Sunday, January 6, 2019

பயிலிழை குவெ.13. சொற்சிலம்பக் குறள்!

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.13. சொற்சிலம்பக் குறள்!

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/264682870928918/
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.13. சொற்சிலம்பக் குறள்!
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. முதலடி முதற்சீரில் காணும் சொல் ஆங்கோர் பொருளும்
.. அதேசொல் முதற்சீராய் ஈற்றடியில் வேறு பொருளும்
.. தருமாறு அமைத்தும்
.. அடிகளில் பொழிப்புமோனை அமைத்தும்
.. ஒருவிகற்பக் குறள் வெண்பாக்கள்
.. ஐந்து (5) புனைவோம்.

ஒருவர் பத்து (10) குறட்பாக்கள்
.. வரை புனைந்தெழுதலாம். ஆயின்,
.. அவற்றுள் ஐந்து பாக்கள் மட்டுமே மதிப்பீடு பெறும்.

தொகுப்பு
03/08/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
சொற்சிலம்பக் குறள்!
(குறள் வெண்பா)

வண்டுகள் உட்புக வண்டுகள் கீழ்விழும்
வண்டுகள் கொள்ளும் மலர். ... 1

[வண்டுகள் பொருள் முறையே: வண்டினங்கள், 
வண்-துகள் = மகரந்தம், வண்டு-கள்]

கற்காலம் தொட்டுக் கலைசெய்த சிற்பமது
கற்காலம் கொள்ளாக் கலை. ... 2

[கற்காலம் = கற்கும் காலம், கல்லைக் காலம்]

கோபுரம் அம்பெய்து கொண்ட சிவன்கொடை
கோபுரம் என்பதோ கொல்? ... 3

[கோபுரம் = வானில் உலவும் முப்புரம், 
குயவன் செய்த பாண்டமாம் உடல்; கொல் = அசைச்சொல்]

வாத்தியார் என்றனன் மாணவன் நண்பனிடம்
வாத்தியார் என்றானே வம்பு! ... 4

[வாத்தியார் = ஆசிரியர், வாத்து + யார் (குற்றியலிகரப் புணர்ச்சி)]

இன்றமிழ் ஆடுரையில் எத்தனை குற்றங்கள்!
இன்றமிழ் தில்லை இழிவு! ... 5

[இன்றமிழ் = இனிய தமிழ், இன்று அமிழ்(து); ஆடுரை = உரையாடல்]

மண்ணுடை தோண்டி வளிமங்கள் கொள்ளுலகே!
மண்ணுடை யாகும் வறள். ... 6

[மண்ணுடை = மண்ணின் உடைமை, மண்ணின் உடையாம் பசுமை]

ஆவுடையார் மட்டுமென்றே ஆவுடையார் கோவிலிலே
ஆவுடையார் மேவும் அருள். ... 7

[ஆவுடையார் = சிவலிங்கத்தின் பீடம், ஆ-உடையார் (பசுபதி)]

புத்தகம் ஏற்றும் பொதிசுமைக் கல்வியில்
புத்தகம் ஓடும் புரை. ... 8

[புத்தகம் = பனுவல் (நூல்), புத்து+அகம்]

எத்தனம் இல்லாதே எத்தனையோ சேர்த்தாயே
எத்தனம் கூடவரு மோ? ... 9

[எத்தனம் = முயற்சி, எந்த செல்வம்]

வந்தது போவது வந்தது போதுமென்றேன்
வந்தது நின்ற வளம்! ... 10

[வந்தது = செல்வம், ஞானம்]

--குருநாதன் ரமணி

★★★★★

No comments:

Post a Comment