சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.08. அடிமுடி இடைமுரண் குறள் தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/250610645669474/
01. கவிஞர் சியாமளா ராஜசேகர்
வெண்மதியைக் கார்மேகம் மூடித் திறப்பதைக்
கண்ணிருந்தும் காணாதோ சம்பு. ... 1
( சம்பு - சூரியன் )
ஆடா(து) அசையாது செந்நெல் பசும்வயலில்
பாடாமல் பாடிநீ யாடு. ... 2
இரவும் பகலும் உறங்கி விழித்தால்.
வருவாயும் வாரா(து) ஒளி. ... 3
நல்லன கெட்டன ஆராய்ந் தறியாயேல்
நில்லாமல் செல்லுமோ தீது. ... 4
போய்விடும் வந்ததுபோல் இன்பமும் துன்பமும்
வாய்மையுடன் பொய்விலக்கி வா. ... 5
★★★
02. கவிஞர் வெங்கடேசன்
உள்ளதும் இல்லதும் உண்மையும் பொய்யுமாய்க்
கொள்ளும் இறையினுக்கொப் பில். ... 1
கைகொடு கால்தொடக் கற்றவர் கல்லார்ந்த
மெய்கொண் டுயிர்ப்பர்பற் கால். ... 2
கைகொடு காலளத்தல் ஒல்லுமோ மாட்டாதே
பொய்கொடு மெய்வளர்க்குங் கால். ... 3
துயில்வோர் விழித்திடச் சோம்பர் உழைக்கப்
பயின்றிடக் கற்பித் தெழுப்பு. ... 4
கருப்பானை வெண்கோ டுடைத்தற்றே இல்லார்க்(கு)
உருக்குலைந்தும் நேர்மை ஒளி. ... 5
★★★
03. கவிஞர் ஐயப்பன்
சேரும் பிரியும் சிவப்பு கருப்பொடு
நீரும் நெருப்பும் முரண். ... 1
நஞ்சை அமுதாக்கும் நாட்டானே காட்டானே
நஞ்சோ அமுதர்க் கமுது. ... 2
அறிவிலி ஞானம் அறமிலா நீதி
திறக்க வடைக்கும் அறிவு. ... 3
ஊடலாற் கூடலே வாயென்க போயென்பாள்
நாட விலக்கும் நயந்து. ... 4
இணைந்தார் பிரிந்தால் சுனைநீர் கனலாம்
கணமும் யுகமாய்ப் பிரிவு. ... 5
★★★
04. கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
கல்லாரோ கற்றோரோ இல்லாரோ உள்ளோரோ
எல்லோரு மோர்நாள் மண். ... 1
வெட்டுதலோ ஒட்டுதலோ கோபமோ சாந்தமோ
கெட்டியாயின் நீர்க்குமோ நட்பு? ... 2
காலு மரையு முழுவது முக்காலும்
ஆலுண் டமுதன் தலை. ... 3
எண்ணு மெழுத்து முரைத்தபின்னும் ஊமையாயின்
கண்ணிருந்து மந்தகனென் றெள். ... 4
(எண் = மதிப்பு, எள் = நிந்தை ஆகவே முரண்)
பொய்யினை உண்மைபோல் போற்றிவாழ் ஊமையர்க்குத்
தெய்வமும் பேயுமோ மெய்? ... 5
★★★
05. கவிஞர் சீனி பழனி
இரவும் பகலும் எண்ணம் எழுத்து
பெருகும் அரிதே ஒளி. – 1.
இரவில் கதிரியக்க வெம்மை குளுமை
தெரியும் மறையும் நிலவு. = 2.
அலையும் நிலைக்கும் ஆர்க்கும் அமைதி
தலைதொடப் பாதம் தணி. - 3.
கனியும் காயாய்ப் பேச்சினில் மௌனம்
கனவில் நனவெனக் காய். - 4.
துறவைத் துறவா மொழியும் மனமும்
சிறைகொள் பறவைச் சிறை. - 5.
