Sunday, January 6, 2019

பயிலிழை குவெ.13. சொற்சிலம்பக் குறள் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
குவெ.13. சொற்சிலம்பக் குறள் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/264682870928918/
கவிஞர் திசேசு

வரும்படி உண்டெனில் வாராது மன்றம்
வரும்படி உள்ளதெனில் வா. ... 1

கவிதைக்கும் சொல்லுடுத்து கற்பனையால் சூழும்
கவிதை பிறக்கும் கனிந்து. ... 2

ஆலமடி செல்லவிடா அன்னைமகன் ஆட்கொள்ள
ஆலமடி கொண்டான் அமர்ந்து. ... 3
(ஆலம் = ஆலகால விஷம், ஆலமரம்)

வசப்பட்டால் நீர்பிழைத்தீர் இல்லையேல் வாயால்
வசப்பட்டால் தானுமக்கு வாழ்வு. ... 4
[வசப்பட்டால் = வசைப்பட்டால்-உலகியல் வழக்கு]

கொய்யாக் கனியிதழ் வேண்டிநிற்க கோதைதந்தாள்
கொய்யாக் கனியிலை கை. ... 5

அத்தையே வந்ததற்பின் ஆகாது மௌனமே
அத்தையே வேண்டுமோ வீம்பு. ... 6

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்

பத்துருவாம் வையத்தைப் பத்துருவாய் மாற்றிய 
பத்துருவால் கொள்வாய் பணி. ... 1

கவிக்குலம் மேவும் களிவிடுத்துத் தாவும் 
கவிக்குலம் ஆனேனே காண். ... 2

தீராதா என்னுள் திகட்டாத காதலேற்றித் 
தீ ராதா ஆனாயென் தேன். ... 3

கற்பகத் துள்ளக் கருணைத் திருவன்றோ 
கற்பகத் துள்ளார் கவின். ... 4

மாண்ட மனிதரெல்லாம் மண்டும் தகையுடைய 
மாண்ட மனிதரல்ல மாது! ... 5

★★★
பாவலர் சீனி பழனி

மாவடு கன்னத்தில் மன்னவனின் முத்தமோ
மா-வடு மங்கை மனம். ... 1

மாவிலைத் தோரணம் மைகுழல் சீதனம்
மாயிலை ஊன்பெரி தன்பு. ... 2
(மாயிலை = பெரிதில்லை)

காயம் அழியும் கனவதும் பொய்யேகாண்
காயம் கருத்தே மருந்து. ... 3
(காயம் = உடம்பு, புண்)

மாவரை நாட்டின் மழைவிளைக் காட்டிடை
மாவரை வேளாண் மலிவு... 4
(மாவரை = பெருமலை, தினைமாவு)

தாமரைக் குளநீர் தடவும் கயலெழத்
தாமரை வெண்ணில வு. ... 5
(தாமரை = மலர், தாவுகின்ற மான்)

காமலை வண்டினம் காட்டினில் தேன்மழை
காமலை நோய்க்கு மருந்து. ... 6
(காமலை = சோலை சூழ் மலை, காமாலை நோய்)

கனக மலைக்காட்டில் கானவரும் வேட்டை
கனக மதியிர வு. ... 7
(கனகம் = பொன். கன-அகன்ற. கம்-வெண்மை)

தென்றலைத் தீண்டிடத் தீந்தமிழ்த் தேறளே
தென்றலை வாயிலைத் தேர். ... 8
(தென்றலை = தென்றல் காற்று. தென்தலை = தெற்குத் திசையில்)

சேதகம் செந்நெல் செருகளம் போலே
சேதகம் சேரா சீர். ... 9
(சேதகம் = சேற்று வயல். சேதகம் = சேதம்)

வைகறைக் கோட்டின் வருமிகு வான்மழை
வைகறை வேளாண் வயல். ... 10 
(வைகறை = விடியற்காலை. வைகு அறை = ஏ கல்லடுக்கு)

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்

அந்தகன் காண்பது ஆகா தெனிலந்த
அந்தகன் பார்ப்பானோ ஆ. ... 1
(அந்தகன் = குருடன், யமன்; ஆ = இரக்கம்)

அஞ்சு பிறந்தபின் ஆறுதல் தோன்றாது
அஞ்சு நிலைகண்டு  ஆ. ... 2

மஞ்சு நிறையந்த மாமனும் இப்படி
மஞ்சு வரவஞ்சு மா! ... 3
(மஞ்சு = வலிமை, ஒரு பெண்ணின் பெயர்)

மாவிலைத் தோரணம் மங்கலம்தான் கோலமிட
மாவிலை என்கலா மா? ... 4

கோகிலம் கூவிடக் கொள்ளைக் குதூகலம்!
கோகிலம் குட்டிச் சுவர். ... 5
(கோகு + இலம்; கோகு = கழுதை,
இலம் = இல்லம் என்பதன் இடைக்குறை விகாரம்)

★★★
கவிஞர் குருநாதன் ரமணி

வண்டுகள் உட்புக வண்டுகள் கீழ்விழும்
வண்டுகள் கொள்ளும் மலர். ... 1

[வண்டுகள் பொருள் முறையே: வண்டினங்கள், 
வண்-துகள் = மகரந்தம், வண்டு-கள்]

கற்காலம் தொட்டுக் கலைசெய்த சிற்பமது
கற்காலம் கொள்ளாக் கலை. ... 2

[கற்காலம் = கற்கும் காலம், கல்லைக் காலம்]

கோபுரம் அம்பெய்து கொண்ட சிவன்கொடை
கோபுரம் என்பதோ கொல்? ... 3

[கோபுரம் = வானில் உலவும் முப்புரம், 
குயவன் செய்த பாண்டமாம் உடல்; கொல் = அசைச்சொல்]

வாத்தியார் என்றனன் மாணவன் நண்பனிடம்
வாத்தியார் என்றானே வம்பு! ... 4

[வாத்தியார் = ஆசிரியர், வாத்து + யார் (குற்றியலிகரப் புணர்ச்சி)]

இன்றமிழ் ஆடுரையில் எத்தனை குற்றங்கள்!
இன்றமிழ் தில்லை இழிவு! ... 5

[இன்றமிழ் = இனிய தமிழ், இன்று அமிழ்(து); ஆடுரை = உரையாடல்]

மண்ணுடை தோண்டி வளிமங்கள் கொள்ளுலகே!
மண்ணுடை யாகும் வறள். ... 6

[மண்ணுடை = மண்ணின் உடைமை, மண்ணின் உடையாம் பசுமை]

ஆவுடையார் மட்டுமென்றே ஆவுடையார் கோவிலிலே
ஆவுடையார் மேவும் அருள். ... 7

[ஆவுடையார் = சிவலிங்கத்தின் பீடம், ஆ-உடையார் (பசுபதி)]

புத்தகம் ஏற்றும் பொதிசுமைக் கல்வியில்
புத்தகம் ஓடும் புரை. ... 8

[புத்தகம் = பனுவல் (நூல்), புத்து+அகம்]

எத்தனம் இல்லாதே எத்தனையோ சேர்த்தாயே
எத்தனம் கூடவரு மோ? ... 9

[எத்தனம் = முயற்சி, எந்த செல்வம்]

வந்தது போவது வந்தது போதுமென்றேன்
வந்தது நின்ற வளம்! ... 10

[வந்தது = செல்வம், ஞானம்]

★★★★★

No comments:

Post a Comment