள் புனைவோம்.

சான்று
பொதுவகை உயர்வு நவிற்சி அணி பயிலும் சான்றாக
.. வைரமுத்துவின் பாடல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 
.. கீழ்வரும் ’ஜோடி’ திரைப்படப் பாடலைக் கொள்வோம்.

விண்மீன்களைக் கேட்டால் 
அண்ணன்கள் எல்லாம் பறித்துப் பறித்துத் தருவார்கள்
நான் வானவில் கேட்டால் 
ஏணியில் ஏறி ஒடித்து ஒடித்துத் தருவார்கள்
ஒற்றைத் தங்கை எனக்காக 
ஊரைத் தருவார்கள்.

பயிலிழை குவெ.18. அலங்காரக் குறள்: உயர்வு நவிற்சி அணி

அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிலரங்கில் பங்கேற்கலாம்.
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.18. அலங்காரக் குறள்: உயர்வு நவிற்சி அணி
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. ஒரு விகற்பப் பொழிப்பு மோனைக் குறளாகப்
.. பொதுவான உயர்வு நவிற்சி அணி அமைவதாக
.. ஐந்து முதல் பத்து (5 to 10) வரை 
.. குறள் வெண்பாக்கள் புனைந்தெழுதுவோம்.

குறிப்பு
உயர்வு நவிற்சி சரியாக அமைய
.. மேலுள்ள விளக்கம் மற்றும் சான்றுகளை
.. ஊன்றிப் பயில்க.

தொகுப்பு
16/09/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
உயர்வு நவிற்சி அணி
(குறள் வெண்பா)

தென்றல் நடைபயின்று திங்களின் நாட்டியம்
மன்றினில் மாமன் மகள். ... 1

திங்களில் தோன்றினாள் செவ்வாயில் வாழ்கின்றாள்
மங்கையை நாடுமன வான். ... 2

கொய்தவிண் மீன்கள் குடலையில் வீழமங்கை
கையலையில் நாணும்தென் காற்று. ... 3

கருவிழி விண்வெளியில் கப்பலாய் நீந்தி
ஒருவழியாய்ச் சேர்ந்தேன் உளம். ... 4

அறுபத யானை அலர்விழி அஞ்சும்
குறுவில்லை கண்பொருத்தும் சேய்! ... 5

காத்தாடி ஏறிக் கடவுளைத் தொட்டவனாய்க்
கூத்தாடும் பிள்ளைக் குணம். ... 6

அன்னை புடவையும் அப்பா பணங்காசும்
மின்னும்-ஆ காயம்விண் மீன். ... 7

ஊரெங்கும் வெள்ளி யுருக்கிவிடு திங்களால்
காரெலியை வெள்ளெலியாய்க் காண். ... 8

ஏழ்கடலும் சேர்ந்த இடிமழை யானதோ
பாழ்வெள்ளம் மாய்க்கும் பயிர். ... 9

பெருவிரலால் தொட்டார் பிரபஞ்ச மதிர்(வு)
ஒருவிரலில் நின்றத(து) ஓய்ந்து. ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

No comments:

Post a Comment