சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.11. செப்பலோசை வகையாய்வு தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/270801503650388/
பாவலர் சீனி பழனி
(குறள் வெண்பா)
முறையே ஏ.செ., தூ.செ., ஒ.செ. ஒலிகளில்
மாமழையே காவிரியில் மாவிலையே தோரணங்கள்
பாமழையில் பாவலர்கள் காண்.
மாமழைக் காவிரி மாவிலைத் தோரணம்
பாமழைப் பாவலர் காண்.
மாமழையே காவிரி மாவிலையே தோரணம்
பாமழையில் பாவலர் காண். ... 1
★
பெண்மகளே என்னில்லில் பேரன்றோ வாழ்வினிலே
கண்மகளே என்கனவு காண்.
பெண்மகள் இல்லம் பெருமையே வாழ்வது
கண்ணில் கனவதே காண்.
பெண்மகளே என்னில்லம் பேரது வாழ்வினிலே
கண்மகளே என்கனவு காண். ... 2
★
கானமழை காற்றினிலே காட்டிலுமோர் நாட்டியமே
தானமென நல்லருவி தான்.
கானம் நிறைமழைக் காட்டினில் நாட்டியம்
தானம் அருவிநீர் தான்.
கானமழை காற்றினிலே காட்டினில் நாட்டியம்
தானமென நல்லருவி தான். ... 3
★
பள்ளியிலே கல்விபல பாடமுறை பற்பலவே
கிள்ளையெனக் கல்விபெறுங் கள்.
பள்ளியில் கல்வியே பாடமும் பற்பல
கிள்ளையே கல்வியைக் கல்.
பள்ளியிலே கல்விபல பாடமும் பற்பலவே
கிள்ளையெனக் கல்வியைக் கல். ... 4
★
நூல்நிழலும் நோன்றிசைக்கும் நுண்புலனும் தேர்ந்திசைக்கும்
ஆல்நிழலும் ஆன்றறிவு தான்.
நூல்நிழல் நோன்பதே நுண்புலம் தேர்ந்திசை
ஆல்நிழல் ஆன்றறி வு.
நூல்நிழலும் நோன்றிசைக்கும் நுண்புலம் தேர்ந்திசையே
ஆல்நிழலும் ஆன்றறி வு. ... 5
★★★
கவிஞர் திசேசு
(குறள் வெண்பா)
முறையே ஏ.செ., தூ.செ., ஒ.செ. ஒலிகளில்
கண்ணுதலாம் தெய்வத்தின் காலடியில் வீழ்ந்தவர்க்கு
நண்ணிடுமோ கேடென்றும் நம்பு.
கண்ணுதல் தெய்வமாம் காலடி வீழ்ந்திடில்
நண்ணுமோ கேடெதும் நம்பு.
கண்ணுதலாம் தெய்வத்தின் காலடி வீழ்ந்தவர்க்கு
நண்ணிடுமோ கேடெதும் நம்பு. ... 1
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆளுமையில் பேதமின்றி
பேணுவதே மானுடத்தின் பீடு.
ஆணையும் பெண்ணையும் ஆளுமைப் பேதமில்
பேணலே மானிடப் பீடு.
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆளுமைப் பேதமின்றிப்
பேணலே மானிடத்தின் பீடு. ... 2
உச்சாணிக் கொம்பதுவும் உள்மறைந்த வேரடியும்
அச்சாணி போன்றோர்முன் ஒன்று.
உச்சியுள் கொம்பதும் உள்மறை வேரதும்
அச்செனப் போனறவர்க் கொன்று.
உச்சாணிக கொம்பதும் உள்மறை வேரடியும்
அச்சாணிப் போன்றவர்க் கொன்று. ... 3
கற்பனையும் கண்தமிழும் கைகோர்த்து யாப்போடு
நிற்பதுவே நற்கவிதைப் பாட்டு.
கற்பனை கண்தமிழ் கையொடு யாப்பதும்
நிற்குங் கவிதை பாட்டு.
கற்பனை கண்தமிழின் கைசேர யாப்பொடு
நிற்குங் கவிதைப் பாட்டு. ... 4
யாப்பென்னும் தூரிகையால் எண்ணமெனும் வண்ணங்கள்
பூப்பதுவே பொற்றமிழில் பாட்டு.
யாப்பாம் தூரிகை யாலெண் ணவண்ணமே
பூப்பது பொற்றமிழ்ப பாட்டு.
யாப்பெனும் தூரிகையால் எண்ணமாம் வண்ணங்கள்
பூப்பது பொற்றமிழில் பாட்டு. ... 5
★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்
(குறள் வெண்பா)
முறையே ஏ.செ., தூ.செ., ஒ.செ. ஒலிகளில்
காண்டகுமொண் தோளண்ணல் கோவலனின் காலிணையை
மாண்டகுவண் மாவரமாய் மன்னு.
