Sunday, January 27, 2019

பயிலிழை குவெ.15. அலங்காரக் குறள்: உவமையணி தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.15. அலங்காரக் குறள்: உவமையணி தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/297913020939236/
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்

விரி உவமையணி
மின்னல்போல் வந்து விசுக்கெனப் போனாளே
குன்றெனக் காணும் உரு. ... 1

தொகை உவமையணி
மாதேவி ஸ்ரீதேவி வாயோயா வம்பினள்
மூதேவி ஆக்கும் மொழி. ... 2 

விரி, தொகை கலப்புவமையணி
மலையனைய துக்கம் மறையும் பனியாய்
மலைமகள்பூந் தாளை வாழ்த்து. ... 3 

எடுத்துக்காட்டுவமையணி
ஆதவன் வந்தால் அகலுமிருள் வாழ்வினில்
மாதவன்பூந் தாளால் மருள். ... 4 

இல்பொருளுவமையணி
வால்முளைத்த பிள்ளைகள் வாய்த்ததென் பாவமோ
கால்முளைத்துக் கஞ்சியூற்று மோ. ... 5 

★★★
பாவலர் சீனி பழனி

விரி உவமையணி
கார்போல் குழலாள் கருணைக் கருவிழியாள் 
வார்கொள் சிலைபோல் வடிவு. ... 1 

நாறும் மலர்போல் நம்மனம் பார்மீது
கூறும் கவிதை முகம். ... 2

தொகை உவமையணி
அஞ்சன மாமலை வெள்ளி அடுக்கலாய்க்
குஞ்சரக் கோடுயர்காக் குன்று. ... 3 

பொன்திகழ் ஆகந்தனில் புல்லிடும் பூமலரே
மன்னவன் மேனி மயல். ... 4

விரி, தொகை கலப்புவமையணி
பாரிபோல் வான்மழை மண்ணில் மகிழ்நிறை
வாரிவளம் வாழ்வு மலர். ... 5 

காதல் குயில்கள் கனிமொழி கீதமொடு
ஓதுகவி போல உயிர். ... 6

எடுத்துக்காட்டுவமையணி
மாணவன் ஓர்விண்மீன் வான்பரப்பில் ஆசிரியர்
பேணுவோம் பௌர்ணமி யென்று. ... 7 

நேற்றிருந்த பண்டம் நிலைகுலையும் காலத்தால்
கூற்றிருந்தால் காற்றறுந்த கூடு. ... 8

இல்பொருளுவமையணி
செந்திங்கள் வான்வழியே சேர்ந்தணைந்தேன் செவ்விதழில்
சொந்தங்கள் சூழொளி மன் ... 9 

கருநாகம் கக்குவிடம் கார்க்கோடன் ஆயின்
உருவேடம் போதலர்ப் பூ. ... 10

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்

விரி உவமையணி
காரேய்க் கருணை கடலென ஆர்த்திடும் 
சீரார் கழலென் சிரம். ... 1 (உவமை: 2)

நாவாய்போல் பத்தர் நலம்காக்கும் வண்திரு 
நாவாய்ஆள் பெம்மானை நண்ணு. ... 2

தொகை உவமையணி
நிலவுமுகம் காட்டி நினைவொளி கூட்டி 
உலவுமுகம் கொண்டாள் உளம். ... 3 (உவமை: 1)

வனசவிழி நங்கை வருடும் இறகாய் 
மனசுகளி யேற்றும் மயில். ... 4

விரி, தொகை கலப்புவமையணி
கயல்விழி காட்டிக் கருமுகில் போல 
உயும்வழி காட்டும் உரம். ... 5 (உவமை: 2)

மயல்விழி மஞ்ஞை மதியொக்கும் தண்மை 
இயல்பொழித்த தென்னையே இன்று. ... 6

எடுத்துக்காட்டுவமையணி
எண்ணும் எழுத்தும் இணையாய் இழைந்திடும் 
கண்ணாய் இமையாய்க் கருது. ... 7 (உவமை: 1)

