Tuesday, February 26, 2019

பயிலிழை குவெ.18. அலங்காரக் குறள்: உயர்வு நவிற்சி அணி தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.18. அலங்காரக் குறள்: உயர்வு நவிற்சி அணி தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/325038138226724/
கவிஞர் திசேசு
உயர்வு நவிற்சி அணி
(குறள் வெண்பா)

இற்றிடுமோ என்றுதன் ஏந்திழை இன்மருங்கு
பற்றிடாது நின்றதவன் பாடு. ... 1

வானவில்லில் அம்பெய்தி வாலிபன் சாதிப்பான்
மான்விழியாள் காதலுக்காய் மற்று. ... 2

காதள வோடிய வாயினாள் கட்டியவனை
காதடையச் செய்தாள் செவிடு. ... 3

ஓங்கியடி ஒன்றரை யானைபலம் தாக்கத்தை
தாங்குவனா தம்பிப் பயல். ... 4

வாய்திறந்தால் வான்பறவை வந்துகொத்தத் தின்பவனை
நோய்நின்று கொல்லுமே நேர்ந்து. ... 5

எண்ணியதும் வந்தாய் இருநூறே ஆயுளென்பார்
மண்ணில் மகானாநான் சொல். ... 6

ஊசிவிழு மோசை உரத்துச் செவிகேட்கும்
மாசிலா மன்றமதன் மாண்பு. ... 7

சினத்தொடு பற்கள் கடித்தவொலி கேட்டு
வனத்திடை அஞ்சும் விலங்கு. ... 8

கோபுரங்கள் மேகமதை கொஞ்சிடவே ஓங்கிநிற்கும்
மாபெரும் மன்னுதமிழ் நாடு. ... 9

வானத்தை வில்லாய் வளைப்போர் வாய்ச்சொல்லின்
ஊனத்தை யாருரைப்பார் சொல். ... 10

★★★
பாவலர் சீனி பழனி
உயர்வு நவிற்சி அணி
(குறள் வெண்பா)

காற்றைப் பிடித்துக் கடிதாய்க் கடித்திடும்
வேற்று கிரகம்போல் வீழ்வு. ... 1

வானத்தில் நாற்று வயலிடை வாழ்வென
கானம் கனவு மழை. ... 2

அழலிடைத் தூக்கம் அவள்மனத் தாசை
விழலிடை வேர்விடு நெல். ... 3

கனவுப் பறவை கலையா இரவில்
மனத்தில் உலவும் மகிழ்வு. ... 4

கடலின் உவர்ப்பெனக் கைமிகு நட்பு
விடலையின் வேட்கை விடு. ... 5

வானத்து மீன்களாம் வையெயிற்று வாள்விழி
தேனினும் தெள்ளிது தான். ... 6

செவ்வாய்க் கிரகம் சிறிதே அருகில்
செவ்வாய்ச் சிரிப்பில் சிலை. ... 7

பரணி படைப்போம் பரமே வரினும்
கருணை விடுகளி றே. ... 8

நாகமணி மின்னும் நகையில் நடிகையாம்
மோகமணி மூடர் பதர். ... 9

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
உயர்வு நவிற்சி அணி
(குறள் வெண்பா)

விண்மீன் தொடுமந்த வேர்போ லருகியதே
மண்ணினைத் தேற்று முழைப்பு. ... 1

குன்றைத் துளைக்கும் குறட்டை ஒலியிடை
நன்றாய் உறங்குவதெங் கே. ... 2

எரிமலைக் கண்ணுடன் என்னவள் நோக்கப்
பரியாய்ப் பறந்தேன் பயந்து. ... 3

வானவில்லின் ஜாலமாய் வாய்ப்பந்தல் போடுவார்
மோனக் கிறுக்காய்த்தொண் டர். ... 4

வால்விண்மீன் கண்ணால் வசியமாக்கும் பார்வையில்
கால்கீழ் வியர்த்துநொந் தேன். ... 5

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
உயர்வு நவிற்சி அணி
(குறள் வெண்பா)