★★★
06. கவிஞர் அரங்க இரகுநாதன்
பிறப்பும் இறப்பும் பிறர்க்கும் நமக்கும்
மறப்பும் நினைவும் மறைந்து. ... 1
மலையில் மடுவில் மறையும் தெரியும்
நிலையாய் அலையாய்க் கடல். ... 2
பாராதே பார்த்திடுவான் வாராதே வந்திடுவான்
தேராதே தேரிக்கண் மூடு. ... 3
பாற்கடல் கரியவான் பார்,கடல் அண்டமும்
சேர்பல பூதங்கள் நீர். ... 4
★★★
007. கவிஞர் திசேசு
துன்பமும் இன்பமும தொட்டும் தொடாமலும்
தோன்றி மறைதல் சுகம். ... 1
தீயினுள் நீரென நீரினுள் தீயெனத்
தாயினுள் சேயதும் நீர். ... 2
ஓடியது நிற்கும் உடைந்ததும் ஒட்டுமே
தேடியது கிட்டி வரின். ... 3
பல்லுயிரும் ஒவ்வொன்றாய்க் காக்கப் படைத்ததை
இல்லையென ஆக்குவதும் ஒன்று. ... 4
கூடிவர ஓடிவிடும் கொண்டதும் தந்ததுமே
இன்பந்தான் துன்பே விலகு. ... 5
உறவில் பிரிவோ உண்மையோ பொய்யில்
நறவில் நஞ்சோ பகை. ... 6
பேதையை மேதையில் மௌனத்தைப் பேச்சினில்
காணாமல் காண்ப தறிவு. ... 7
தலையொடு காலையும் தாங்கிடும் வீழ்த்தும்
நிலையினில் நில்லாத தொண்டு. ... 8
இலையதுவே உணடென் றிசைவார் மறுத்திடுவார்
நல்லவரில் கெட்டவரு முண்டு. ... 9
★★★
008. கவிஞர் குருநாதன் ரமணி
செல்வம் வருமது தீர்ந்திடும் மீள்வரினும்
கல்லும் கொழுவற் கடம். ... 1
[கல்லும் = அரித்திடும்; கொழு = செழித்த;
வற்கடம் = வறட்சி என்பது முரண்.]
உயிரும் உடலும் துயிலும் விழிக்கும்
கயிற்றில் அரவின் அழிவு. ... 2
[உயிர் அழிவற்றது என்பதால் இறுதிச் சொல்
அழிவு என்பது முரண்.]
தூளியில் தூங்காக் குழந்தைதன் அன்னையை
ஏளனத்தில் போற்றத் தெளிவு. ... 3
[தூளி = குழந்தைத் தொட்டில், புழுதி;
எனவே தெளிவு என்பது முரண்.
அன்னை எவ்வளவுதான் ஆட்டித் தூங்கவைக்க முயன்றாலும் தூங்காத குழந்தை
தூளியை விலக்கித் தன் அன்னையை ஏளனமாக எட்டிப் பார்க்கிறது. இருப்பினும்
அதன் பார்வையில் ஏளனத்தை விட அன்னையைப் போற்றும் பாசமே தெரிவதால்
அன்னைக்கு குழப்பமோ சினமோ விளையாது ஒரு தெளிவு பிறக்கிறது.]
சிவம்:
இயைபில் முரணாய் இலங்கி யொடுங்கி
முயல்விலே நிற்கும் முரண். ... 4
அலையெலாம் ஓய்ந்தபின் செய்திட எண்ணில்
நிலையாகிப் போகும் கரை. ... 5
கணமே யுகமாகிக் காதல் சினமாகும்
தணத்தல் அணத்தல் தனி. ... 6
[தணத்தல் = நீங்குதல், பிரிதல்; அணத்தல் = மேலெழும்புதல், பொருந்துதல்;
கணம் என்றால் கூட்டம் என்னும் பொருளில் தனி என்பது முரண்.]
நிருத்தத்தில் நிற்கும் இறையினைக் கல்லென்
றிருந்திடும் போக்கை நிறுத்து. ... 7
விருத்தம் இளமை விழிப்பினில் ஓய்வு
அருத்தனை முழுதும் ஒன்று. ... 8
[விருத்தம் = விருத்தி, மூப்பு. ஓன்று என்பது விருத்திக்கு முரண்.
அருத்தன் = பாதி உடலோன், எனவே முழுதும் என்றது முரண்.]
தூங்காமல் தூங்கிடும் தூக்க விழிப்பினில்
நீங்காமல் நிற்றல் விழிப்பு. ... 9
[ஈற்றுச் சீரில் விழிப்பு என்பதற்கு எச்சரிக்கை என்னும் பொருள்.]
மெய்யிது பொய்யெனும் எண்ணம் செயலுறுதல்
உய்வெனவே ஆழும் உயிர். ... 10
★★★★★
No comments:
Post a Comment