சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.15. அலங்காரக் குறள்: உவமையணி
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/278034236260448/உவமையணி
குப்பனும் சுப்பனும் கவிஞர்க் கோமகனும் எளிதில் பயன்படுத்துவது உவமையணி.
போல என்ற உவம உருபு மூலம் இரு பொருள்களை இணைத்து நம் பேச்சிலும் உவமையாக அடிக்கடி கையாள்கிறோம். உவமையணியின் கூறுகள் நான்கு: உவமானம், உவமேயம், உவமவுருபு, பொதுத்தன்மை.
பவளம் போன்ற செவ்வாய் => இது உவமைத் தொடர் பவளம் => உவமையாகும் பொருள் => உவமானம் செவ்வாய் => உவமிக்கப்படும் (ஒப்பிடப்படும்) பொருள் => உவமேயம் போன்ற => போல => உவம உருபு செம்மை => பொதுத்தன்மை
பவளம் போன்ற செவ்வாய் என்பதில் பொதுத்தன்மை வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது. அதை மறைத்து பவளம் போன்ற வாய் என்றும் கூறலாம். இதையே பவளவாய் என்றால் அது உவமைத் தொகையாகி, பவளம் போலும் வாய் என்று விரியும்.
இந்த உவமையை
(செவ்)வாயாம் பவளம் என்று எழுதினால் அது உருவக விரியாகும்.
(செவ்)வாய்ப் பவளம் => என்றால் (செவ்)வாயாகும் பவளம் என்று விரிந்து அது உருவகத் தொகையாகும்.
உவமையில், உவமையாகும் பொருள் முதல்நிற்கும். உருவகத்தில் உவமிக்கப்படும் பொருள் முதலில்.
உவம உருபுகள்தொல்காப்பியம் கூறும் உவம உருபுகள் மொத்தம் 36. அவை கீழே. அவற்றுள் இன்று எல்லோர்க்கும் விளங்குவன உடுக்குறி (*)யுடன்.
அன்ன*, ஆங்க, உறழ, எள்ள, என்ற*, என்ன*, ஏய்ப்ப, ஒட்ட, ஒடுங்க, ஒப்ப*, ஒன்ற, ஓட, கடுப்ப, கள்ள, காய்ப்ப, தகைய*, நடுங்க, நந்த, நளிய, நாட, நிகர்ப்ப*, புரைய, புல்ல, பொருவ, பொற்ப, போல*, மதிப்ப, மருள, மறுப்ப, மாற்ற, மான, வியப்ப, விழைய, விறப்ப, வீழ, வெல்ல.
இன்றைய வழக்கில் சில உவம உருபுகள்
போல, மாதிரி, கணக்கா,
உவமை அணியில் பல வகைகள் உண்டு. அவற்றுள் நான்கை ஐந்து குறள்களில் நாம் இப்பயிலரங்கத்தில் கையாள்கிறோம்.
1. விரி உவமையணிஉவமானம், உவமேயம், உவமவுருபு மூன்றும் வெளிப்படையாக அமையும். பொதுத்தன்மை சொல்லப்படுவதாகவோ சுட்டப்படுவதாகவோ அமையலாம்.
திருக்குறள் சான்றுகள் அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். [உவமானம் => பளிங்கு; உவமேயம் => முகம்; உவமவுருபு => போல்] கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து. [உவமானம் => கொக்கு, (அதன்) குத்து; உவமேயம் => கூம்பும் பருவம், சீர்த்தவிடம்; உவமவுருபு => ஒக்க]2. தொகை உவமையணி
பவளவாய், தேன்மொழி என்பனபோல் இதில் உவமானம் உவமேயம் அருகருகே அமைந்து உவம உருபும், பொதுத்தன்மையும் மறைந்து நிற்கும்.
மலர்விழி தேன்மொழி மாலதியைக் கண்டேன் நிலவுமுகம் நோக்கியே நின்று.3. விரி, தொகை கலப்புவமையணி
மலர்ப்பாதம் போற்ற மழைபோல் அருள்வார் நிலையுயர் வாழ்வாகும் நேர்.4. எடுத்துக்காட்டுவமையணி
உவமானமும் உவமேயமும் தனித்தனி வாக்கியங்களாக அமையும். இவ்விரண்டு வாக்கியங்களுக்கும் இடையில் போல என்ற சுட்டிக்காட்டும் உவம உருபு மறைந்து நிற்கும்.