தென்றல் நடைபயின்று திங்களின் நாட்டியம்
மன்றினில் மாமன் மகள். ... 1

திங்களில் தோன்றினாள் செவ்வாயில் வாழ்கின்றாள்
மங்கையை நாடுமன வான். ... 2

கொய்தவிண் மீன்கள் குடலையில் வீழமங்கை
கையலையில் நாணும்தென் காற்று. ... 3

கருவிழி விண்வெளியில் கப்பலாய் நீந்தி
ஒருவழியாய்ச் சேர்ந்தேன் உளம். ... 4

அறுபத யானை அலர்விழி அஞ்சும்
குறுவில்லை கண்பொருத்தும் சேய்! ... 5

காத்தாடி ஏறிக் கடவுளைத் தொட்டவனாய்க்
கூத்தாடும் பிள்ளைக் குணம். ... 6

அன்னை புடவையும் அப்பா பணங்காசும்
மின்னும்-ஆ காயம்விண் மீன். ... 7

ஊரெங்கும் வெள்ளி யுருக்கிவிடு திங்களால்
காரெலியை வெள்ளெலியாய்க் காண். ... 8

ஏழ்கடலும் சேர்ந்த இடிமழை யானதோ
பாழ்வெள்ளம் மாய்க்கும் பயிர். ... 9

பெருவிரலால் தொட்டார் பிரபஞ்ச மதிர்(வு)
ஒருவிரலில் நின்றத(து) ஓய்ந்து. ... 10

★★★★★

பயிலிழை குவெ.18. அலங்காரக் குறள்: உயர்வு நவிற்சி அணி

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.18. அலங்காரக் குறள்: உயர்வு நவிற்சி அணி

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/297095271021011/

உயர்வு நவிற்சி அணி
(பிற பெயர்கள்: அதிசய அணி, அதிசயோக்தி)

உள்ளதை உள்ளபடி அழகுடன் விளக்குதல் தன்மையணி.
உள்ளதை நனிமிகைப்பட உயர்த்திக் கூறுதல் உயர்வு நவிற்சி அணி.

* உயர்வு நவிற்சி அணியின் கூறுகள்
.. கற்பனைத் திறன்
.. படிப்போரை வியப்பில் ஆழ்த்தல்
.. உலக வரம்பை மீறாதபடி கூறல்.

’நிலவின் களங்கத்தை இவள் பெருவிரல் 
.. துடைத்துவிடும்.’ => உயர்வு நவிற்சி
.. இவ்வகை எண்ணமே கற்பனைத் திறன்.
.. இவ்வகை ஒப்புமை படிப்போரை வியப்பில் ஆழ்த்தக் காணலாம்.
.. நிலவின் களங்கம், பெருவிரல் இரண்டும் 
.. உலகறிந்த பொருள்களாய் உலக வரம்பை மீறாதன.

உலக வரம்பை மீறுவது எப்போது?
.. பேய்ப்பெண்ணாள் => பேய், பெண் இரண்டும் உலகம் அறிந்தவை.
.. மண்ணை யுண்டு மனிதரைப் பெற்றெடுக்கும் பேய்! என்றால்,
.. இவ்வகைப் பேய் இல்லாததால் உலக வரம்பை மீறுவது என்றறிக.

தற்குறிப்பேற்றம், இல்பொருள் உவமை, உயர்வு நவிற்சி 
.. இவை மூன்றும் எவ்வகையில் ஒன்றுக்கொன்று 
.. வேறுபட்டு நிற்பன என்றறிதல் முக்கியம்.

மங்கை வந்தாள் மலர்கள் அசைந்தன => தற்குறிப்பேற்றம் 
.. பொதுவான நிகழ்வின்மேல் தற்குறிப்பை ஏற்றிச் சொல்வது.

குதிரையின் கொம்பால் குவிகனி கொய்தாள் => இல்பொருள் உவமை
.. கனி பறிக்கும் துறட்டுக்கோலை இல்லாத பொருளான
.. குதிரைக் கொம்பிற்கு உவமையாக்கியது.

கொய்தனள் விண்மீன்கள் குடலையில் சேர்த்தனள் => உயர்வு நவிற்சி
.. பூக்களை விண்மீன்களாக உயர்த்தி
.. அவற்றைக் கொய்ததாகச் சொல்லும் வியப்பு.

***
தண்டியலங்கார சூத்திரம்

தண்டியலங்காரம் அதிசய அணியை இவ்வாறு வரையறுத்து

மனப்படும் ஒருபொருள் வனப்புவந்து உரைப்புழி
உலகுவரம் பிறவா நிலைமைத் தாகி
ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம்.

அதை ஆறு வகைகளாகப் பிரிக்கிறது.

அதுதான்
பொருள் குணம் தொழில் ஐயம்
துணிவே திரிபு-எனத் தெருளுறத் தோன்றும்
நிலைமைத் தென்ப.

அதாவது, அதிசய அணியானது,
.. பொருள், குணம், தொழில், ஐயம், துணிவு, திரிபு
.. என்னும் ஆறு வகைப்பட்டு அமையும்.

இந்த ஆறு வகைகளையும் தனித்தனியாகக் 
.. குறள் வெண்பா வடிவில் அமைப்பது குறைப்படும் என்பதால்
.. நாம் இப்பயிலிழையில் உயர்வு நவிற்சி அணியை
.. வகை காணாத பொது வகையாக அமைத்துக்
.. குறள் வெண்பாக்கள் புனைவோம்.

சான்று
பொதுவகை உயர்வு நவிற்சி அணி பயிலும் சான்றாக
.. வைரமுத்துவின் பாடல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 
.. கீழ்வரும் ’ஜோடி’ திரைப்படப் பாடலைக் கொள்வோம்.

