சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.04. வித்தகம்: முதல் பிறழ் முடிவு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/214779069252632/
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
வரும் பாடல்களுக்கு ஐம்மீன் மதிப்பீடு தரலாம்.
புள்ளிகள் (மொத்தம்: 55)
(ஐந்து குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும்)
1 => ஒவ்வோர் அடிக்கும்
1 => ஒருவிகற்பக் குறட்பாவாவெனில்
1 => முதலடியில் இயல்பாக அமையும் பொழிப்பு மோனைக்கு
2 => ஈரெழுத்து முதல் பிறழ் முடிவுக்கு
5 => சொல்லாக முதல் பிறழ் முடிவுக்கு
10 => சொற்பொருள் ஒலிநயம் பொறுத்து போனஸ்.
ஐம்மீன் மதிப்பீடு:
யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு ஆகிய
.. ஐந்து அமைதிகள் => ஐம்மீன்கள்
.. ஒவ்வொன்றுக்கும் கீழெல்லை: 1
.. மேலெல்லை: 8
.. தொடர் எண்ணாகக் குறிக்கவும்.
.. (சான்று: 87675 => எண்கள் முறையே
.. யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு
.. அமைதிகளின் மதிப்பீட்டைக் குறிப்பது).
***
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.
ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.
விளக்கம்:
* குறட்பா வித்தகம்: முதல் பிறழ் முடிவு
.. குறள் வெண்பாவில் முதற்சீரில் வரும்
.. முதல் இரண்டு எழுத்துகள்
.. செய்யுளின் ஈற்றுச் சீரிலோ
.. ஈற்றயல் மற்றும் ஈற்றுச் சீர்களிலோ
.. மாறி வரவேண்டும். இங்ஙனம்,
.. ஈற்றுச் சீரின் ஈற்றெழுத்து
.. முதற் சீரின் முதலெழுத்தாக அமையும்.
முதல் பிறழ் முடிவாகக் குறைந்தது
.. இரண்டு எழுத்துகள் அமையவேண்டும்.
.. முழுச் சொல்லும் இவ்வாறு மாறி வருதல் சிறப்பு.
.. எழுத்துகளோ, சொல்லோ பிறழும்போது,
.. ஈற்றுச் சீர்கள் பொருளுடன் அமையவேண்டும்.
சான்றுகள்:
முதற்சீர் => ஈற்றுச்சீர்
சுவாச => வாசு => பிறழ்வன இரண்டு எழுத்துகள்
தமிழ் => மிதம் => தவறு (ஈற்றெழுத்து முதலெழுத்தாக இல்லை)
குடகு => குடகு => சொற் பிறழ்வு
குடகு => படகு => ஈரெழுத்துப் பிறழ்வு
குச்சு => சுக்கு => முழுச்சொற் பிறழ்வு
கிழவனார் => வடிவ ழகி => மூன்றெழுத்துப் பிறழ்வு.
பயிலிழை குவெ.04. வித்தகம்: முதல் பிறழ் முடிவு
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா
விரும்பிய பாடுபொருளில்
.. குறள் வெண்பாவின் முதற்சீரில் வரும்
.. முதலிரண்டு எழுத்துகளோ, மேலோ,
.. அல்லது இரண்டோ மேலோ எழுத்துகள் கொண்ட
.. முழுச் சொல்லோ
.. குறள் வெண்பாவின் ஈற்றுச் சீரிலோ
.. அல்லது ஈற்றயல் மற்றும் ஈற்றுச் சீர்களிலோ
.. முதல் பிறழ் முடிவாக, அதாவது,
.. முதல்வரும் எழுத்துகள் மாறி வருவதாக
.. அமையுமாறும்,
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. முதலடியில் பொழிப்பு மோனை அமையுமாறும்
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள்
.. புனைந்து எழுதுவோம்.
தொகுப்பு
18/05/2018 (வெள்ளி) இரவு வரை
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில்
.. பின்னர் வெளியிடப்படும்.
***
அடியேன் பங்காக
குறட்பா வித்தகம்: முதல் பிறழ் முடிவு
(குறள் வெண்பா)
(வித்தகம்: குறள்வெண்பா, முதல்பிறழ் முடிவு)
[முதற் சீரின் முதல் இரண்டு எழுத்துகள் ஈற்றுச் சீரிலோ
அல்லது ஈற்றயல்-ஈற்றுச் சீர்களிலோ மாறி வருவது]
தாத்தா தடியெடுத்தால் தண்டல ராவாரோ?
ஆத்தா தடியெடுத் தா. ... 1
வாசிவாசி யென்று மனதில் முணுமுணுத்தால்
பேசுமொழி யாகும் சிவா. ... 2.
சுவாசப் பயிற்சி சுகம்கண்டு உள்ளம்
சுவாசத்தால் கட்டினான் வாசு. ... 3
சுகாதாரம் சிங்காரம் துய்பொருள் அல்ல
விகாரம் விளைப்பதே காசு. ... 4
வாசிக்கப் பேப்பரை மனசாரத் தந்திலன்
ஓசியா என்றான் சிவா. ... 5
புன்னகை இன்முகம் போதாது வேண்டுவது
தன்னல மில்லாத அன்பு. ... 6
திரமுள்ள பக்தியில் தீராது நின்றால்
உறவாவார் பார்த்’சா ரதி. ... 7
புரிந்து செயலாற்றின் போய்விடும் அச்சம்
அறியுமோ வாழ்வில் இரிபு? ... 8
[இரிபு=தோல்வி, வெறுப்பு]
குலவும் கலியில் குலுக்கிக் களித்துப்
பலவிதமாய் வாழும் உலகு. ... 9
விரல்களில் மோதிரம் மின்னிடத் தொக்கா
நிரல்களைச் செய்தார் ரவி. ... 10
[தொக்கா=தொலைக்காட்சி என்பதன் சுருக்கம்]
--குருநாதன் ரமணி
★★★★★
No comments:
Post a Comment