சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.16. அலங்காரக் குறள்: உருவகவணி
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/284906572239881/
உருவக அணி
கோமகன் மட்டுமல்லன், குப்பனும் சுப்பனும் கூடப் பேச்சில் உருவகத்தைச் சரளமாகக் கையாள்கின்றனர். ’நான்புலிடா. நீயெலிடா’ போன்ற சொல்லாடல்களில் ’நான் புலியாவேன், நீ எலியாவாய்’ என்று உருவகங்கள் தொக்கி நிற்பது காணலாம்.
ஆகிய, ஆக, ஆன, ஆகும், ஆம், என்று போன்றவை உருவக உருபுகள். மலர் போலும் பாதம் என்றால் அது உவமை. பாதமாகும் மலர் என்றால் அது உருவகம். இவ்வாறு, உருவகத்தில் உவமிக்கப்படும் பொருள் (உவமேயம்) முதல்நின்று அதன் பின்னால் உவமையாகும் பொருள் (உவமானம்) வரும்.
உருவக உருபு விரிந்தோ மறைந்தோ வரலாம்.
பாதமாம் மலர் => ஆம் என்ற உருவக உருபு விரித்து வந்தது => விரியுருவகவணி.
பாதமலர் => ஆம் என்ற உவம உருபு மறைந்து வந்தது => தொகையுருவகவணி.
மலரின் மென்மை, செழுமை இவ்வுருவகத்தின் பொதுத்தன்மை யாவன.
உருவக அணியில் பல வகைகள் உண்டு. அவற்றுள் மூன்றை ஐந்து குறள்களில் நாம் இப்பயிலரங்கத்தில் கையாள்கிறோம்.
திருக்குறள்/புனைகுறள் சான்றுகள்
1. விரி உருவக அணி
உவமேயம், உவமானம், உருவக உருபு மூன்றும் வெளிப்படையாக அமையும்.
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
உருவகம் => சினமாகும் பொருள் => சின்னத்தைப் பொருள் என்று
2. தொகை உருவக அணி
அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
உருவகம்: அறிவு => கருவி, அரண்
3. விரி, தொகை கலப்புருவக அணி
பாளையாம் புன்னகை பல்வரிசை முத்தாரம்
காளைமேல் கன்னி கணை.
4. ஏகதேச உருவக அணி
தொடர்புடைய பொருள்களில் ஒன்றை உருவகம் செய்து மற்றதை/மற்றவற்றை
உருவகம் செய்யாது விடுவது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்.
பிறவியைப் பெருங்கடலாக உருவகித்து அதனுடன் தொடர்புடைய
பிணையாக இறைவனடியை உருவகிக்காமை.
5. உருவக உருவக அணி
உருவகம் செய்த பொருளையே மீண்டும் (வேறு விதமாக) உருவகம் செய்வது.
கண்மலர்க் கன்னியின் கண்ணம்பால் கட்டுண்டேன்
எண்ணம் செயல்மொழி யென்று.
கண் என்பது மலருக்கும் அம்புக்கும் உருவகம் செய்யப்பட்டது.
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிலரங்கில் பங்கேற்கலாம்.
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.
ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.
பயிலிழை குவெ.16. அலங்காரக் குறள்: உருவகவணி
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா
விரும்பிய பாடுபொருளில்
.. ஒவ்வொரு குறளிலும்
.. ஒன்று முதல் மூன்று உருவகங்கள் வரை
.. தேவைக் கேற்ப அமையுமாறு
.. ஒரு விகற்பப் பொழிப்பு மோனைக் குறளாக
.. மேற்சொன்ன ஐந்து வகைகளில்
.. வகைக்கு ஒன்றாக
.. மொத்தம் ஐந்து குறட்பாக்கள் புனைந்தெழுதுவோம்.
ஒருவர் பத்து (10) குறட்பாக்கள்
.. வரை புனைந்தெழுதலாம்.
தொகுப்பு
24/08/2018 (வெள்ளி) இரவு வரை
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில்
.. பின்னர் வெளியிடப்படும்.
*****
அடியேன் பங்காக
உருவகவணி
(குறள் வெண்பா)
விரி உருவக அணி
கருவிழி வண்டாய்க் கனியிதழ் தேனாய்
உருவெடுத்து வந்தாள் உமா. ... 1
கொற்றம் குடையாம் கொடுகரம் வாழையாம்
குற்றம் ஒறுத்தாண்டான் கோ. ... 2
தொகை உருவக அணி
குழல்முகில் தாள்மரை கொற்றவையே உன்னை
வழுத்துவோர்க் கில்லை வலி. ... 3
குழல்மொழி கண்வண்டு குப்பத்தில் முத்தாள்
குழந்தை யொருமலர்க் கொத்து. ... 4
விரி, தொகை கலப்புருவக அணி
பாளையாம் புன்னகை பல்வரிசை முத்தாரம்
காளைமேல் கன்னி கணை. ... 5
குயில்மொழி கண்மரை கூந்தல் குடையாம்
கயல்விழி யாளென் கனவு. ... 6
ஏகதேச உருவக அணி
இன்சொற் பயிரென் இயல்பாய் வளர்த்தாலும்
வன்சொலால் வாடும் வயல். ... 7
பாகைக்கும் ஏனைப் பணத்துக்கும் தத்தமது
ஈகை உரைகல் என. ... 8
[பாகை = இங்கு பதவியைக் குறித்தது]
உருவக உருவக அணி
தாள்மலர் கைமரை சக்தியின் கைச்செம்பொன்
தாள்நிழற் கீழென் தலை. ... 9
[கை => தாமரை, செம்பொன்; தாள் => மலர், நிழல்]
கண்மலர்க் கன்னியின் கண்ணம்பால் கட்டுண்டேன்
எண்ணம் செயல்மொழி யென்று. ... 10
[கண் = மலர், அம்பு]
--குருநாதன் ரமணி
★★★★★