சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.11. செப்பலோசை வகையாய்வு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/246475726082966/(சீர்கள் 4-3 என்றோ, 3-3 என்றோ இயைபு வரப் பாடும் குறள் வெண்பா)
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். நினைவிற் கொணர வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா விண்டறும் ஈறடி யில். ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை வரும்குறட் பாவே வளம். விளக்கம் வெண்பா விலக்கண விழையில் சொன்னதுபோல் .. செப்பலோசை மூவகைப்படும். .. மூவசைக் காய்ச்சீர்கள் மட்டுமே பயின்று .. வெண்சீர் வெண்டளையான் எழுவது .. ஏந்திசைச் செப்பல். .. .. ஈரசை இயற்சீர்கள் மட்டுமே பயின்று .. இயற்சீர் வெண்டளையான் எழுவது .. தூங்கிசைச் செப்பல். .. .. இயற்சீர், காய்ச்சீர் இரண்டும் பயின்று .. இருவகை வெண்டளைகளும் விரவி எழுவது .. ஒழுகிசைச் செப்பல். பயிலிழை குவெ.11. செப்பலோசை வகையாய்வு பாடுபொருள்: கவிஞர் விருப்பம் பாவகை: குறள் வெண்பா வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா விரும்பிய பாடுபொருளில் .. ஈற்றுச்சீர் தவிர ஏனையவை காய்ச்சீர்களாக அமைத்தே .. ஏந்திசைச் செப்பல் பயிலும் ஒருவிகற்பக் குறள் வெண்பா .. ஒன்றைப் பொழிப்பு மோனையுடன் எழுதுவோம். .. அதன் பின் அதை, .. ஈற்றுச்சீர் தவிர ஏனையவை இயற்சீர்களாக அமைய மாற்றியே .. தூங்கிசைச் செப்பல் பயிலும் குறள் வெண்பாவாக மாற்றுவோம். .. அதன் பின் நம் ஏந்திசைக் குறளை .. ஈற்றுச்சீர் தவிர ஏனையவை காய்ச்சீர்-இயற்சீர் அமைய மாற்றியே .. ஒழுகிசைச் செப்பல் பயிலும் குறள் வெண்பாவாக மாற்றுவோம். இவ்விதமாக, .. முதலில் ஏந்திசைச் செப்பல் குறள் வெண்பாவும் .. பின் அதையே மாற்றி .. தூங்கிசை, ஒழுகிசைச் செப்பல் குறள்களாக்கி, .. மூன்று குறட்பாக்கள் கொண்ட தொகுதி (set) அமைப்போம். .. இதுபோல் மூவிசைச் செப்பலைக் காட்டும் .. 5 (ஐந்து) தொகுதிகள், மொத்தம் 15 (பதினைந்து) .. குறள் வெண்பாக்கள் புனைந்து எழுதுவோம். தொகுப்பு 20/07/2018 (வெள்ளி) இரவு வரை .. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை .. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் .. பின்னர் வெளியிடப்படும். *** அடியேன் பங்காக குறட்பா வித்தகம்: மூவிசைச் செப்பல் (குறள் வெண்பா) ஏ.செ. கண்விழித்தேன் வைகறையில் கட்டவிழ்ந்த வாசனைகள் வண்ணமலர்க் கூரையென வான். தூ.செ. கண்மலர் வைகறை கட்டவிழ் வாசனை வண்மலர்க் கூரையாய் வான். ஒ.