சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.02. அறுசுவைக் குறள் வெண்பா! தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/218865942177278/
01. தொ.001. இராமசாமி வெங்கடராமன் (88888 39/40)
இனிப்பு
கற்கண்டாய்த் தித்திக்கும் கண்ணேயுன் வாய்மொழிச்
சொற்கேட்காக் காதுக்குச் சோர்வு. ... 1
புளிப்பு
புளிபோட்டுத் தேய்த்த புதுப்பாத் திரம்போல்
பளிச்செனத் தோன்றிடும் பாங்கு. ... 2
கைப்பு
கைப்பேனோ பாகல்போல் கண்ணே மனதிலேயுன்
கைப்பாவை தானேநான் காண். ... 3
உவர்ப்பு
உவர்ப்பாய் உடனே உகுத்திடும் கண்ணீர்
துவக்கமே அந்தோ துயர். ... 4
துவர்ப்பு
உவத்தலே என்றும் உமக்குயர்வு பாக்காய்த்
துவர்த்திடி லென்றும் துயர். ... 5
கார்ப்பு
மிளகாய்த்தூள் கார்ப்பு மிதமெனில் நன்று
இளகுமோவுன் காட்டமும் இன்று. ... 6
★★★
02. பா.040. செல்லப்பன்(88888 38/40)
தித்திப்பு—ஆண்
செப்பும் ஒருசொல்லில் செந்தேனின் தித்திப்பை
எப்படிநீ சேர்த்தாய் இயம்பு? ... 1
கார்ப்பு—பெண்
என்சொல் உறைக்கிறதாய் என்றன்தாய் ஓலமிடில்
என்செய்வேன் அன்பே இனி? ... 2
துவர்ப்பு—ஆண்
பிஞ்சில் துவர்த்தாலும் பின்னர் இனிக்கின்ற
நெஞ்சத்தாள் உன்தாய் நினை! ... 3
கைப்பு—பெண்
சொல்கசந்த போதிலுமென் தூய மனத்தன்னை
நல்லதையே செய்வாள்நீ நம்பு. ... 4
புளிப்பு—ஆண்
பேச்சில் புளிப்பின்றிப் பேசிச் சரிசெய்தால்
ஓச்சல் ஒழியும் உணர் ... 5
[ஓச்சல்=எறிதல், வெட்டல்]
உவர்ப்பு—பெண்
உணவுக் குவர்ப்பேபோல் உன்னோடுவாழ்வேன்
மணக்கும்நம் வாழ்க்கையதன் மாண்பு. ... 6
★★★
03. பா.060. திசேசு (88888 37/40)
இல்லறத்தில் அறுசுவை
உப்பின் கரிப்பொக்கும் ஒண்டொடியாள் ஊடலது
செப்புமின் துய்த்ததன் பின். ... 1
நீரிழிவு நோயுற்றோர் நேடும் துவர்ப்பாகி
நேரிழையாள் வாழ்ந்தனள் நெஞ்சு. ... 2
கற்கண்டு தேனைக் கசப்பாக்கும் காதலியாள்
சொற்கனிய ஊறும் சுவை. ... 3
என்றனைக் காய்வோர்க்கு ஏந்திழையாள் காரமாய்
கொன்றிடப் பார்த்திடும் கூற்று. ... 4
என்னிலவை ஏசுகின்ற பேச்செலாம் எப்பொழுதும்
மன்னனெற்கு மாறாக் கசப்பு. ... 5
பழகப் பழகப் புளிக்காத பாலாம்
அழகியொடு ஆர்த்த உறவு. ... 6
★★★
நி1.. குருநாதன் ரமணி
கன்னலின் சாறினிமை கற்கண் டதனினும்-நீ
சொன்னதால் தித்திக்கும் சொல். ... 1
பாகற்காய் கைப்பாகப் பாவையுன் அன்னைசொல்
சோகம் விளைத்துச் சுடும். ... 2
புளிக்காய்ச்சல் தின்றது போலவுன் வாக்கு
இளித்தது போதும் எழு. ... 3
பாக்குத் துவர்ப்பாய்ப் பரிகாசம் பண்ணுமுன்
நாக்கில் கவிதை நயம். ... 4
கடல்நீரைக் காட்டிலுமுன் கண்ணீர்க் கரிப்பு
சுடுமென்றன் நெஞ்சம் தொடும். ... 5
கண்ணில் கனல்மிளகின் காரமுன் சொல்லிலே
பெண்ணேநீ ஆனாயோ பேய்! ... 6
★★★★★
No comments:
Post a Comment