Wednesday, October 24, 2018

பயிலிழை குவெ.05. வித்தகம்: முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.05. வித்தகம்: முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன்

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/217102455686960/
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
வரும் பாடல்களுக்கு ஐம்மீன் மதிப்பீடு தரலாம்.

புள்ளிகள் (மொத்தம்: 55)
(ஐந்து குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும்)
 1 => ஒவ்வோர் அடிக்கும்
 1 => ஒருவிகற்பக் குறட்பாவாவெனில்
 1 => முதலடியில் இயல்பாக அமையும் பொழிப்பு மோனைக்கு
 5 => சரியான வேறு பொருளுடன் அமையும் முதல்-முடிவுச் சொல்லுக்கு
10 => சொற்பொருள் ஒலிநயம் பொறுத்து போனஸ்.

ஐம்மீன் மதிப்பீடு: 
யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு ஆகிய
.. ஐந்து அமைதிகள் => ஐம்மீன்கள்
.. ஒவ்வொன்றுக்கும் கீழெல்லை: 1
.. மேலெல்லை: 8
.. தொடர் எண்ணாகக் குறிக்கவும்.
.. (சான்று: 87675 => எண்கள் முறையே
.. யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு
.. அமைதிகளின் மதிப்பீட்டைக் குறிப்பது).

***
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

விளக்கம்:
* குறட்பா வித்தகம்: முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன்
.. குறள் வெண்பாவில் முதற்சீரில் வரும் சொல்
.. ஈற்றுச் சீர்களில் வேறு பொருளில் வரும்.

அதாவது, முதற்சீரில் 
.. ஒரு தனிச்சொல்லோ 
.. கூட்டுச்சொல்லோ அமைதல் வேண்டும்.
.. ஈற்றடியின் சீர்களில்,
.. அதே தனிச்சொல்லோ, அல்லது
.. அந்தக் கூட்டுச் சொல்லில் முதலில் நிற்கும் தனிச்சொல்லோ,
.. அதே சொல்லாகவோ, இன்னொரு சொல்லின் உள்ளிட்டதாகவோ, 
.. வேறு பொருளில் அமைதல் வேண்டும்.

குறிப்பு:
முதற் சீர் சொல்லும் 
.. ஈற்றுச்சீர்களில் வரும் சொல்லும்
.. வேறு பொருள் தர அமைதல் வேண்டும்.

சான்றுகள்:
கதை => தண்டாயுதம், கட்டுக்கதை => அதே தனிச்சொல்
கற்கண்டு => கருப்பஞ்சாற்றுக் கட்டி, கல்(லைக்) கண்டு => அதே கூட்டுச்சொல்
மாடு, சும்மாடு => தனிச்சொல், அதை உள்ளிட்ட இன்னொரு சொல்
தேர்தல், தேர் => கூட்டுச்சொல் => முதல்நிற்கும் தனிச்சொல்

பயிலிழை குவெ.05. வித்தகம்: 
.. முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. குறள் வெண்பாவின் முதற்சீரில் வரும் சொல்
.. அதன் ஈற்றுச் சீர்களில்
.. வேறு பொருள் தர அமையுமாறும்
.. (இதன் விளக்கம் மேலே காண்க),
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. முதலடியில் பொழிப்பு மோனை அமையுமாறும்
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள் 
.. புனைந்து எழுதுவோம்.

தொகுப்பு
25/05/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக

குறட்பா வித்தகம்: முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன்
(குறள் வெண்பா)
(வித்தகம்: குறள்வெண்பா, முதற்சொல் முடிவில்)

[முதற் சீரில் வரும் தனிச்சொல் ஈற்றுச்சீர்களில் வந்து
வேறு பொருளில் அமைதல்]

நூற்கண்டு தேர்ந்ததில் நூல்கிழியத் தேடினேனே
நூற்றைக்க ஊசிநூற் கண்டு. ... 1

கற்கண்டு சிற்பி கலைவடிக்கத் தோன்றிய
பற்பல பெண்ணுருகற் கண்டு. ... 2

உண்டும் உறங்கியும் போதைக் கழிப்பதில்
குண்டனைப் போலெவர் உண்டு? ... 3

குடியுயரக் கோனுயரும் சொல்மாறி யின்று
குடிமக்கள் கேடு குடி. ... 4

படிதாண்டாப் பத்தினி மாறினாள் இன்று
படித்துமுன் னேறும் படி. ... 5

தேர்தலின் கூட்டத்தை விஞ்சிப் பொதுமக்கள்
பார்க்க நகர்ந்தது தேர். ... 6

தலைப்பறி விக்கவே தான்பாட நின்றாள்
கலையின்கை சேலைத் தலைப்பு. ... 7
[கலை என்பது ஒரு பெண்ணின் பெயர்]

கதையால் கயவனின் கால்வீமன் தாக்கி
வதைசெய முற்றும் கதை. ... 8

மாடுமீ தேறி வலம்வரும் அத்தனுக்குக்
காடாக வோர்சடைச்சும் மாடு. ... 9

ஆடு புலிபார்க்க அத்தனே தில்லைவனக்
காடுயர் அம்பலத்தே ஆடு. ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

No comments:

Post a Comment