Friday, August 31, 2018

வெண்பா செய்தித் திரட்டு - 04.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

வெண்பா செய்தித் திரட்டு - 04.

சங்கம் மருவிய கால வெண்பா யாப்பு 

சங்கம் மருவிய காலத்தை 
.. வெண்பாவின் பொற்காலம் எனலாம். 
.. ஒரு நூல் முழுவதும் வெண்பாவில் 
.. யாக்கப்பட்டது இக்காலத்தில் தான்.

சங்கம் மருவிய காலத்தெழுந்த நூல்கள் 
.. பதினெண் கீழ்க்கணக்கு என்னும் 
.. பெயரில் வழங்கப்படுகின்றன. 
.. செய்யுள் அளவிற் சிறியதாக அமைவதாலும், 
.. அறம், பொருள், இன்பம் என்னும் 
.. நெறிகளைப் பற்றிக் கூறுவதாலும் இப்பெயர். 
.. இவற்றுள் பெரும்பான்மை நீதி நூல்களாகும். 

இன்றும் வெண்பா யாப்பு, அறிவுரைச் செய்யுள் புனைவதற்கே பெரிதும் கையாளப்படுகிறது!

பயிற்சி 3.09. பதினெண் கீழ்க்கணக்கு வாய்பாட்டு வெண்பா அறிதல்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பெயரிட்டுச் சொல்லும் 
.. பழைய வெண்பா வொன்றுண்டு.
.. அது யாதெனக் கண்டறிந்து
.. அதன் அடிகளைச் 
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.


நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பதூஉம்
கைந்நிலையு மாக்க்கீழ்க் கணக்கு.

வெண்பா செய்தித் திரட்டு - 03.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

வெண்பா செய்தித் திரட்டு - 03.

சங்க இலக்கியத்தில் வெண்பா யாப்பு
கலித்தொகை
குறள் வெண்பா
யானுற்ற எவ்வம் உரைப்பில் பலர்துயிற்றும்
யாமநீ துஞ்சலை மன். ... (கலித்.14:36-37)

சிந்தியல் வெண்பா
ஆறு விலங்கித் தெருவின்க ணின்றொருவன்
கூறுஞ்சொல் வாயெனக் கொண்டதன் பண்புணராந்
தேற வெளிதென்பா நாம். ... (கலித்.60:23-25)

இன்னிசை வெண்பா
வறந்தெற மாற்றிய வானமும் போலுந்
நிறைந்தென்னை மாய்ப்பதோர் வெள்ளமும் போலும்
சிறந்தவன் தூவற நீப்பப் பிறங்கிவந்
தென்மேல் நிலைஇய நோய். ... (கலித்.146:14-17)

நேரிசை வெண்பா
ஒடுங்கா வெழில்வேழம் வீழ்பிடிக் குற்ற
கடுஞ்சூல் வயாவிற் கமர்ந்து - நெடுஞ்சினைத்
தீங்கட் கரும்பின் கழைவாங்கு முற்றாரி
ணீங்கல மென்பான் மலை. ... (கலித்.40:26-29)

பஃறொடை வெண்பா
கொலையுண்கட் கூறெயிற்றுக் கொய்தளிர் மேனி
யினைவனப்பின் மாயோய் நின்னிற் சிறந்தார்
நிலவுலகத் தின்மை தெளிநீ வருதி
மலையொடு மார்பமைந்த செல்வ னடியைத்
றலையினாற் றொருட்டுற்றேன் சூள். ... (கலித்.108:46-50)

பரிபாடல்
குறள் வெண்பா
மாறுமா றுற்றனபோன் மாறெதிர் கோடல்
மாறற்றான் குண்ற முடைத்து. ... (பரி.17:20-21)

சிந்தியல் வெண்பா
கானலங் காவுங் கயமுந் துருத்தியுந்தேன்
தேனுண்டு பாடத் திசைதிசைப் பூநலம்
பூத்தன்று வையை வரவு. ... (பரி.16:17-19)

