சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.09. ஒற்றிலாக் குறள்
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/268508533879685/
உத்தி அமைப்பு:
.. பைந்தமிழ்ச் சோலைப் பாவலர் மா. வரதராசன் அமைத்த
.. ஒற்றிலா வெண்பா உத்தியை மூலமாகக் கொண்டு,
.. அதைக் குறள் வெண்பாவுக்கு இரண்டு வகைகளாக
.. அடியேன் அமைத்தது.
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.
ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.
விளக்கம்
* குறட்பா வித்தகம்: ஒற்றிலாக் குறள் (இருவகை)
.. குறட்பாவின் சீர்களில் எங்கும் ஒற்று வராமல் அமைவது.
இந்த உத்தியை இரண்டு வகைகளில் அமைக்கலாம்.
1. அகம் மற்றும் புறப் புணர்ச்சிகளில் ஒற்றுகளை மறைத்தல்.
* அகப்புணர்ச்சி என்பது
.. ஒரு சொல்லின் உறுப்புகள் இணைந்து
.. ஒரே சொல்லாக வருவது.
.. அகம் புணர்ந்த சொற்கள் இடைவெளியின்றி எழுதப்படும்.
.. சான்றுகள்
.. நாம்+கள்=>நாங்கள், மரம்+அத்து+ஐ=>மரத்தை, வெட்டு+இன்+ஓம்=>வெட்டினோம்.
* புறப்புணர்ச்சி என்பது
.. இரண்டோ மேலோ சொற்கள் இணையும் போது
.. எழும் புணர்ச்சி விகாரங்களுடன்
.. எழுதப்படும் சொற்றோடர்.
.. புறம் புணரும் சொற்றொடரில் சொற்கள்
.. இடைவெளி விட்டு எழுதப்படும்.
.. சான்றுகள்
.. மலைவீ ழருவி யாறென வோடியது.
.. சோற்றைத் தின்றான்.
எனவே,
.. சீர்களின் அகம் மற்றும் புறப் புணர்ச்சியில்
.. ஒற்றுகள் மறைய அமைக்கும் போது
.. வல்லினம் மிகுமிடங்களில் ஒற்று வருவதை அறிந்து
.. அதுபோன்ற சொற்களைத் தவிர்க்கவேண்டும்.
கீழ்வரும் குறட்பாவின் ஒற்றிலா அமைப்பு சரி.
.. முருக னருள விருளு மகல
.. மருளை யறியு மனது.
கீழ்வரும் குறட்பாவின் ஒற்றிலா அமைப்பில் தவறென்ன?
.. கருணை மனது கனிய கனிய
.. அருணை முனியை யறி.
தவறு: கனியக் கனிய => ஒற்று மிகும்.
இதைத் தவிர்க்க இப்படி அமைக்கலாம்:
.. கருணை மனது கனிய விரிய
.. அருணை முனியை யறி.
2. ஒற்றுகளே வராத சொற்களில் அமைத்தல்
.. இவ்வகையில் அகம், புறப் புணர்ச்சிகளில்
.. மறையும் ஒற்றுகள் இல்லாத
.. சொற்களைத் தேர்ந்தெடுத்து குறட்பா அமைக்கவேண்டும்.
கீழவரும் குறள் இவ்வகைத்தே.
.. பிறவி யிறவு யறவு விழைவா?
.. உறவு வரவு குறை.
.. [இறவு=>இறப்பு, அறவு=>ஒழிகை]
பயிலிழை குவெ.09. ஒற்றிலாக் குறள்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா
விரும்பிய பாடுபொருளில்
.. ஒற்றுகள் முழுதும் இல்லாமலோ (இரண்டாம் வகை)
.. மறைந்தோ அமைவதாகவும் (முதலாம் வகை)
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. முதலடியில் பொழிப்பு மோனையோ எதுகையோ அமையுமாறும்
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள் புனைந்து
.. மேற்சொன்ன இரு வகைகளாகப் பிரித்து எழுதுவோம்.
* நாம் எழுதும் ஒற்றிலாக் குறளில் ஒற்றுகள்
.. சீர்களின் அகம்/புறப்புணர்ச்சியில் மறையும் முதல் வகையாகவோ
.. ஒற்றுகளே வராத இரண்டாம் வகையாகவோ அமையலாம்.
* இவ்விரு வமைகளில்
.. ஒற்றுகள் மறையும் முதலாவது சிறப்பெனில்
.. ஒற்றுகளே வரவியலா இரண்டாவது மிகுசிறப்பு என்று கொள்வோம்.
தொகுப்பு
29/06/2018 (வெள்ளி) இரவு வரை
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில்
.. பின்னர் வெளியிடப்படும்.
***
அடியேன் பங்காக
குறட்பா வித்தகம்: ஒற்றிலாக் குறள்
(குறள் வெண்பா)
வகை 2. ஒற்றுகளே வராத சொல்லமைப்பு
அருவி யழகு மருவு குவடு!
குருவி யழகது கூடு! ... 1
பரிதி சிகரி பரவி யொளிர
உருவி யுருவி யுறை. ... 2
[சிகரி=மலை, உருவி=பூமி, நாயுருவி]
அகட விகட மகுடி யுருள
எகிரி யெழுவ தரவு. ... 3
காசினி வாசினி ஆசினிவி லாசினி
பூசிநீ மாசிலை யே. ... 4
[ஆசினி=>வானுறைபவள், விலாசினி=ஒளிமிக்க பெண்]
வகை 1. அகம்/புறப்புணர்ச்சியில் மறையும் ஒற்றுகள்
நாலடி யாருள நாயக மாமணி
மேலடி யாருள மே! ... 5
குகனே முருகா குமரா விசாகா
அகமே றியெனை யணை! ... 6
உளதோ இலதோ உறவோ தனியோ
வளமோ வறிதோ வழி! ... 7
ஓதுமறை நாயகனே ஊனமிலி யேயெனது
வாதுமன மாயையறு வா! ... 8
மலையி லருவி மறையு மழகு
விலையி லதனை விழை! ... 9
உடலி லுயிரென வோடு மிறையே!
மடமா மனமே வளை! ... 10
--குருநாதன் ரமணி
★★★★★
No comments:
Post a Comment