Saturday, September 1, 2018

வெண்பா செய்தித் திரட்டு - 05.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

வெண்பா செய்தித் திரட்டு - 05.

சங்கம் மருவிய கால வெண்பா யாப்பு 

முனைவர் ப.திருஞானசம்பந்தம் எழுதிய
.. 'பதினெண்கீழ்க்கணக்கின் யாப்பமைதி'
.. நூல்தரும் செய்திகள் கீழே.

சங்கம் மருவிய காலத்தில் 
.. தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில்
.. முதுமொழிக் காஞ்சி தவிர்த்த
.. ஏனைய பதினேழு நூல்களும்
.. வெண்பா யாப்பில் அமைந்துள்ளன.
.. முதுமொழிக் காஞ்சி குறள் வெண்பாவின் இனமான
.. குறள் வெண்செந்துறை யாப்பில் அமைந்துள்ளதாக
.. உரையாசிரியர்கள் குறிப்பர்.

கீழ்க்கணக்கு நூல்களில்
.. குறள், சிந்தியல், நேரிசை, இன்னிசை, 
.. பஃறொடை என்னும் வெண்பாவின் அனைத்து 
.. வடிவங்களும் பயின்று வந்துள்ளன.

அறம், அகம், புறம் என்னும் முப்பொருண்மையில்
.. பெரும்பான்மை அளவியல் (நாலடி) வெண்பாக்கள்.
.. இன்னா, இனியவை நாற்பது நூல்கள்
.. முழுதும் இன்னிசை வெண்பாக்கள்.

செப்பலோசையின் மூன்று வகைகளாகும்
.. ஏந்திசைச் செப்பல் (வெண்சீர் வெண்டளை மட்டும் பயிவது)
.. தூங்கிசைச் செப்பல் (இயற்சீர் வெண்டளை மட்டும்)
.. ஒழுகிசைச் செப்பல் (வெண்டளை யிரண்டும் விரவி)
.. இவற்றில், கீழ்க்கணக்கு அளவியல் வெண்பாக்களில்
.. ஏந்திசைச் செப்பல் பயில்வது ஏதுமில்லை!
.. தூங்கிசைச் செப்பலாக ஏழு மட்டுமே!
.. மற்றவை யெல்லாம் ஒழுகிசைச் செப்பலில் அமைந்தவை!

அளவியல் வெண்பா வகைகளான
.. நேரிசை, இன்னிசை வெண்பாக்களில்
.. இன்னிசை வெண்பாவே தொன்மை மிக்க வடிவம்.

கீழ்க்கணக்கு நூல்களில்
.. நேரிசை வெண்பாக்கள் அதிக எண்ணிக்கையிலும் (1067)
.. இன்னிசை வெண்பாக்கள் அதைவிடக் குறைந்த எண்ணிக்கையிலும் (665)
.. காணப்படுகின்றன.

நேரிசை வெண்பா
.. தனிசொல் ஒரூஉ எதுகையாக அமைய
.. அவ்வெதுகை அது வரும், அதற்கு முன்னுள்ள
.. அடியெதுகைக் கேற்ப அமைவதால்
.. நேரிய இசையாகி இப்பெயர் பெற்றது.

நேரிசை வெண்பா
.. தொல்காப்பியர் சொன்ன ’ஒத்திசைக்’ குறிப்பில்
.. அடங்குவதாகக் கொள்வார் உளர்.
.. ஆயினும் அது தனி வடிவமாக அவர் காலத்தில் இல்லை.

சங்கம் மருவிய காலத்தில் வளர்ச்சிபெற்ற
.. நேரிசை வெண்பாவின் தனிச்சொல் பற்றி:

ஏட்டுச் சுவடிகளில் தனிச்சொல் முன்
.. சிறு கோடியின்றியே எழுதப் பெற்றது.

1831-இல் தாண்டவராய முதலியாரால்
.. ’பழுதற ஆராயப்பட்டு’ வெளிவந்த
.. ’திருக்குறண் மூலமும் நாலடிநானூற்றின் மூலமும்’
.. பதிப்பில் தனிச்சொல் இடைவெளி விட்டு எழுதப்பட்டது.
.. வேறு சிலர் இடைவெளியுடன் உடுக்குறி யிட்டனர்.

1875 முதல் வெளிவந்த நூல்களில்தான்
.. தனிச்சொல் சிறு கோடிட்டுக் காட்டப்பெற்றது.
.. கோடிடுவது இலக்கணத்தில் இல்லை, 
.. ஆயின் வழக்கமாக நிலைபெற்றுவிட்டது.

ஆசாரக் கோவையின் பதினாறவது பாடலான
.. அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
.. நிகரில் குரவ ரிவரிவரத்
.. தேவரைப் போலத் தொழுதெழுக வென்பதே
.. யாவரும் கண்ட நெறி
..
.. இப்பாடலில்
.. இரண்டாமடி மூன்று சீர்களே கொண்டுள்ளதால்
.. பொதுவாகச் சவலை வெண்பாவாகக் கொள்ளப்படுகிறது.

இரண்டாம் அடியை
.. நிகரில் குரவரிவ் வைவர் இவரிவரத்
.. என்னும் பாடபேதமாகக் கொண்டு இதை 
.. நேரிசை வெண்பாவாய்க் கொள்வதும் உண்டு.

வெண்பாவில் சிறுபானமை ஐஞ்சீரடி வராம்
.. என்ற தொல்காப்பிய உரையின் கருத்துக் கேற்ப
.. ஐந்திணை ஐம்பது நூலில் கீழ்வரும் வெண்பா:

உதிரத் துவரிய வேங்கை யுகிர்போ
வெதிரி முருக்கம்ப வீர்ந்தண்கார் நீங்க - வெதிருநர்க்
கின்பம் பயந்த விளவேனில் காண்டொறுந்
துன்பங் கலந்தழியு நெஞ்சு. ... (ஐந்திணை ஐம்.31

★★★★★

No comments:

Post a Comment