Sunday, January 20, 2019

பயிலிழை குவெ.14. பெயர்ச்சொற் குறள்!

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.14. பெயர்ச்சொற் குறள்!

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/271332780263927/
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.14. பெயர்ச்சொற் குறள்!
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. குறள் வெண்பாவில் ஏழு (7) சீர்களில்
.. குறைந்தது ஆறு (6) சீர்களில்
.. பெயர்ச்சொற்கள் வருமாறு அமையும்
.. ஒருவிகற்பப் பொழிப்பு மோனைக் குறட்பாக்கள்
.. ஐந்து (5) புனைந்தெழுதுவோம்.

பெயர்ச்சொல் என்றது
.. பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என்னும்
.. ஆறுவகைப் பெயர்ச்சொற்களாக அமையலாம்.
.. ஒரே சீரில் இருபெயர்கள் வரின் அவை ஒன்றாகக் கொள்ளப்படும்.

தொகுப்பு
10/08/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
பெயர்ச்சொற் குறள்!
(குறள் வெண்பா)

பாலத்தில் கன்று பசுமாடு பையாநீ
சாலையில் உன்கண்ணை வை! ... 1

ஞாயிறு திங்களுடன் செவ்வாய் புதன்பின்
வியாழனுடன் வெள்ளி சனி. ... 2

பழுதையைப் பாம்பென்பர் பாரில் பலபேர்
புழுவெல்லாம் பூமியா ளும். ... 3

கண்மூக்கு தோலுடல் காதுவாய் என்றுவகை
எண்ணில் புலன்பொறி யைந்து. ... 4

கடல்மலை மண்நதி காடுவயல் மாக்கள்
உடலுருவாம் உள்ளம் உலகு. ... 5

வீடு மனைமக்கள் வீழ்சுற்றம் நட்பென்னும்
கூடு மனிதர் குலம். ... 6

குடிமகன் போதை குலமகள் வாதை
விடிவுறும் காலமென் றோ? ... 7

அன்பும் அறமும் அகம்கொளின் மானிடர்க்குத்
துன்பம் துயர்போம் குறைந்து. ... 8

சங்கம் சமணம் சமயசைவ வைணவம்
மங்கலம் வேராம் மரபு. ... 9

மாபலா செவ்வாழை மாதுள மங்கையே
வாகலா என்துணை யாய்! ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

No comments:

Post a Comment