இன்னிசை வெண்பா
ஆமா மதுவொக்குங் காதலன் காமம்
ஒருக்க வொருதன்மை நிற்குமோ வொல்லைச்
சுருக்கமு மாக்கமுஞ் சூளுறல் வைஅயைப்
பெருக்கமன்றோ பெற்றாய் பிழை. ... (பரி.6:71-74)

நேரிசை வெண்பா
முன்புற் றறியா முதற்புணர்ச்சி மொய்குழலை
இன்புற் றணிந்த வியலணியும் - வன்பணியும்
நாணேனுந் தொல்லை யணியென்ன நன்னுதலை
... ... னந்து. ... (பரி.திர.5)

பஃறொடை வெண்பா
ஒய்யப்போ வாளை உறழ்ந்தோனிவ் வாணுதல்
வையை மடுத்தாற் கடலெனத் - தெய்ய
நெறிமண னேடினர் செல்லச்சொல் லேற்று
செறிநிறைப்பெண் வல்லுறழ் பியாது தொடர்பென்ன
மறலினாள் மாற்றாள் மலர். ... (பரி.20:41-45)

பத்துப்பாட்டு
இன்னிசை வெண்பா
தூஉஉத் தீம்புகை தொல்விசும்பு போர்த்ததுகொல்
பாஅய்ப் பகல்செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்
மாஅ மிசையான்கொ னன்ன னறுநுதலார்
மாஅமை எல்லாம் பசப்பு. ... (மலைபடுகடாம்)

நேரிசை வெண்பா
வண்டடைந்த கண்ணி வறராய்ச்சி வாணெடுங்கண்
சென்றடைந்த நோக்க மினிப்பெறுவ - தென்றுகொல்
கன்றெடுத் தோச்சிக் கனிவிளவின் காய்குத்துக்
குன்றெடுத்து நின்ற நிலை. ... (முல்லைப்பாட்டு.1)

★★★★★

Thursday, August 30, 2018

தெரியுமா உங்களுக்கு?! - 006

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
தெரியுமா உங்களுக்கு?! - 006

அகத்திணை, புறத்திணை ஆகிய இரு பிரிவுகளில்
.. புறத்திணையைப் புறப்பொருள் வெண்பாமாலை
.. பன்னிரண்டு திணைகளாகப் பகுத்துள்ளவற்றில்
.. ஏழு பூக்கள் பெயர்களைக் கொண்டு
.. இரு மன்னர்களுக்கிடையே 
.. கொள்ளும் போர் நெறிகளில்
.. அவர்களும் சேர்ந்தோரும் அணிவதாகச் சொல்கிறது.

இங்ஙனம் இரு மன்னர்களின் படையினர் அணியும் மலர்கள்
.. வெட்சி - படையெடுத்து ஆநிரை கவர்தல் செய்வோர்
.. கரந்தை - ஆநிரை மீட்டல் செய்வோர்
.. வஞ்சி - பகைவர்மேல் போர் தொடுப்போர்
.. காஞ்சி - போரில் கலந்துகொள்ளாதோர், காயமடைந்தோர் காத்தல் செய்வோர்
.. உழிஞை - எதிரியின் கோட்டையை முற்றுகையிட்டுத் தகர்ப்போர்
.. நொச்சி - கோட்டையைக் காப்போர்
.. தும்பை - உக்கிரமாகப் போர் செய்வோர்
.. வாகை - போரில் வெற்றி பெற்றோர்.

(மேல்விவரம்: http://thamizinperumai.blogspot.in/2013/07/blog-post_3851.html)
இந்தச் செய்தியைக் குறிக்கும் வெண்பா வொன்றுண்டு.

