சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.10. இயைபுக் குறள் தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/269467760450429/
கவிஞர் திசேசு
(சீர்கள் 4-3 இயைபு)
அழகுதமிழ் வாசமுறு தென்றலேநீ வீசு
பழுகுதமிழ்ப் பாவெடுத்துப் பேசு. ... 1
மயங்கிமான் மங்கைவிழி கண்டு வியந்து
வயங்கிவனம் ஓடும் ஒளிந்து. ... 2
அவனவன் வேலை அவனவனே பார்த்துச்
சிவனவனை நாடுவுளம் சேர்த்து. ... 3
உலகுவளம் அத்தனையும் உன்னதமாய் ஆக்கு
நலமடையக் கெட்டதெலாம் நீக்கு. ... 4
பழகுதமிழ்ச் சொல்லெடுத்து பாரதியைப் பாடு
அழகுவளர் தேசமென்றே ஆடு. ... 5
உழவினமே மாய்ந்தொழிய செய்யாதே ஊறு
கழனிகாய காணுவியோ சோறு. ... 6
★
(சீர்கள் 3-3 இயைபு)
சீறி வருங்காளை மாடு சினந்துவர
கீறியுடல் போடுமுன்னே ஓடு. ... 7
நெருப்பருகே வைக்காதே பஞ்சு நிலைமை
பொறுப்பற்றுப் போவதற்கே அஞ்சு. ... 8
ஓய்வின்றி உண்டால் விருந்து நலங்கெட்டு
நோயுண்ண உண்பாய் மருந்து. ... 9
ஆறுமுகன் வேற்புகழைப் பேசு அவனருட்
பேறாய்த் திருநீறு பூசு. ... 10
மன்னுபெருஞ் சீராய் விருந்து மகிழ்ந்துண்ட
பின்னரே நீரை அருந்து. ... 11
★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
(சீர்கள் 4-3 இயைபு)
நடையழ கென்னவோ நாட்டிய மேதான்
சடைமுடி மட்டுமே சாண். ... 1
அருகிப் பழக அவளுள்ளம் வெற்பு
கருகுமோ மாதவள் கற்பு? ... 2
தயங்காத பொய்யனின் சத்தியம் கண்டு
மயங்கிடில் நாமென்றும் மண்டு. ... 3
பழச்சாறு தன்னைப் பதமாய்ப் பருகு
பழக்கம் சிறக்க அருகு. ... 4
அவன்தான் தருவான் அருமை விருந்து
இவன்வலிக் கெங்கே மருந்து? ... 5
★
(சீர்கள் 3-3 இயைபு)
வயலை அழித்திடும் வண்டு வருமந்தக்
கயலை வதைக்குமாம் நண்டு. ... 6
வறியவர் மீது வெறுப்பு மடமை
வெறித்தா லவரே நெருப்பு. ... 7
சின்னக் குழந்தை குறும்புச் சிரிப்பது
அன்றலரும் ரோஜா அரும்பு. ... 8
மேடையில் பேசிடும் பேச்சு மெதுவாக
ஜாடையில் கேட்டாலே போச்சு. ... 9
அலைமே லசையும் படகு அவனின்
தலைமேல் கடனால் அடகு. ... 10
★★★
கவிஞர் பாவலர் சீனி பழனி
(சீர்கள் 4-3 இயைபு)
வாழ்வும் பயனும் வழியென வேவரும்
தாழ்வில் சுகமே தரும். ... 1
நெருப்பில் துயிலும் நிலவுக ளிங்கு
விருப்பம் கனவிலுஞ் சங்கு. ... 2
விடியற் கனவு விடியா இரவு
முடியா விழைவி னுறவு. ... 3
நடந்திடக் கால்கள் நமதுடல் எண்ணம்
கடந்திடும் காலமோ திண்ணம். ... 4
★
(சீர்கள் 3-3 இயைபு)
திருக்குறள் நாளும் பெருங்கு ரலானால்
ஒருகுறை யில்லை ஒருங்கு. ... 7
மனமகி ழுந்து நனவுகள் சிந்து
தினம்கொள் கனவுகள் தேன். ... 8
முன்கைநீள முன்னம் முழுமதி தூமலரே
வன்கை குறைவாழ் மதி. ... 9
★★★
கவிஞர் குருநாதன் ரமணி
குறட்பா வித்தகம்: இயைபுக் குறள்
(குறள் வெண்பா)
(சீர்கள் 4-3 இயைபு)
பணம்சேர்த்து வந்த பகட்டான வாழ்வு
குணமுயர வில்லையெனில் தாழ்வு! ... 1
கடவுளாய்க் கற்சிலை கண்டால் வெறுப்பு?
கடந்தீரோ எல்லை, செருப்பு! ... 2
மதுரம் தமிழென்று வால்மீகி வாக்கு
நிதம்பயிலா தேதேதோ சாக்கு! ... 3
மழலை மிழற்றி மடியமரப் பேச்சு
கழலும் மனமெங்கோ போச்சு! ... 4
கழலிணை போற்றியே கண்ணனுருத் தொட்டு
வழுத்தினேன் என்மனம் விட்டு! ... 5
துளிர்விடும் காய்மலர்த் தோட்டமென் வீடு
நளிவுறும் ஓய்விலென் நாடு. ... 6
★
(சீர்கள் 3-3 இயைபு)
நறும்பூவில் தும்பி அரும்பு நளியும்
எறும்பூர்ந்து ஓட்டும் குறும்பு! ... 7
வண்ணத்துப் பூச்சி அமர்ந்து மலர்தேடும்
எண்ணமதை யின்றும் சுமந்து! ... 8
கன்னியவள் கண்விழிப் பூமலர்ந்து புன்னகைத்தாள்
என்னுள்ளம் தேன்பா மலர்ந்து! ... 9
நிலவியே எங்கும் நிறைந்து பிரம்மம்
பலவுரு கொள்ளும் குறைந்து. ... 10
★★★
கவிமாமணி இலந்தை இராமசாமி
(அன்புடன் இசைந்து தந்த இயைபுக் குறள்கள்)
(சீர்கள் 4-3 இயைபு)
கிழக்கு வெளுக்கக் கிறங்கும் பொறுப்பு
முழக்கொலி சேவற் சிறப்பு. ... 1
மரக்கிளை மேலொரு மன்மதக் கூடு
சிரத்தைப் பறவையின் வீடு. ... 2
களிமகன் வார்த்தைகள் காதினுக்கு ஊறு
தெளிவுடன் சொல்கையில் வேறு. ... 3
கவிதை சிறந்திடச் சொல்க உணர்ந்து
சுவைமிகு சொற்கள் புணர்ந்து. ... 4
இலக்கியம் நோய்தீர் இதமாம் மருந்து
நலம்தரும் நல்ல விருந்து. ... 5
மிறைப்பா ரமணி நடத்தும் அரங்கு
சிறப்புரை நெஞ்சே நெருங்கு. ... 6
விழிகளை மூடி விமலனை வேண்டு
தொழுகையில் உன்மனம் தூண்டு. ... 7
இலந்தை
★★★★★
No comments:
Post a Comment