சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.08. அடிமுடி இடைமுரண் குறள்
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/228540057876533/
உத்தி அமைப்பு: கவிமாமணி இலந்தை இராமசாமி
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.
ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.
விளக்கம்:
* குறட்பா வித்தகம்: அடிமுடி இடைமுரண் குறள்
.. 1. முதற்சீர், ஈற்றுச்சீர் (சீர்கள் 1,7) சொற்களில் முரண் அமையவேண்டும்.
.. 2. அப்படி அமையும் முரண் பொருள் முரணாக இருத்தல் வேண்டும்.
.. 3. இது தவிர, சீர்கள் 1-2, 3-4, 5-6 இவற்றில் முரண் அமையவேண்டும்.
.. இது சொல்முரணாகவோ, பொருள் முரணாகவோ இருக்கலாம்.
சான்றுச் சொற்கள்
சொல் முரண்
.. கால்-கை, நாங்கள்-நீங்கள், பிறப்பு-இறப்பு,
.. உயர்வு-தாழ்வு, செம்மனம்-கருநாக்கு.
பொருள் முரண்
.. மேடு-பள்ளம், செல்வம்-வறுமை, தீ-நீர்,
.. அமுதம்-விடம், உடல்-உயிர்.
சொற்பொருள் முரண்
.. மௌனம்-கலவரம், பெருமலை-சிறுநிலம்,
.. கருவண்டு-பைங்கிளி, அறம்-மறம், இன்பம்-துன்பம்.
பயிலிழை குவெ.08. அடிமுடி இடைமுரண் குறள்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா
விரும்பிய பாடுபொருளில்
.. குறள் வெண்பாவில் சீர்கள் 1-7, 1-2, 3-4, 5-6
.. இவற்றில் வரும் சொற்கள் முரணாகவும்,
.. அவற்றுள் சீர்கள் 1-7 பொருள் முரணாகவும்
.. (இதன் விளக்கம் மேலே காண்க)
.. அமைத்தே,
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. (முரண் தொடை வருவதால்
.. பொழிப்பு மோனை கட்டாயமில்லை)
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள்
.. புனைந்து எழுதுவோம்.
தொகுப்பு
22/06/2018 (வெள்ளி) இரவு வரை
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில்
.. பின்னர் வெளியிடப்படும்.
***
அடியேன் பங்காக
குறட்பா வித்தகம்: அடிமுடி இடைமுரண் குறள்
(குறள் வெண்பா)
செல்வம் வருமது தீர்ந்திடும் மீள்வரினும்
கல்லும் கொழுவற் கடம். ... 1
[கல்லும் = அரித்திடும்; கொழு = செழித்த;
வற்கடம் = வறட்சி என்பது முரண்.]
உயிரும் உடலும் துயிலும் விழிக்கும்
கயிற்றில் அரவின் அழிவு. ... 2
[உயிர் அழிவற்றது என்பதால் இறுதிச் சொல்
அழிவு என்பது முரண்.]
தூளியில் தூங்காக் குழந்தைதன் அன்னையை
ஏளனத்தில் போற்றத் தெளிவு. ... 3
[தூளி = குழந்தைத் தொட்டில், புழுதி;
எனவே தெளிவு என்பது முரண்.
அன்னை எவ்வளவுதான் ஆட்டித் தூங்கவைக்க முயன்றாலும் தூங்காத குழந்தை
தூளியை விலக்கித் தன் அன்னையை ஏளனமாக எட்டிப் பார்க்கிறது. இருப்பினும்
அதன் பார்வையில் ஏளனத்தை விட அன்னையைப் போற்றும் பாசமே தெரிவதால்
அன்னைக்கு குழப்பமோ சினமோ விளையாது ஒரு தெளிவு பிறக்கிறது.]
சிவம்:
இயைபில் முரணாய் இலங்கி யொடுங்கி
முயல்விலே நிற்கும் முரண். ... 4
அலையெலாம் ஓய்ந்தபின் செய்திட எண்ணில்
நிலையாகிப் போகும் கரை. ... 5
கணமே யுகமாகிக் காதல் சினமாகும்
தணத்தல் அணத்தல் தனி. ... 6
[தணத்தல் = நீங்குதல், பிரிதல்; அணத்தல் = மேலெழும்புதல், பொருந்துதல்;
கணம் என்றால் கூட்டம் என்னும் பொருளில் தனி என்பது முரண்.]
நிருத்தத்தில் நிற்கும் இறையினைக் கல்லென்
றிருந்திடும் போக்கை நிறுத்து. ... 7
விருத்தம் இளமை விழிப்பினில் ஓய்வு
அருத்தனை முழுதும் ஒன்று. ... 8
[விருத்தம் = விருத்தி, மூப்பு. ஓன்று என்பது விருத்திக்கு முரண்.
அருத்தன் = பாதி உடலோன், எனவே முழுதும் என்றது முரண்.]
தூங்காமல் தூங்கிடும் தூக்க விழிப்பினில்
நீங்காமல் நிற்றல் விழிப்பு. ... 9
[ஈற்றுச் சீரில் விழிப்பு என்பதற்கு எச்சரிக்கை என்னும் பொருள்.]
மெய்யிது பொய்யெனும் எண்ணம் செயலுறுதல்
உய்வெனவே ஆழும் உயிர். ... 10
--குருநாதன் ரமணி
★★★★★
No comments:
Post a Comment