சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
3. வெண்பாவின் வளர்ச்சி நிலைகள்
தொல்காப்பியர் காலத்தில் வெண்பா ஒரு தனி செய்யுள் வடிவாக இல்லாமல் பிறவகைப் பாட்டுகளுள் மறைந்திருந்தது. சங்க இலக்கியத்தில் காணும் வெண்பா யாப்புகள் இவ்வகையினவே. கீழ்வரும் செய்தித் திரட்டுப் பகுதிகளில் காணும் வெண்பா யாப்பு வரிகளைப் படித்து அவற்றின் சொற்செறிவு, ஒலிநயம் கண்டு இன்புறுக.
1. தொல்காப்பியர் கால வெண்பா யாப்பு
* தொல்காப்பியர் காலத்தில் வெண்பா யாப்பினவாக
.. ஐந்துவகைப் பாக்கள் இருந்தன:
.. நெடுவெண்பாட்டு, குறுவெண்பாட்டு,
.. கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச் செய்யுள்.
> பஃறொடை வெண்பா
* நெடுவெண்பாட்டு பன்னிரண்டடி
.. என்று தொல்காப்பியம் சொன்னாலும்,
.. அவ்வடிவம் ஐந்தடி முதல் பன்னிரண்டடி வரை
.. பிற்காலத்தில் பாடப்பெற்றன.
.. இவ்வடிவே பின்னர் பஃறொடை வெண்பா வானது.
> குறள், சிந்தியல் வெண்பா
* குறுவெண்பாட்டிற் களவெழு சீரே
.. என்ற தொல்காப்பிய நூற்பாவால்
.. பின்னூலார் ஓரடி முக்கால் என்று ஓதிய
.. குறள் வெண்பாவே இவ்வடிவம் என்று கொள்வர்.
.. ஆயினும், இளம்பூரணர் இவ்வடிவம்
.. அளவடியிற் குறைந்த பாட்டென்று கொண்டு
.. சிந்தியல் வெண்பாவையும் குறிப்பதாகச் சொல்லுவார்.
* கைக்களை (ஒருதலைக் காமம்) வடிவம் பற்றி இளம்பூரணர்
.. கைக்கிளை என்பது கைக்கிளைப் பொருண்மை,
.. மேற்சொல்லப்பட்ட வெண்பாக்கள் இப்பொருள் மேல்வரின்,
.. அவை கைக்கிளை வெண்பா எனப்படும்...
.. கைக்கிளை வெண்பா யாப்பினால் வரும் என்றார்.
..
.. கைக்கிளை ஆசிரியப்பாவால் வரப்பெறாது,
.. அங்ஙனம் வரின் அது பாடாண் பாட்டுக் கைக்கிளை யாகும்.
.. பாடாண் திணையில் பாடுதற்குரிய ஓர் ஆண்மகனின்
.. வீரம், புகழ், கொடை இவற்றைச் சிறப்பித்துப் பாடுவர்.
> மருட்பா
.. கைக்கிளை தானே வெண்பா வாகி
.. ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே
.. என்றதால், இது பின்னர் மருட்பா வாயிற்று.
* பரிபாட்டு (பரிபாடல்) என்பது பரிந்த பாட்டு
.. அதாவது, ஒரு வெண்பாவாக வருதலின்றிப்
.. பல உறுப்புகளோடு தொடர்ந்து
.. ஒரு பாட்டாகி முற்றுப்பெறுவது என்பார் இளம்பூரணர்.
> கலிப்பா
.. கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய உறுப்புகளையும்,
.. சொற்சீரடி, முடுகியலடி ஆகியு உள்ளுறுப்புகளையும்
.. பெற்று வரும் பரிபாடல் பிற்காலத்தில்
.. கலிப்பாவாக வளர்ச்சி பெற்றது.
* அங்கதப் பொருண்மை பற்றிப் பாடப்பெறும்
.. வெண்பா அங்கத வெண்பா வாகும்.
.. அங்கதம் பொதுவாக வசைபாடுவதாகும்.
.. இது புகழ்போன்று வசையாதலும்,
.. வசைபோன்று புகழாதலும் உண்டு.
.. செம்பொருள், பழிகரப்பு என்று அங்கதம் இருவகைப்படும்.
.. வெளிப்படையாகக் கூறுவது செம்பொருள் அங்கதம்.
.. சொல்லவந்ததை மறைத்துக் கூறின், பழிகரப்பு.
திருக்குறள் சான்றுகள்
(குறள் வெண்பா)
செம்பொருள் அங்கதம்
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்.
பழிகரப்பு அங்கதம்
தேவ ரனையர் கள்வர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
★★★★★