Thursday, September 13, 2018

பயிலிழை குவெ.02. அறுசுவைக் குறள் வெண்பா!

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.02. அறுசுவைக் குறள் வெண்பா!

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/209941296403076/
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
வரும் பாடல்களுக்கு ஐம்மீன் மதிப்பீடு தரலாம்.

புள்ளிகள் (மொத்தம்: 40)
(ஆறு குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும்)
 1 => ஒவ்வோர் அடிக்கும்
 1 => ஒருவிகற்பக் குறட்பாவாவெனில்
 1 => ஓரடியில் இயல்பாக அமையும் பொழிப்பு மோனைக்கு
10 => சொற்பொருள் ஒலிநயம் பொறுத்து போனஸ்.

ஐம்மீன் மதிப்பீடு: 
யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு ஆகிய
.. ஐந்து அமைதிகள் => ஐம்மீன்கள்
.. ஒவ்வொன்றுக்கும் கீழெல்லை: 1
.. மேலெல்லை: 8
.. தொடர் எண்ணாகக் குறிக்கவும்.
.. (சான்று: 87675 => எண்கள் முறையே
.. யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு
.. அமைதிகளின் மதிப்பீட்டைக் குறிப்பது).

***
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

அறுசுவை:
இனிப்பு, புளிப்பு, கைப்பு (கசப்பு), 
உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு (காரம்).

பயிலிழை குவெ.02. அறுசுவைக் குறள் வெண்பா!
பாடுபொருள்: காதலர்கள் உரையாடல்
பாவகை: குறள் வெண்பா

காதல் வயப்பட்ட ஆண்-பெண் சோடிகள்
.. தம் காதல் போக்கிற் கேற்ப
.. அறுசுவையில் பேசிக்கொள்வதாக,
.. சுவைக்கு ஒன்றென
.. மொத்தம் 6 குறள் வெண்பாக்கள்
.. புனைந்து பதிவோம்.

ஒவ்வொரு குறளிலும் வரும் 
.. சுவையைத் தரும் தூலப் பொருள்
.. அதில் உவமை அல்லது உருவகமாக 
.. அமையுமாறு புனையவேண்டும்.

தொகுப்பு
04/05/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக
காதலில் அறுசுவை!
(குறள் வெண்பா)
(அறுசுவை: காதல்)

கன்னலின் சாறினிமை கற்கண் டதனினும்-நீ
சொன்னதால் தித்திக்கும் சொல். ... 1

பாகற்காய் கைப்பாகப் பாவையுன் அன்னைசொல்
சோகம் விளைத்துச் சுடும். ... 2

புளிக்காய்ச்சல் தின்றது போலவுன் வாக்கு
இளித்தது போதும் எழு. ... 3

பாக்குத் துவர்ப்பாய்ப் பரிகாசம் பண்ணுமுன்
நாக்கில் கவிதை நயம். ... 4

கடல்நீரைக் காட்டிலுமுன் கண்ணீர்க் கரிப்பு
சுடுமென்றன் நெஞ்சம் தொடும். ... 5

கண்ணில் கனல்மிளகின் காரமுன் சொல்லிலே
பெண்ணேநீ ஆனாயோ பேய்! ... 6

--குருநாதன் ரமணி, 26/04/2018

★★★★★

No comments:

Post a Comment