Saturday, November 10, 2018

பயிலிழை குவெ.07. எதிரொலிக் குறள்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.07. எதிரொலிக் குறள்

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/219278442136028/
உத்தி அமைப்பு: கவிமாமணி இலந்தை இராமசாமி

அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
வரும் பாடல்களுக்கு ஐம்மீன் மதிப்பீடு தரலாம்.

புள்ளிகள் (மொத்தம்: 55)
(ஐந்து குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும்)
 1 => ஒவ்வோர் அடிக்கும்
 1 => ஒருவிகற்பக் குறட்பாவாவெனில்
 1 => முதலடியில் இயல்பாக அமையும் பொழிப்பு மோனைக்கு
 5 => சரியாக எதிரொலித்து அமையும் வினா-விடைச் சொல்லுக்கு
10 => சொற்பொருள் ஒலிநயம் பொறுத்து போனஸ்.

ஐம்மீன் மதிப்பீடு: 
யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு ஆகிய
.. ஐந்து அமைதிகள் => ஐம்மீன்கள்
.. ஒவ்வொன்றுக்கும் கீழெல்லை: 1
.. மேலெல்லை: 8
.. தொடர் எண்ணாகக் குறிக்கவும்.
.. (சான்று: 87675 => எண்கள் முறையே
.. யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு
.. அமைதிகளின் மதிப்பீட்டைக் குறிப்பது).

***
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

விளக்கம்:
* குறட்பா வித்தகம்: எதிரொலிக் குறள்
.. குறட்பாவின் ஈற்றுச் சொல்
.. வினாவாகவும் அந்த வினாவின் விடையாகவும் 
.. இருத்தல் வேண்டும்.

அதாவது
.. ஈற்றுச் சொல்லில் ஒரு வினாவும்
.. அதற்கான விடையும் அமைதல் வேண்டும்.

அவ்வாறு அமையும் ஈற்றுச் சொல்
.. தன்னளவிலோ, முன்வந்த
.. சொல்லுடன் சேர்ந்தோ
.. வினா-விடையாக அமையும்.

இவ்வாறு ஒரே சொல்
.. வினா-விடையை எதிரொலிப்பதால்
.. இங்ஙனம் எழும் குறள் வெண்பா
.. எதிரொலிக் குறள் என்னும் பெயர் பெறும்.

சான்றுகள்:
தன்னளவில் வினா-விடைச் சொல்:
சொல், கூறு, செப்பு, கேள், மொழி, உரை போன்றன.

முன்வரும் சொல்லுடன் சேர்ந்து:
யார் => பாரதியார், ஔவையார், ஐயனார்
ஏன் => நாடுவதேன், இருந்ததேன்

பயிலிழை குவெ.07. எதிரொலிக் குறள்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. குறள் வெண்பாவின் ஈற்றுச்சீரில் வரும் சொல்
.. தன்னளவிலோ அல்லது 
.. முன்னுள்ள சொல்லுடன் சேர்ந்தோ
.. வினாவாகவும் விடையாகவும் அமையுமாறும்
.. (இதன் விளக்கம் மேலே காண்க),
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. முதலடியில் பொழிப்பு மோனை அமையுமாறும்
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள் 
.. புனைந்து எழுதுவோம்.

தொகுப்பு
08/06/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக

குறட்பா வித்தகம்: எதிரொலிக் குறள்
(குறள் வெண்பா)
(வித்தகம்: குறள்வெண்பா, ஈற்றுச்சொல் தன்னளவிலோ, முன்சேர்ந்தோ வினா-விடையாக)

இணைக்கும் பிரிக்கும் பிணைக்கும் எரிக்கும்
தணலா வதெது மொழி? ... 1

பிரித்தால் பொருள்தராப் பேரளவில் நிற்கும்
இரட்டைக் கிளவியா சொல்? ... 2

கல்லாய்க் கடவுளாய்க் காண்பதே உள்ளத்தில்
பல்வகை யாமோ பகர்? ... 3
[பகர் = சொல், ஒளி]

இயலிசை நாடகம் என்னும் தமிழில்
ஒயில்குன் றுவதெ(து) உரை. ... 4
[ஒயில் = ஒய்யாரம், அலங்காரம்]

பேத்தலாய்க் கேட்டனன் பிட்டைக் கிழவியிடம்
கூத்தனவன் கொண்டதெது கூறு? ... 5

சீதைக்கு ராகவன் என்ன உறவென்று
பேதையே இப்போது கேள்? ... 6
[கேள் = வினவு, கணவன்]

சிந்தை சிவனாகி இன்றுநாளை யென்றுதள்ளி
முந்தாச் சிவநந் தனார்? ... 7

பரிமேல் அமர்ந்தவண்ணம் பாழியெல்லைக் காவல் 
புரந்தருள் செய்யுமைய னார்? ... 8
[பாழி = ஊர்]

வாழைத்தார் முன்வைத்தே வாசமுறும் வண்ணமலர் 
ஏழையிறைக் குத்தந்த தார்? ... 9
[தந்ததார் = தந்த மாலை, தந்தது ஆர்]

வெள்ளைத் தலையுடுத்தி வீர முறுக்குடன்
அள்ளுதமிழ் பாரதி யார்? ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

No comments:

Post a Comment