சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.01. திருக்குறள் துதிகுறள் தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/215859792477893/
01. தொ.006. இரா.கி ஒரத்தநாடு. தஞ்சை
நெறிமுறை காட்டியுள் நேர்வழி போற்றிப்
புரிதலில் வாழ்குறள் போற்று.
★★★
02. பா.034. இளவல் ஹரிஹரன்
குறள்வழி வாழ்தல் குவலயம் போற்றும்
அறவழி என்றே அறி. ... 1
திறங்கொண்டு வாழ்வார் திருக்குறள்சொல் கேட்பார்
அறங்கொண்டே ஆள்வார் அகம். ... 2
மழைகூடப் பொய்க்கும் மறந்தும்பொய் யாச்சொல்
விழையுந் திருக்குறளை வேண்டு. ... 3
அகஞ்சீர் அடைதற்கே அவ்வப்போ திங்கு
சுகக்குறள் ஒன்றிரண்டு சொல். ... 4
காசில னாயினுங் காசினியில் நம்குறள்
மாசில னாக்கும் மதி. ... 5
★★★
03. பா.002. பாப்பணன் தனராஜ்
தமிழ்மறை கற்றோர் தரணியில் தாழார்
சமலை யறுக்குமோர் சால்பு. ... 1
(சமலை => அழுக்கு; சால்பு. => கல்வி)
அறம்பொரு ளின்பத்தி னான்ற குறளால்
திறம்பட வாழ்வோம் தெளிந்து. ... 2
அருங்குற ளாய்ந்தார்தா மாயிரம் நூல்படைத்து
பெரும்பு கழெய்தினர் பேறு. ... 3
மறைநூல் பலகற்றும் உய்யாதார் உய்ய
குறளே புவிகாக்கும் கூழ். ... 4
குன்றின் விளக்காம் குறள்நெறி ; கொண்டார்க்கு
என்றும் இடும்பை இல. ... 5
★★★
04. தொ.002. பாவலர் சீனி பழனி
கல்லா மனத்தைக் கனிவாய்க் கரைத்திட
நல்லோர் நவிலும் குறள். ... 1
அறிவே கருவி அறைவதும் குறளே
அறிதல் அறமதே தான். ... 2
மழைதரு வானம் நிழல்தரு சோலை
இழையணி வாழ்வே குறள். ... 3
மனிதம் உயர்வே மனமும் இனிதே
கனியே குறளின் நெறி. ... 4
மருந்தும் விருந்தே நறுந்தேன் குறளே
அருந்திடத் தந்தார் அறி. ... 5
★★★
05. பா.060. திசேசு
ஈரடிக்குக் காலடி மட்டாகி ஈந்துயர்
பாரடிமை கொண்டகுறட் பா. ... 1
தமிழர்தம் வாழ்நெறி சீராகத் தாய்போல்
அமிழ்தம் அருளும் குறள். ... 2
முப்பால் புகன்றுலகு மூவா துறையநெறி
தப்பா துரைத்த குறள். ... 3
இனமொழி எம்மதம் கொண்டார்க்கும் நன்மை
மனநிறை வானகுறள் மாண். ... 4
எந்நிலை எந்நிறை மாந்தர்க்கும் ஏற்றதாம்
தன்னிலை தாழாக் குறள். ... 5
★★★
06. பா.062. விசு. இம்மானுவேல்
வள்ளுவன் வாய்மொழி வானினும் மாபெரிதே
தெள்ளிய சீர்மைத் தெளி. ... 1
முப்பால் உணர்ந்தால் முழுமையே வாழ்வினில்
அப்பால் அருமை அறி. ... 2
சாற்றிக் குறளின் சமத்துவம் நாட்டினில்
போற்றி யொழுகினால் பொன். ... 3
ஓதும் மனிதர் ஒருமித்து நிற்கையில்
வேதங்கள் வேண்டா விலக்கு. ... 4
பூதமைந்தும் ஆற்றப் புவியில் குறளெனும்
வேதம் சிறந்திட வேண்டு. ... 5
★★★
07. நி1. குருநாதன் ரமணி
அறத்தால் வரும்பொருளால் ஆமின்பம் துய்க்கும்
நெறிதரும்நூல் நிற்கும் நிலைத்து. ... 1
தினைத்துணை யாம்குறள்சொல் தீதுநன்று காணப்
பனைத்துணை யாகும் பயன். ... 2
தேவராம் நாயனார் தெய்வப் புலவர்சொல்
யாவர்க்கும் வேதமென வாம். ... 3
அடிமூன்றால் வாமனன் ஆள்மூ வுலகும்
அடியிரண்டில் ஆள்குற ளாம். ... 4
நால்வருணத் தாரும்கொள் நல்லறம் தந்துமுப்
பால்வண்ணம் காட்டும் பரம். ... 5
★★★★★
No comments:
Post a Comment