சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.07. எதிரொலிக் குறள் தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/244255799638292/
தொ.001. இராமசாமி வெங்கடராமன்
மாலவனின் தங்கை மகனாம் பழனிமலை
வேலவனுன் கையிலென்வே லா? ... 1
ஆதிசிவன் மைந்தன் அருள்பெற் றடியார்க்கு
மேதினியில் தாழ்வோ பகர்? ... 2
மிழற்றும் மொழியால் வியக்கச் செயும்சேய்
மழலைக் கிணயெது சொல்? ... 3
நோக்கம் நிறைவேற நோன்பிருக்கும் அன்பரைக்
காக்க வருமய்ய னார்? ... 4
எல்லையில்லா இன்பமே என்னாட்ட மென்றுசொல்லும்
தில்லை நடராச னார்? ... 5
★★★
தொ.002. பாவலர் சீனி பழனி
கூடிழந்து வாடுமே குஞ்சுகள் என்றறிந்தும்
காடழிக்கச் சொன்னதார் சொல்? ... 1
கழனியெலாம் பச்சையாய்க் கண்ணில் நிறையும்
உழவர் உழைப்பன்றோ சொல்? ... 2
[சொல் => சொல்லு, புகழ்]
மாற்றம் உலகினில் மாறா நியதிகாண்
நேற்றெல்லாம் இன்றென்ன கூறு? ... 3
[கூறு => பங்கு, சொல்லு]
★★★
நி1. குருநாதன் ரமணி
இணைக்கும் பிரிக்கும் பிணைக்கும் எரிக்கும்
தணலா வதெது மொழி? ... 1
பிரித்தால் பொருள்தராப் பேரளவில் நிற்கும்
இரட்டைக் கிளவியா சொல்? ... 2
கல்லாய்க் கடவுளாய்க் காண்பதே உள்ளத்தில்
பல்வகை யாமோ பகர்? ... 3
[பகர் = சொல், ஒளி]
இயலிசை நாடகம் என்னும் தமிழில்
ஒயில்குன் றுவதெ(து) உரை. ... 4
[ஒயில் = ஒய்யாரம், அலங்காரம்]
பேத்தலாய்க் கேட்டனன் பிட்டைக் கிழவியிடம்
கூத்தனவன் கொண்டதெது கூறு? ... 5
சீதைக்கு ராகவன் என்ன உறவென்று
பேதையே இப்போது கேள்? ... 6
[கேள் = வினவு, கணவன்]
சிந்தை சிவனாகி இன்றுநாளை யென்றுதள்ளி
முந்தாச் சிவநந் தனார்? ... 7
பரிமேல் அமர்ந்தவண்ணம் பாழியெல்லைக் காவல்
புரந்தருள் செய்யுமைய னார்? ... 8
[பாழி = ஊர்]
வாழைத்தார் முன்வைத்தே வாசமுறும் வண்ணமலர்
ஏழையிறைக் குத்தந்த தார்? ... 9
[தந்ததார் = தந்த மாலை, தந்தது ஆர்]
வெள்ளைத் தலையுடுத்தி வீர முறுக்குடன்
அள்ளுதமிழ் பாரதி யார்? ... 10
★★★★★
No comments:
Post a Comment