சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
குவெ.13. சொற்சிலம்பக் குறள் தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/264682870928918/
கவிஞர் திசேசு
வரும்படி உண்டெனில் வாராது மன்றம்
வரும்படி உள்ளதெனில் வா. ... 1
கவிதைக்கும் சொல்லுடுத்து கற்பனையால் சூழும்
கவிதை பிறக்கும் கனிந்து. ... 2
ஆலமடி செல்லவிடா அன்னைமகன் ஆட்கொள்ள
ஆலமடி கொண்டான் அமர்ந்து. ... 3
(ஆலம் = ஆலகால விஷம், ஆலமரம்)
வசப்பட்டால் நீர்பிழைத்தீர் இல்லையேல் வாயால்
வசப்பட்டால் தானுமக்கு வாழ்வு. ... 4
[வசப்பட்டால் = வசைப்பட்டால்-உலகியல் வழக்கு]
கொய்யாக் கனியிதழ் வேண்டிநிற்க கோதைதந்தாள்
கொய்யாக் கனியிலை கை. ... 5
அத்தையே வந்ததற்பின் ஆகாது மௌனமே
அத்தையே வேண்டுமோ வீம்பு. ... 6
★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்
பத்துருவாம் வையத்தைப் பத்துருவாய் மாற்றிய
பத்துருவால் கொள்வாய் பணி. ... 1
கவிக்குலம் மேவும் களிவிடுத்துத் தாவும்
கவிக்குலம் ஆனேனே காண். ... 2
தீராதா என்னுள் திகட்டாத காதலேற்றித்
தீ ராதா ஆனாயென் தேன். ... 3
கற்பகத் துள்ளக் கருணைத் திருவன்றோ
கற்பகத் துள்ளார் கவின். ... 4
மாண்ட மனிதரெல்லாம் மண்டும் தகையுடைய
மாண்ட மனிதரல்ல மாது! ... 5
★★★
பாவலர் சீனி பழனி
மாவடு கன்னத்தில் மன்னவனின் முத்தமோ
மா-வடு மங்கை மனம். ... 1
மாவிலைத் தோரணம் மைகுழல் சீதனம்
மாயிலை ஊன்பெரி தன்பு. ... 2
(மாயிலை = பெரிதில்லை)
காயம் அழியும் கனவதும் பொய்யேகாண்
காயம் கருத்தே மருந்து. ... 3
(காயம் = உடம்பு, புண்)
மாவரை நாட்டின் மழைவிளைக் காட்டிடை
மாவரை வேளாண் மலிவு... 4
(மாவரை = பெருமலை, தினைமாவு)
தாமரைக் குளநீர் தடவும் கயலெழத்
தாமரை வெண்ணில வு. ... 5
(தாமரை = மலர், தாவுகின்ற மான்)
காமலை வண்டினம் காட்டினில் தேன்மழை
காமலை நோய்க்கு மருந்து. ... 6
(காமலை = சோலை சூழ் மலை, காமாலை நோய்)
கனக மலைக்காட்டில் கானவரும் வேட்டை
கனக மதியிர வு. ... 7
(கனகம் = பொன். கன-அகன்ற. கம்-வெண்மை)
தென்றலைத் தீண்டிடத் தீந்தமிழ்த் தேறளே
தென்றலை வாயிலைத் தேர். ... 8
(தென்றலை = தென்றல் காற்று. தென்தலை = தெற்குத் திசையில்)
சேதகம் செந்நெல் செருகளம் போலே
சேதகம் சேரா சீர். ... 9
(சேதகம் = சேற்று வயல். சேதகம் = சேதம்)
வைகறைக் கோட்டின் வருமிகு வான்மழை
வைகறை வேளாண் வயல். ... 10
(வைகறை = விடியற்காலை. வைகு அறை = ஏ கல்லடுக்கு)
★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
அந்தகன் காண்பது ஆகா தெனிலந்த
அந்தகன் பார்ப்பானோ ஆ. ... 1
(அந்தகன் = குருடன், யமன்; ஆ = இரக்கம்)
அஞ்சு பிறந்தபின் ஆறுதல் தோன்றாது
அஞ்சு நிலைகண்டு ஆ. ... 2
மஞ்சு நிறையந்த மாமனும் இப்படி
மஞ்சு வரவஞ்சு மா! ... 3
(மஞ்சு = வலிமை, ஒரு பெண்ணின் பெயர்)
மாவிலைத் தோரணம் மங்கலம்தான் கோலமிட
மாவிலை என்கலா மா? ... 4
கோகிலம் கூவிடக் கொள்ளைக் குதூகலம்!
கோகிலம் குட்டிச் சுவர். ... 5
(கோகு + இலம்; கோகு = கழுதை,
இலம் = இல்லம் என்பதன் இடைக்குறை விகாரம்)
★★★
கவிஞர் குருநாதன் ரமணி
வண்டுகள் உட்புக வண்டுகள் கீழ்விழும்
வண்டுகள் கொள்ளும் மலர். ... 1
[வண்டுகள் பொருள் முறையே: வண்டினங்கள்,
வண்-துகள் = மகரந்தம், வண்டு-கள்]
கற்காலம் தொட்டுக் கலைசெய்த சிற்பமது
கற்காலம் கொள்ளாக் கலை. ... 2
[கற்காலம் = கற்கும் காலம், கல்லைக் காலம்]
கோபுரம் அம்பெய்து கொண்ட சிவன்கொடை
கோபுரம் என்பதோ கொல்? ... 3
[கோபுரம் = வானில் உலவும் முப்புரம்,
குயவன் செய்த பாண்டமாம் உடல்; கொல் = அசைச்சொல்]
வாத்தியார் என்றனன் மாணவன் நண்பனிடம்
வாத்தியார் என்றானே வம்பு! ... 4
[வாத்தியார் = ஆசிரியர், வாத்து + யார் (குற்றியலிகரப் புணர்ச்சி)]
இன்றமிழ் ஆடுரையில் எத்தனை குற்றங்கள்!
இன்றமிழ் தில்லை இழிவு! ... 5
[இன்றமிழ் = இனிய தமிழ், இன்று அமிழ்(து); ஆடுரை = உரையாடல்]
மண்ணுடை தோண்டி வளிமங்கள் கொள்ளுலகே!
மண்ணுடை யாகும் வறள். ... 6
[மண்ணுடை = மண்ணின் உடைமை, மண்ணின் உடையாம் பசுமை]
ஆவுடையார் மட்டுமென்றே ஆவுடையார் கோவிலிலே
ஆவுடையார் மேவும் அருள். ... 7
[ஆவுடையார் = சிவலிங்கத்தின் பீடம், ஆ-உடையார் (பசுபதி)]
புத்தகம் ஏற்றும் பொதிசுமைக் கல்வியில்
புத்தகம் ஓடும் புரை. ... 8
[புத்தகம் = பனுவல் (நூல்), புத்து+அகம்]
எத்தனம் இல்லாதே எத்தனையோ சேர்த்தாயே
எத்தனம் கூடவரு மோ? ... 9
[எத்தனம் = முயற்சி, எந்த செல்வம்]
வந்தது போவது வந்தது போதுமென்றேன்
வந்தது நின்ற வளம்! ... 10
[வந்தது = செல்வம், ஞானம்]
★★★★★
No comments:
Post a Comment