விண்ணும் நிலவும் விரவும் வியனெனக்காண்
எண்ணம் செயலின் இணைப்பு. ... 8

இல்பொருளுவமையணி
ஆகாயக் கங்கையாய் ஆசிமழை பெய்திடும் 
ஏகாயன் என்னுளத்திற் (கு) ஏற்பு. ... 9 (உவமை: 1)

சாம்பல் பறவையாய்ச் சாதகப் பட்சியாய் 
ஓம்பல் களித்தல் உயர்வு. ... 10

★★★
கவிஞர் திசேசு

விரி உவமையணி
மந்திரத்தால் கையிலன்று மைபூசி காண்பதொக்கும்
புந்திசால்செல் பேசி புதிது. ... 1 (உவமை: 1)

ஓடிக் களைத்தோர்தா கத்திற் குதவுநீர்போல்
பாடிக் கொடுத்திடுவோம் பாட்டு. ... 2 

தொகை உவமையணி
கயலிரண்டு கூறிய காதற்பூ வாசம்
முயலிரண்டில் கண்டான் முகர்ந்து. ... 3 (உவமை: 2)

துடியிடையில் தோன்றலவன் சொன்னகவி தோகை
படித்தெங்கோ சென்றாள் பறந்து. ... 4 

விரி, தொகை கலப்புவமையணி
கார்மேகம் தாங்கி கவின்நிலவு போல்வாள்
மார்மீது சாய்ந்தாள் மகிழ்ந்து. ... 5 (உவமை: 2)

பூவாய் சுழித்துநற் புன்னகை செய்கின்ற
பாவனையிற் பார்த்தனள் பெண். ... 6 

எடுத்துக்காட்டுவமையணி
கூழாங்கல் வைரமாய்த் தங்கத்தில் சேர்வதுண்டோ
பாழானோர்க் கில்லை பரிசு. ... 7 (உவமை: 1)

அம்பிதனை வென்றிடுமோ ஆடுகளின் மந்தையும்
நம்பியெற்கு போட்டிநீ யா. ... 8 

இல்பொருளுவமையணி
வானமே வற்றியுடன் வீழ்ந்ததுபோல் கேரளத்தில்
ஏனிந்த மாளா மழை. ... 9 (உவமை: 1)

கோவைப் பழத்துள்ளே மாதுளை முத்துக்கள்
பாவை சிரிப்பினில் பார். ... 10 

★★★
கவிஞர் குருநாதன் ரமணி

உவம உருபுடன்
சேல்போல் விழியாள் சிரித்தனள் என்முன்னே
வால்போல் புடவைத் தலைப்பு. ... 1

மலையொக்கும் துன்பம் மறையும் பனிபோல்
நிலையொப்பி உள்ளம் நிறுத்து. ... 2

***
உவமைத் தொகையாக
மலர்விழி தேன்மொழி மாலதியைக் கண்டேன்
நிலவுமுகம் நோக்கியே நின்று. ... 3

கணைவிழி தைக்கக் கனிமனம் கொண்டேன்
அணைவருநீர் அன்பினில் ஆழ்ந்து. ... 4

***
இரண்டும் கலந்து
மலர்ப்பாதம் போற்ற மழைபோல் அருள்வார்
நிலையுயர் வாழ்வாகும் நேர். ... 5

வண்டுவிழி என்மேலே வட்டம்போல் சுற்றுமனம்
கண்டுமொழி காதல் வலை. ... 6

***
எடுத்துக்காட்டுவமையணி
ஐம்பூதம் ஆளும் அகிலம் மனிதனின்
ஐம்புலன் ஆளும் மனம். ... 7

நேற்றின்று நாளையாய் நேரம் உலகுறும்
தோற்றங்கள் மாறும் தொலைந்து. ... 8

***
இல்பொருளுவமையணி
திங்களுள் தீப்போல் சினத்த முகத்துடன்
மங்கையவள் முன்நின்றாள் வந்து. ... 9

குதிரையின் கொம்பாய்க் குளிர்கதி ரோன்போல்
மதுரையில் கோடை மழை. ... 10

★★★★★

No comments:

Post a Comment