பயிற்சி 3.08 புறத்திணை போர்நெறி வாய்பாட்டு வெண்பா அறிதல்

புறத்திணையின் போர்நெறிகளில் சூடும் மலர்களை
.. மேற்சொன்னவாறு காட்டும்
.. வாய்ப்பாட்டு வெண்பா வொன்றுளது.
.. அது யாதெனக் கண்டறிந்து
.. அதன் அடிகளைச் 
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.


வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
யதுவளைத்த லாகு முழிஞை யதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்.

தெரியுமா உங்களுக்கு?! - 004

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
தெரியுமா உங்களுக்கு?! - 004

பரிபாடலில்
.. மொத்தம் 70 பாடல்கள் இருந்தன.
.. அவற்றில் 22 பாடல்களே கிடைத்துள்ளன.
.. தொகுக்கப்பெற்ற எழுபது பாடல்கள்
.. திருமால்லுக்கு 8
.. செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31
.. காடுகாளுக்கு (காளிக்கு) 1
.. வையைக்கு 26
.. மதுரைக்கு 4
.. என்ற எண்ணிக்கையில் அமைந்திருந்தன.

இந்தச் செய்தியைக் குறிக்கும் வெண்பா வொன்றுண்டு.

பயிற்சி 3.06 பரிபாடல் அமைதி வாய்பாட்டு வெண்பா அறிதல்

பரிபாடல் அமைதியை
.. மேற்சொன்னவாறு காட்டும்
.. வாய்ப்பாட்டு வெண்பா வொன்றுளது.
.. அது யாதெனக் கண்டறிந்து
.. அதன் அடிகளைச் 
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.


திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டு காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்.
தெரியுமா உங்களுக்கு?! - 005 அகத்திணை, புறத்திணை ஆகிய இரு பிரிவுகளில் .. அகத்திணையைத் தொல்காப்பியம் .. ஏழு பிரிவுகளாக வகுத்துள்ளது: .. கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், .. நெய்தல், பாலை, பெருந்திணை. .. கைக்கிளை என்பது ஒருதலைக் காமம் .. பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். .. மற்றைந்தும் ஐந்து நிலத்திணகளுடன் .. இணைத்துக் கூறப்பட்டமை காண்க. அகவாழ்வின் ஐந்து அம்சங்களும் .. அவற்றின் நிலத்திணகளும் இவை: .. புணர்தல் - குறிஞ்சி .. இருத்தல் - முல்லை .. ஊடல் - மருதம் .. இரங்கல் - நெய்தல் .. பிரிதல் - பாலை. இந்தச் செய்தியைக் குறிக்கும் வெண்பா வொன்றுண்டு. பயிற்சி 3.07 அகத்திணை வாய்பாட்டு வெண்பா அறிதல் அகத்திணையின் ஐந்து அம்சங்களை .. மேற்சொன்னவாறு காட்டும் .. வாய்ப்பாட்டு வெண்பா வொன்றுளது. .. அது யாதெனக் கண்டறிந்து .. அதன் அடிகளைச் .. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.
போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கஞ்சே ரூட லணிமருதம் - நோக்குங்கால்
இல்லிருத்தல் முல்லை இரங்கல் நறுநெய்தல்
சொல்லிருத்த நூலின் தொகை.

போக்கெலாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கமளி யூட லணிமருதம் - நோக்கொன்றி
இல்லிருத்தல் முல்லை யிரங்கியபோக் கேர்நெய்தல்
புல்லுங் கவிமுறைக் கொப்பு.

தெரியுமா உங்களுக்கு?! - 002

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
தெரியுமா உங்களுக்கு?! - 002

ஐங்குறுநூறு தொகுப்பு
.. ஐந்து திணைகளாக ஒவ்வொன்றுக்கும் 
.. நூறு செய்யுள்கள் கொண்டதாக உள்ளது.
.. இவற்றைப் படியோர் ஐந்து புலவர்கள்:
.. குறிஞ்சி - கபிலர்
.. முல்லை - பேயனார்
.. மருதம் - ஓரம்போகியார்
.. நெய்தல் - அம்மூவனார்
.. பாலை - ஓதலாந்தையார்.

