சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.02. அறுசுவைக் குறள் வெண்பா!
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/209941296403076/
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
வரும் பாடல்களுக்கு ஐம்மீன் மதிப்பீடு தரலாம்.
புள்ளிகள் (மொத்தம்: 40)
(ஆறு குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும்)
1 => ஒவ்வோர் அடிக்கும்
1 => ஒருவிகற்பக் குறட்பாவாவெனில்
1 => ஓரடியில் இயல்பாக அமையும் பொழிப்பு மோனைக்கு
10 => சொற்பொருள் ஒலிநயம் பொறுத்து போனஸ்.
ஐம்மீன் மதிப்பீடு:
யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு ஆகிய
.. ஐந்து அமைதிகள் => ஐம்மீன்கள்
.. ஒவ்வொன்றுக்கும் கீழெல்லை: 1
.. மேலெல்லை: 8
.. தொடர் எண்ணாகக் குறிக்கவும்.
.. (சான்று: 87675 => எண்கள் முறையே
.. யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு
.. அமைதிகளின் மதிப்பீட்டைக் குறிப்பது).
***
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.
ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.
அறுசுவை:
இனிப்பு, புளிப்பு, கைப்பு (கசப்பு),
உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு (காரம்).
பயிலிழை குவெ.02. அறுசுவைக் குறள் வெண்பா!
பாடுபொருள்: காதலர்கள் உரையாடல்
பாவகை: குறள் வெண்பா
காதல் வயப்பட்ட ஆண்-பெண் சோடிகள்
.. தம் காதல் போக்கிற் கேற்ப
.. அறுசுவையில் பேசிக்கொள்வதாக,
.. சுவைக்கு ஒன்றென
.. மொத்தம் 6 குறள் வெண்பாக்கள்
.. புனைந்து பதிவோம்.
ஒவ்வொரு குறளிலும் வரும்
.. சுவையைத் தரும் தூலப் பொருள்
.. அதில் உவமை அல்லது உருவகமாக
.. அமையுமாறு புனையவேண்டும்.
தொகுப்பு
04/05/2018 (வெள்ளி) இரவு வரை
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில்
.. பின்னர் வெளியிடப்படும்.
***
அடியேன் பங்காக
காதலில் அறுசுவை!
(குறள் வெண்பா)
(அறுசுவை: காதல்)
கன்னலின் சாறினிமை கற்கண் டதனினும்-நீ
சொன்னதால் தித்திக்கும் சொல். ... 1
பாகற்காய் கைப்பாகப் பாவையுன் அன்னைசொல்
சோகம் விளைத்துச் சுடும். ... 2
புளிக்காய்ச்சல் தின்றது போலவுன் வாக்கு
இளித்தது போதும் எழு. ... 3
பாக்குத் துவர்ப்பாய்ப் பரிகாசம் பண்ணுமுன்
நாக்கில் கவிதை நயம். ... 4
கடல்நீரைக் காட்டிலுமுன் கண்ணீர்க் கரிப்பு
சுடுமென்றன் நெஞ்சம் தொடும். ... 5
கண்ணில் கனல்மிளகின் காரமுன் சொல்லிலே
பெண்ணேநீ ஆனாயோ பேய்! ... 6
--குருநாதன் ரமணி, 26/04/2018
★★★★★