செ. கண்விழித்தேன் வைகறை கட்டவிழ்ந்த வாசனை வண்ணமலர்க் கூரையாய் வான். ... 1 ஏ.செ. தூரத்தில் செங்கதிரோன் துய்யவொளி தொட்டசுவர் ஓரத்தில் நாகணவாய்ப் புள். தூ.செ. தூரக் கதிரொளி துள்ளித் தொடுசுவர் ஓரமோர் பூவை யுடன். ஒ.செ. தூரத்தில் செங்கதிர் தொட்ட சுவர்மிசை ஓரத்தில் நாகணவாய்ப் புள். ... 2 ஏ.செ. மாமரத்தில் ஓடுமணில் மாங்குயில்தன் பண்ணிறுத்தி ஊமையெனப் பார்த்ததென்ன வோ? தூ.செ. மாமர மோடணில் மாங்குயில் பண்ணற ஊமையாய்க் காணென வோ? ஒ.செ. மாமரத்தில் ஓடணில் மாங்குயில் பண்ணிறுத்தி ஊமையாய்ப் பார்த்ததென்ன வோ? ... 3 ஏ.செ. ஊதாப்புள் மீன்கொத்தி ஓசையிட்டால் காதுறுத்தும் ஏதோதன் வாய்பற்றிப் போம். தூ.செ. ஊதாச் சிரல்புள் ஒலிகா துறுத்துமே ஏதோ இரையுடன் போம். ஒ.செ. ஊதாப்புள் சிச்சிலி ஓசை செவியுறுத்தும் ஏதோ இரைபற்றிப் போம். ... 4 ஏ.செ. சின்னவுடற் சிட்டிரண்டு சட்டென்று வந்தமர்ந்தே சன்னமொழி பேசியது தேன்! தூ.செ. சின்ன உடலுடன் சிட்டுகள் வந்தன சன்ன மொழியுரை தேன். ஒ.செ. சின்னவுடற் சிட்டுகள் சட்டென வந்தமர்ந்தே சன்னமொழி பேசின தேன்! ... 5 ஏ.செ. சீழ்க்கையொலி காதுறுத்தத் தேன்சிட்டு பூத்தொங்கும்! வாழ்க்கையிது போலவரு மா? தூ.செ. சீழ்க்கை உறுத்தவோர் தேன்சிட் டுதொங்கலில்! வாழ்க்கை இதுவரு மா? ஒ.செ. சீழ்க்கையொலி காதுறும் தேன்சிட்டு பூத்தொங்கும்! வாழ்க்கையிது போல்வரு மா? ... 6 ஏ.செ. பக்கத்தில் ஏரிபோலப் பாழ்நீராய்த் தேங்குநிலம் கொக்குகள்வாய் கீழ்நோக்கும் கோடு. தூ.செ. பக்கலில் ஏரிபோல் பாழ்நீர் நிலத்தினில் கொக்குவாய் கோணலாம் கோடு. ஒ.செ. பக்கலில் ஏரிபோல் பாழ்நீராய்த் தேங்குநிலம் கொக்குகள் வாய்கோணல் கோடு. ... 7 ஏ.செ. காலோடி மேடேறும் காணான்கள் கொக்கிடையே மேலோடிக் கண்மறையும் மீன். தூ.செ. ஓடிமே டேறுபுள் காணான் குருகிடை ஓடியே கண்மறை மீன். ஒ.செ. காலோடி மேடமர் காணான்கள் கொக்கிடை மேலோடிக் கண்மறை மீன். ... 8 ஏ.செ. கண்டதெலாம் உண்ணவரும் காக்கைகள் கூட்டமர்ந்தே விண்ணுலவும் தோட்டியிது வே. தூ.செ. கண்ட துணவரும் காக்கைகள் கூட்டமர் விண்ணுறு தோட்டியா மே. ஒ.செ. கண்டதெலாம் உண்னவரும் காக்கைகள் கூட்டமாய் விண்ணுலவும் தோட்டியா மே. ... 9 ஏ.செ. காலையிளங் காற்றினிலே கண்பட்ட காட்சிகளால் மாலைவரை துள்ளுமனம் மான். தூ.செ. காலை யிளம்வளி கண்ணுறு காட்சிகள் மாலை வரைமனம் மான். ஒ.செ. காலையிளங் காற்றிலே கண்பட்ட காட்சிகள் மாலைவரை யென்னுளம் மான். ... 10 --குருநாதன் ரமணி ★★★★★
No comments:
Post a Comment