இந்தச் செய்தியைக் குறிக்கும் வெண்பா வொன்றுண்டு.

பயிற்சி 3.04 ஐங்குறுநூறு புலவர்கள் பெயர்

ஐங்குறுநூறு தொகுப்பின் 
.. ஐந்து புலவர்பேர் காட்டும் 
.. வாய்ப்பாட்டு வெண்பா வொன்றுளது.
.. அது யாதெனக் கண்டறிந்து
.. அதன் அடிகளைச் 
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.


மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு.
தெரியுமா உங்களுக்கு?! - 003 கலித்தொகை .. ஐந்து திணைகளாக உள்லது. .. இவற்றைப் படியோர் ஐந்து புலவர்கள்: .. குறிஞ்சி - கபிலர் .. முல்லை - சோழன் நல்லுருத்திரனார் .. மருதம் - மருதனிள நாகனார் .. நெய்தல் - நல்லந்துவனார் .. பாலை - பெருங்கடுங்கோ. இந்தச் செய்தியைக் குறிக்கும் வெண்பா வொன்றுண்டு. பயிற்சி 3.05 கலித்தொகை புலவர்கள் பெயர் வாய்பாட்டு வெண்பா அறிதல் கலித்தொகையின் .. ஐந்து புலவர்பேர் காட்டும் .. வாய்ப்பாட்டு வெண்பா வொன்றுளது. .. அது யாதெனக் கண்டறிந்து .. அதன் அடிகளைச் .. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.
பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருத - மருஞ்சோழன்
நல்லுருத்தி ரன்முல்லை நல்லந் துவன்நெய்தல்
கல்விவலார் கண்ட கலி.

தெரியுமா உங்களுக்கு?! - 001

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
தெரியுமா உங்களுக்கு?! - 001

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற 
.. ஐந்து திணைகளில் பாடப்பெற்ற 
.. அகநானூற்றுச் செய்யுள்களில் 
.. ஒவ்வொரு திணைப் பாடலும் 
.. ஒன்று அல்லது மேற்பட்ட 
.. குறிப்பிட்ட எண்ணில் முடியும்!

இங்ஙனம்:
1, 3, 5, 7. 9 எண்கொண்டு முடியும் பாடல்கள் - பாலை
4 எண்கொண்டு முடியும் பாடல்கள் - முல்லை
2, 8 எண்கொண்டு முடியும் பாடல்கள் - குறிஞ்சி
6 எண்கொண்டு முடியும் பாடல்கள் - மருதம்
10-ன் அடுக்கு எண்கொண்டு முடியும் பாடல்கள் - நெய்தல்

இந்தச் செய்திகளைக் காட்டும் வெண்பாக்கள் மூன்றுண்டு. 
அவற்றைக் கண்டறிவோம்.

பயிற்சி 3.03 அகநானூறு திணை-பாடலெண் வாய்பாட்டு வெண்பா அறிதல்

அகநானூறு திணை காட்டும் பாடல் எண்கள் காட்டும்
.. வாய்ப்பாட்டு வெண்பாக்கள் மூன்று உள்ளன.
.. அவை யாவையெனக் கண்டறிந்து
.. அவற்றுள் ஒன்றை அதன் அடிகளைச் 
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.


