Saturday, February 16, 2019

பயிலிழை குவெ.17. அலங்காரக் குறள்: தன்மையணி

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.17. அலங்காரக் குறள்: தன்மையணி

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/294243851306153/

தன்மை அணி
(பிற பெயர்கள்: தன்மை நவிற்சி அணி, இயல்பு நவிற்சி அணி)

உவமை, உருவகம் போன்று ஏதும் இல்லாது ஒரு பொருளை உள்ளது உள்ளபடியே விளக்குவது தன்மை அணியாகும்.

குதிரைபோல் வந்தான் => உவமை
வந்தான் குதிரை => உருவகம்
ஓடி வந்தான் => தன்மை அணி

கண்கள் இரண்டும் மலர் => உவமை
மலர்க்கண் இரண்டும் => உருவகம்
கண்கள் இரண்டும் => தன்மை அணி

தன்மை அணி நால்வகையில் அமையும்.

* பொருள் தன்மை => ஒரு பொருளின் புறத்தோற்றத்தில் 
.. தெரியும் தன்மைகளை விளக்குவது
.. நீலமயில் நீள்தோகை என்பது போல்.

* குணத் தன்மை => ஒரு பொருளின் உள்ளியல்புகளை விளக்குவது
.. தண்ணீர் குளிர்ச்சி, தழல் வெம்மை என்பது போல்.

* இனத் தன்மை => ஒரு பொருளின் இனம் சார்ந்த தன்மைகளை விளக்குவது
.. வரிப்புலி பதுங்கும் பாயும் என்றாற் போல்.

* தொழில் தன்மை => ஒரு பொருளின் தொழிலில் காணும் 
.. தன்மைகளை விளக்குவது
.. தன் நிலையும் இரை நிலையும் ஆராய்ந்து பதுங்கிப் பாயும் புலி என்று விளக்கினாற் போல்.

தண்டியலங்காரச் சான்றுச் செய்யுள்கள்
(மேல் விவரம்: http://www.tamilvu.org/library/libindex.htm)

1. பொருள் தன்மையணி
(சிவன் உருவத் தோற்றம்)

நீல மணிமிடற்றன் நீண்ட சடைமுடியன்
நூலணிந்த மார்பன் நுதல்விழியன் - தோலுடையன்
கைம்மான் மறியன் கனல்மழுவன் கச்சாலை
எம்மான் இமையோர்க் கிறை.

2. குணத் தன்மையணி
(சிவனடியார், ஊர் குணம்)

உள்ளம் குளிர உரோமம் சிலிர்த்துரையும்
தள்ளவிழி நீர்‍அரும்பத் தன்மறந்தாள் - புள்ளலைக்கும்
தேன்தா மரைவயல்சூழ் தில்லைத் திருநடஞ்செய்
பூந்தா மரைதொழுத பொன்.

3. இனத் தன்மையணி
(சிவன் அணியும் பாம்பின் இனத்தன்மை)

பத்தித் தகட்ட கறைமிடற்ற பைவிரியும்
துத்திக் கவைநாத் துளையெயிற்ற - மெய்த்தவத்தோர்
ஆகத்தான் அம்பலத்தான் ஆரா அமுதணங்கின்
பாகத்தான் சாத்தும் பணி.

[பத்தி = வரிசை, அகடு = வயிறு, துத்தி = படம்,
எயிறு = பல், பணி = பாம்பு]

4. தொழில் தன்மையணி
(சிவனணி மலர்நாடும் வண்டின் தொழில்)

சூழ்ந்து மூரன்றணவி வாசம் துதைந்தாடித்
தாழ்ந்து மதுநுகர்ந்து தாதருந்தும் - வீழ்ந்தபெரும்
பாசத்தார் நீங்காப் பரஞ்சுடரின் பைங்கொன்றை
வாசத்தார் நீங்காத வண்டு.

பயிலிழை குவெ.17. அலங்காரக் குறள்: தன்மையணி

அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிலரங்கில் பங்கேற்கலாம்.
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.17. அலங்காரக் குறள்: தன்மையணி
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. ஒரு விகற்பப் பொழிப்பு மோனைக் குறளாக
.. மேற்சொன்ன நான்கு வகைகளில்
.. தன்மை அணி அமைவதாக
.. வகைக்கு இரண்டாக (2)
.. மொத்தம் எட்டு (8) குறட்பாக்கள் புனைந்தெழுதுவோம்.

குறிப்பு
தன்மையணி அமையும் குறட்பாக்களில்
.. உவமை, உருவகம் அல்லது
.. வேறு எந்த அணியும் அமைதல் கூடாது.

தொகுப்பு
07/09/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
தன்மையணி
(குறள் வெண்பா)

பொருள் தன்மை அணி
குழலில் மலரிருக்கும் கூந்தலிற் பின்னல்
அழைக்கும் பெயராம் அனு. ... 1

நெடிய உடலெங்கும் நீறு துலங்கும்
அடியாரின் தெய்வம் அரன். ... 2

குணத் தன்மை அணி
தொட்டாற் சிணுங்கும் சுழிக்கும் முகத்தினை
பட்டம்மாள் பெண்பெயர் பட்டு. ... 3

புன்னகை யில்மறையும் போலி மனம்கொண்ட
கன்னையா கட்சியவர் காப்பு. ... 4

இனத் தன்மை அணி
பொறிமேனி பல்நஞ்சு போக்குவயிற் றுந்தி
இறையனார் நாகம் இது. ... 5

ஆறறிவும் நாடுவதாய் ஐம்புலன் துய்ப்பதில்
மாறிலியாய் மாந்தர் மயல். ... 6

தொழில் தன்மை அணி
சிறகடித்துத் தூர்ந்துண்டு தேன்றுளி சேர்க்கும்
அறுபதம் தாங்கும் அலர். ... 7

வருவதெலாம் கொள்வர் வரவாக ஏதும்
செருவாக்கும் எத்தர் இவர். ... 8

--குருநாதன் ரமணி

★★★★★

No comments:

Post a Comment