காண்டகு தோளினன் கோவலன் காலிணை
மாண்டகு மாவரம் மன்னு.
காண்டகு தோளண்ணல் கோவலன் காலிணையை
மாண்டகு மாவரமாய் மன்னு. ... 1
★
சூதாடிச் சூதாடிச் சொத்தும்போம் நாளெல்லாம்
வாதாடி வாதாடி வாழ்வு.
சூதினில் சூதினில் சொத்துபோம் நாளெலாம்
வாதினில் வாதினில் வாழ்வு.
சூதாடச் சூதினில் சொத்தும்போம் நாளெலாம்
வாதாட வாதினில் வாழ்வு. ... 2
★
சொத்துகளின் மீதுற்ற சூதான பற்றொழித்துப்
புத்தியினால் பெற்றவையே போற்று.
சொத்துகள் மீதுறும் சூதுறு பற்றொழி
புத்தியால் பெற்றவை போற்று.
சொத்துகள் மீதுற்ற சூதான பற்றொழி
புத்தியினால் பெற்றவை போற்று. ... 3
★
உன்னவனே நானென்றே ஓர்முறையும் சொன்னவர்க்கே
உன்னருளோ திண்ணமதா மே.
உன்னவனே நானென ஓர்முறையும் சொன்னவர்க்
குன்னருளோ திண்ணமா மே.
உன்னவன் நானெ்ன ஓர்முறை சொன்னவர்க்
குன்னருள் திண்ணமா மே. ... 4
★
தாமரைநேர் பூவிணைகள் தேரலினும் நானினிமேல்
காமுறேனே மற்றொன்றாம் இன்பு.
தாமரைப் பூவிணை தேரலின் நானினி
காமுறேன் மற்றுமோர் இன்பு.
தாமரைநேர் பூவிணை தேரலின் நானினியும்
காமுறேன் மற்றுமோர் இன்பு. ... 5
★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
(குறள் வெண்பா)
முறையே ஏ.செ., தூ.செ., ஒ.செ. ஒலிகளில்
சிங்கம்போல் பாய்வதுதான் சீரென்று எண்ணிப்போய்
பங்கமேதும் வாராது பார்.
சிங்கமாய்ப் பாய்வது சீரென எண்ணலே
பங்கம் வராதெனப் பார்.
சிங்கமெனப் பாய்வது சீரென்ற எண்ணம்தான்
பங்கமாய் வாராது பார். ... 1
★
சங்கடம்தான் வாழ்வினிலே சண்டையிட்டா லென்றென்றும்
இங்கிதமாய்த் தானென்றும் வாழ்.
சங்கடம் வாழ்வினில் சண்டையா லென்றுமே
இங்கித மாகவே வாழ்.
சங்கடமே வாழ்வினில் சண்டைகளா லென்றுமே
இங்கித மாகவேதான் வாழ். ... 2
★
சந்தேக மென்றேனும் தள்ளிவிடும் பாழ்மனத்தைப்
பந்தங்கள் வேரறுக்க வே.
சந்தே கமென்றும் தள்ளிடும் பாழ்மனம்
பந்த மறுத்திட வே.
சந்தேகம் என்றுமே தள்ளிவிடும் பாழ்மனம்
பந்தமதை வேரறுக்க வே. ... 3
★
உண்பதற்கோ வாழ்வென்றும் உண்மையுடன் மற்றோரைப்
பண்பாகச் சேர்ந்திடலே தான்.
உண்பதோ வாழ்ந்திட உண்மையோ மற்றவர்
பண்புடன் சேர்தலே தான்.
உண்பதோ வாழ்வென்றும் உண்மையாய் மற்றவரைப்
பண்புடன் சேர்ந்திடலே தான். ... 4
★
சொன்னாலும் கேட்காது தொல்லைபல தந்திடுவான்
தன்னாலே தேறுவனோ சொல்.
சொன்னால் விளங்கிடாத் தொல்லை தருபவன்
தன்னால் சிறப்பனோ சொல்.
சொன்னால் வளங்கிடாது தொல்லை தருபவன்
தன்னால்தான் தேறுவனோ சொல். ... 5
★★★
கவிஞர் நி1. குருநாதன் ரமணி
குறட்பா வித்தகம்: மூவிசைச் செப்பல்
(குறள் வெண்பா)
ஏ.செ.
கண்விழித்தேன் வைகறையில் கட்டவிழ்ந்த வாசனைகள்
வண்ணமலர்க் கூரையென வான்.
தூ.செ.
கண்மலர் வைகறை கட்டவிழ் வாசனை
வண்மலர்க் கூரையாய் வான்.