வியமெல்லாம் வெண்டே ரியக்கங் கயல்மலர்ந்த
தாமரையா றாகத் தகைபெறீஇக் காமர்
நறுமுல்லை நான்காக நாட்டி வெறிமாண்ட
வெட்டு மிரண்டுங் குறிஞ்சியாக் குட்டத்
திவர்திரை பத்தா யியற்பட யாத்தான்
தொகையி னடியதனைத் தோலாச் செவியான்
வகையின் நெடியதனை வைப்பு. ... 1

ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை யோதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - யன்றியே
யாறாம் மருத மணிநெய்த லையிரண்டு
கூறா தவைகுறிஞ்சிக் கூற்று. ... 2

பாலை வியமெல்லாம் பத்தாம் பனிநெய்த
னாலு நனிமுல்லை நாடுங்கான் - மேலையோர்
தேறு மிரண்டெட் டிவைகுறிஞ்சி செந்தமிழி
னாறு மருத மகம். ... 3

Wednesday, August 29, 2018

பயிற்சி 3.02.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

வெண்பா செய்தித் திரட்டு - 02.

பயிற்சி 3.01 எட்டுத்தொகை வாய்பாட்டு வெண்பா அறிதல்

எட்டுத்தொகை நூல்களைப் பெயரிட்டுச் சொல்லும் 
.. பழைய வெண்பா வொன்றுண்டு. 
.. அது யாதெனக் கண்டறிந்து
.. அதன் அடிகளைச் 
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.


நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்துங் கலியோ டகம்புறமென்
றித்திறத்த வெட்டுத் தொகை.
பயிற்சி 3.02. பத்துப்பாட்டு வாய்பாட்டு வெண்பா அறிதல் பத்துப்பாட்டு நூல்களைப் பெயரிட்டுச் சொல்லும் .. பழைய வெண்பா வொன்றுண்டு. .. அது யாதெனக் கண்டறிந்து .. அதன் அடிகளைச் .. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

வெண்பா செய்தித் திரட்டு - 02.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி 3. வெண்பாவின் வளர்ச்சி நிலைகள்

தொல்காப்பியர் காலத்தில் வெண்பா ஒரு தனி செய்யுள் வடிவாக இல்லாமல் பிறவகைப் பாட்டுகளுள் மறைந்திருந்தது. சங்க இலக்கியத்தில் காணும் வெண்பா யாப்புகள் இவ்வகையினவே. கீழ்வரும் செய்தித் திரட்டுப் பகுதிகளில் காணும் வெண்பா யாப்பு வரிகளைப் படித்து அவற்றின் சொற்செறிவு, ஒலிநயம் கண்டு இன்புறுக.

1. தொல்காப்பியர் கால வெண்பா யாப்பு 

* தொல்காப்பியர் காலத்தில் வெண்பா யாப்பினவாக
.. ஐந்துவகைப் பாக்கள் இருந்தன:
.. நெடுவெண்பாட்டு, குறுவெண்பாட்டு,
.. கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச் செய்யுள்.

> பஃறொடை வெண்பா
* நெடுவெண்பாட்டு பன்னிரண்டடி
.. என்று தொல்காப்பியம் சொன்னாலும்,
.. அவ்வடிவம் ஐந்தடி முதல் பன்னிரண்டடி வரை
.. பிற்காலத்தில் பாடப்பெற்றன.
.. இவ்வடிவே பின்னர் பஃறொடை வெண்பா வானது.

> குறள், சிந்தியல் வெண்பா
* குறுவெண்பாட்டிற் களவெழு சீரே
.. என்ற தொல்காப்பிய நூற்பாவால்
.. பின்னூலார் ஓரடி முக்கால் என்று ஓதிய
.. குறள் வெண்பாவே இவ்வடிவம் என்று கொள்வர்.
.. ஆயினும், இளம்பூரணர் இவ்வடிவம்
.. அளவடியிற் குறைந்த பாட்டென்று கொண்டு
.. சிந்தியல் வெண்பாவையும் குறிப்பதாகச் சொல்லுவார்.