திருக்குறள் சான்று அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. அகர முதல எழுத்தெல்லாம் (அதுபோல) ஆதி பகவன் முதற்றே உலகு. உவமான வாக்கியத்தை அடுத்து உவமேய வாக்கியம் வருமுன் அதுபோல என்னும் உவம உருபு மறைந்து நிற்றல் காண்க.5. இல்பொருளுவமையணி
உலகில் இல்லாத பொருளை உள்ளதுபோல் பாவித்து அதனை உவமையாக்கிக் கூறுவது.
அமிழ்தினும் ஆற்ற வினிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.உலகில் இல்லாத அமிழ்து என்னும் கற்பனைப் பொருளைக் கூழுக்கு உவமையாக்கியது.
***** அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிலரங்கில் பங்கேற்கலாம். நினைவிற் கொணர வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா விண்டறும் ஈறடி யில். ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை வரும்குறட் பாவே வளம். பயிலிழை குவெ.15. அலங்காரக் குறள்: உவமையணி பாடுபொருள்: கவிஞர் விருப்பம் பாவகை: குறள் வெண்பா வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா விரும்பிய பாடுபொருளில் .. ஒவ்வொரு குறளிலும் .. ஒன்று முதல் மூன்று உவமைகள் வரை அமையுமாறு .. ஒரு விகற்பப் பொழிப்பு மோனைக் குறளாக .. மேற்சொன்ன ஐந்து வகைகளில் .. வகைக்கு ஒன்றாக .. மொத்தம் ஐந்து குறட்பாக்கள் புனைந்தெழுதுவோம். எடுத்துக்காட்டுவமையணிக் குறளில் .. முதல் வாக்கியத்தில் உவமானத்தை விரித்தும் .. இரண்டாவது வாக்கியத்தில் உவமேயத்தை விரித்தும் .. இடையில் உவம உருபை மறைத்தும் .. புனைதல் வேண்டும் (சான்றுக் குறளில் உள்ளது போல). ஒருவர் பத்து (10) குறட்பாக்கள் .. வரை புனைந்தெழுதலாம். ஆயின், .. அவற்றுள் ஐந்து பாக்கள் மட்டுமே மதிப்பீடு பெறும். தொகுப்பு 17/08/2018 (வெள்ளி) இரவு வரை .. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை .. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் .. பின்னர் வெளியிடப்படும். ***** அடியேன் பங்காக உவமையணி (குறள் வெண்பா) உவம உருபுடன் சேல்போல் விழியாள் சிரித்தனள் என்முன்னே வால்போல் புடவைத் தலைப்பு. ... 1 மலையொக்கும் துன்பம் மறையும் பனிபோல் நிலையொப்பி உள்ளம் நிறுத்து. ... 2 உவமைத் தொகையாக மலர்விழி தேன்மொழி மாலதியைக் கண்டேன் நிலவுமுகம் நோக்கியே நின்று. ... 3 கணைவிழி தைக்கக் கனிமனம் கொண்டேன் அணைவருநீர் அன்பினில் ஆழ்ந்து. ... 4 இரண்டும் கலந்து மலர்ப்பாதம் போற்ற மழைபோல் அருள்வார் நிலையுயர் வாழ்வாகும் நேர். ... 5 வண்டுவிழி என்மேலே வட்டம்போல் சுற்றுமனம் கண்டுமொழி காதல் வலை. ... 6 எடுத்துக்காட்டுவமையணி ஐம்பூதம் ஆளும் அகிலம் மனிதனின் ஐம்புலன் ஆளும் மனம். ... 7 நேற்றின்று நாளையாய் நேரம் உலகுறும் தோற்றங்கள் மாறும் தொலைந்து. ... 8 இல்பொருளுவமையணி திங்களுள் தீப்போல் சினத்த முகத்துடன் மங்கையவள் முன்நின்றாள் வந்து. ... 9 குதிரையின் கொம்பாய்க் குளிர்கதி ரோன்போல் மதுரையில் கோடை மழை. ... 10 --குருநாதன் ரமணி ★★★★★
No comments:
Post a Comment