ஒ.செ.
கண்விழித்தேன் வைகறை கட்டவிழ்ந்த வாசனை
வண்ணமலர்க் கூரையாய் வான். ... 1
ஏ.செ.
தூரத்தில் செங்கதிரோன் துய்யவொளி தொட்டசுவர்
ஓரத்தில் நாகணவாய்ப் புள்.
தூ.செ.
தூரக் கதிரொளி துள்ளித் தொடுசுவர்
ஓரமோர் பூவை யுடன்.
ஒ.செ.
தூரத்தில் செங்கதிர் தொட்ட சுவர்மிசை
ஓரத்தில் நாகணவாய்ப் புள். ... 2
ஏ.செ.
மாமரத்தில் ஓடுமணில் மாங்குயில்தன் பண்ணிறுத்தி
ஊமையெனப் பார்த்ததென்ன வோ?
தூ.செ.
மாமர மோடணில் மாங்குயில் பண்ணற
ஊமையாய்க் காணென வோ?
ஒ.செ.
மாமரத்தில் ஓடணில் மாங்குயில் பண்ணிறுத்தி
ஊமையாய்ப் பார்த்ததென்ன வோ? ... 3
ஏ.செ.
ஊதாப்புள் மீன்கொத்தி ஓசையிட்டால் காதுறுத்தும்
ஏதோதன் வாய்பற்றிப் போம்.
தூ.செ.
ஊதாச் சிரல்புள் ஒலிகா துறுத்துமே
ஏதோ இரையுடன் போம்.
ஒ.செ.
ஊதாப்புள் சிச்சிலி ஓசை செவியுறுத்தும்
ஏதோ இரைபற்றிப் போம். ... 4
ஏ.செ.
சின்னவுடற் சிட்டிரண்டு சட்டென்று வந்தமர்ந்தே
சன்னமொழி பேசியது தேன்!
தூ.செ.
சின்ன உடலுடன் சிட்டுகள் வந்தன
சன்ன மொழியுரை தேன்.
ஒ.செ.
சின்னவுடற் சிட்டுகள் சட்டென வந்தமர்ந்தே
சன்னமொழி பேசின தேன்! ... 5
ஏ.செ.
சீழ்க்கையொலி காதுறுத்தத் தேன்சிட்டு பூத்தொங்கும்!
வாழ்க்கையிது போலவரு மா?
தூ.செ.
சீழ்க்கை உறுத்தவோர் தேன்சிட் டுதொங்கலில்!
வாழ்க்கை இதுவரு மா?
ஒ.செ.
சீழ்க்கையொலி காதுறும் தேன்சிட்டு பூத்தொங்கும்!
வாழ்க்கையிது போல்வரு மா? ... 6
ஏ.செ.
பக்கத்தில் ஏரிபோலப் பாழ்நீராய்த் தேங்குநிலம்
கொக்குகள்வாய் கீழ்நோக்கும் கோடு.
தூ.செ.
பக்கலில் ஏரிபோல் பாழ்நீர் நிலத்தினில்
கொக்குவாய் கோணலாம் கோடு.
ஒ.செ.
பக்கலில் ஏரிபோல் பாழ்நீராய்த் தேங்குநிலம்
கொக்குகள் வாய்கோணல் கோடு. ... 7
ஏ.செ.
காலோடி மேடேறும் காணான்கள் கொக்கிடையே
மேலோடிக் கண்மறையும் மீன்.
தூ.செ.
ஓடிமே டேறுபுள் காணான் குருகிடை
ஓடியே கண்மறை மீன்.
ஒ.செ.
காலோடி மேடமர் காணான்கள் கொக்கிடை
மேலோடிக் கண்மறை மீன். ... 8
ஏ.செ.
கண்டதெலாம் உண்ணவரும் காக்கைகள் கூட்டமர்ந்தே
விண்ணுலவும் தோட்டியிது வே.
தூ.செ.
கண்ட துணவரும் காக்கைகள் கூட்டமர்
விண்ணுறு தோட்டியா மே.
ஒ.செ.
கண்டதெலாம் உண்னவரும் காக்கைகள் கூட்டமாய்
விண்ணுலவும் தோட்டியா மே. ... 9
ஏ.செ.
காலையிளங் காற்றினிலே கண்பட்ட காட்சிகளால்
மாலைவரை துள்ளுமனம் மான்.
தூ.செ.
காலை யிளம்வளி கண்ணுறு காட்சிகள்
மாலை வரைமனம் மான்.
ஒ.செ.
காலையிளங் காற்றிலே கண்பட்ட காட்சிகள்
மாலைவரை யென்னுளம் மான். ... 10
★★★★★
No comments:
Post a Comment