* கைக்களை (ஒருதலைக் காமம்) வடிவம் பற்றி இளம்பூரணர் 
.. கைக்கிளை என்பது கைக்கிளைப் பொருண்மை,
.. மேற்சொல்லப்பட்ட வெண்பாக்கள் இப்பொருள் மேல்வரின்,
.. அவை கைக்கிளை வெண்பா எனப்படும்...
.. கைக்கிளை வெண்பா யாப்பினால் வரும் என்றார்.
..
.. கைக்கிளை ஆசிரியப்பாவால் வரப்பெறாது,
.. அங்ஙனம் வரின் அது பாடாண் பாட்டுக் கைக்கிளை யாகும்.
.. பாடாண் திணையில் பாடுதற்குரிய ஓர் ஆண்மகனின்
.. வீரம், புகழ், கொடை இவற்றைச் சிறப்பித்துப் பாடுவர்.

> மருட்பா
.. கைக்கிளை தானே வெண்பா வாகி
.. ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே
.. என்றதால், இது பின்னர் மருட்பா வாயிற்று.

* பரிபாட்டு (பரிபாடல்) என்பது பரிந்த பாட்டு
.. அதாவது, ஒரு வெண்பாவாக வருதலின்றிப்
.. பல உறுப்புகளோடு தொடர்ந்து
.. ஒரு பாட்டாகி முற்றுப்பெறுவது என்பார் இளம்பூரணர்.
> கலிப்பா
.. கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய உறுப்புகளையும்,
.. சொற்சீரடி, முடுகியலடி ஆகியு உள்ளுறுப்புகளையும்
.. பெற்று வரும் பரிபாடல் பிற்காலத்தில்
.. கலிப்பாவாக வளர்ச்சி பெற்றது.

* அங்கதப் பொருண்மை பற்றிப் பாடப்பெறும்
.. வெண்பா அங்கத வெண்பா வாகும்.
.. அங்கதம் பொதுவாக வசைபாடுவதாகும்.
.. இது புகழ்போன்று வசையாதலும், 
.. வசைபோன்று புகழாதலும் உண்டு.
.. செம்பொருள், பழிகரப்பு என்று அங்கதம் இருவகைப்படும்.
.. வெளிப்படையாகக் கூறுவது செம்பொருள் அங்கதம்.
.. சொல்லவந்ததை மறைத்துக் கூறின், பழிகரப்பு.

திருக்குறள் சான்றுகள்
(குறள் வெண்பா)

செம்பொருள் அங்கதம்
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்.

பழிகரப்பு அங்கதம்
தேவ ரனையர் கள்வர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

★★★★★

வெண்பா செய்தித் திரட்டு - 01.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
1. புலவர்க்கு வெண்பா புலி!

புலவர்க்கு வெண்பா புலி என்றார் ஔவையார்!

காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்
பேசுமுலா விற்பெதும் பைப்புலி - ஆசு
வலவர்க்கு வண்ணம் புலியாமற் றெல்லாப்
புலவர்க்கும் வெண்பா புலி.
--தனிப்பாடல்

பொருள்
உலகில் பிள்ளைக்கவிப் புலவர்க்கு 
.. அம்புலிப் பருவம் பாடுவது புலியாம்; 
சிறப்பாகப் பேசப்படும் உலாப் பாடும் புலவர்க்கு 
.. பெதும்பைப் பருவம் பாடுவது புலியாம்;
ஆசு கவியோர்க்கு (நினைத்தவுடன் பாடும் கவியோர்க்கு) 
.. வண்ணப் பாடல் புலியாம்;
மற்றெல்லாப் பாவலர்க்கும் 
.. வெண்பா பாடுதல் புலியாம் 
.. (அச்சத்துடன் எதிர்கொள்ளும் செயலாகும்).

கணினியின் வரவாலோ என்னவோ
.. இன்று வெண்பா புலி
.. மரபு கவிஞர் ஒவ்வொருவரும் 
.. முதலில் விழைந்து பயின்று எழுதிப் 
.. பாராட்டும் செல்லப் பூனையாகி விட்டது!

2. வெண்பா நூல்கள்
(புலவர் குழந்தையின் ’தொடையதிகாரம்’ நூலிலிருந்து)