விண்மீன்களைக் கேட்டால் 
அண்ணன்கள் எல்லாம் பறித்துப் பறித்துத் தருவார்கள்
நான் வானவில் கேட்டால் 
ஏணியில் ஏறி ஒடித்து ஒடித்துத் தருவார்கள்
ஒற்றைத் தங்கை எனக்காக 
ஊரைத் தருவார்கள்.

பயிலிழை குவெ.18. அலங்காரக் குறள்: உயர்வு நவிற்சி அணி

அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிலரங்கில் பங்கேற்கலாம்.
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.18. அலங்காரக் குறள்: உயர்வு நவிற்சி அணி
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. ஒரு விகற்பப் பொழிப்பு மோனைக் குறளாகப்
.. பொதுவான உயர்வு நவிற்சி அணி அமைவதாக
.. ஐந்து முதல் பத்து (5 to 10) வரை 
.. குறள் வெண்பாக்கள் புனைந்தெழுதுவோம்.

குறிப்பு
உயர்வு நவிற்சி சரியாக அமைய
.. மேலுள்ள விளக்கம் மற்றும் சான்றுகளை
.. ஊன்றிப் பயில்க.

தொகுப்பு
16/09/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
உயர்வு நவிற்சி அணி
(குறள் வெண்பா)

தென்றல் நடைபயின்று திங்களின் நாட்டியம்
மன்றினில் மாமன் மகள். ... 1

திங்களில் தோன்றினாள் செவ்வாயில் வாழ்கின்றாள்
மங்கையை நாடுமன வான். ... 2

கொய்தவிண் மீன்கள் குடலையில் வீழமங்கை
கையலையில் நாணும்தென் காற்று. ... 3

கருவிழி விண்வெளியில் கப்பலாய் நீந்தி
ஒருவழியாய்ச் சேர்ந்தேன் உளம். ... 4

அறுபத யானை அலர்விழி அஞ்சும்
குறுவில்லை கண்பொருத்தும் சேய்! ... 5

காத்தாடி ஏறிக் கடவுளைத் தொட்டவனாய்க்
கூத்தாடும் பிள்ளைக் குணம். ... 6

அன்னை புடவையும் அப்பா பணங்காசும்
மின்னும்-ஆ காயம்விண் மீன். ... 7

ஊரெங்கும் வெள்ளி யுருக்கிவிடு திங்களால்
காரெலியை வெள்ளெலியாய்க் காண். ... 8

ஏழ்கடலும் சேர்ந்த இடிமழை யானதோ
பாழ்வெள்ளம் மாய்க்கும் பயிர். ... 9

பெருவிரலால் தொட்டார் பிரபஞ்ச மதிர்(வு)
ஒருவிரலில் நின்றத(து) ஓய்ந்து. ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

Saturday, February 16, 2019

பயிலிழை குவெ.17. அலங்காரக் குறள்: தன்மையணி தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.17. அலங்காரக் குறள்: தன்மையணி தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/307047366692468/
கவிஞர் அரங்க இரகுநாதன்

பொருள் தன்மை அணி
கரிய நிறத்தினன் கார்குழலோன் காண்டற்(கு)
அரிய கழலழகன் ஆம். ... 1

முருகன் அழகனோர் மூவா இளமை
உருவன் அறுமுகனை ஓம்பு. ... 2

குணத் தன்மை அணி
தண்மைக் குணத்தான் தகையோன் இறையவன் 
வண்மை மனத்தை வழுத்து. ... 3

வண்மைக்கோர் கன்னன் வனப்பிற்கோர் கண்ணனும் 
திண்மைக்கோர் பார்த்தனும் தேர். ... 4

இனத் தன்மை அணி
கருசுமக்கும் அன்னை கடமை உழைப்பு 
உருசுமக்கும் தெய்வ உறவு. ... 5

கற்றவர் சான்றோர் கருத்திற் கினியரைப் 
பெற்றவர் வையத்தின் பேறு. ... 6

தொழில் தன்மை அணி
பணிந்து வணங்கிடும் பாமர னையும்
கனிந்து புரக்கும் களிப்பு. ... 7

ஏரோட்டி நட்டே எருவிட்டடூர் காப்பவனைப் 
பாராட்டி இன்புறலே பாங்கு. ... 8

★★★
பாவலர் சீனி பழனி

பொருள் தன்மை அணி
வெம்மையின் வாட்டம் விடிவெள்ளி வைகறை
தும்பி தொடுமலர்த் தேன். ... 1

வேர்விடு மண்ணில் விழுந்தநல் மாரியாய்க்
கார்விடு வானம் கனிவு. ... 2

குணத் தன்மை அணி
உள்ளம் சிறுகுவ ஊர்கடுப்பக் கோல்கோனின்
கள்ள மனத்துக் களவு. ... 3

மிளகாய் கசக்கா மெலிமேனி உட்கா
திளையாக் குடியர் குடி. ... 4

இனத் தன்மை அணி
காடுறை ஆமாக்கள் நாடுறை நன்மாவோ
வாடுரை காட்டும் மதி. ... 5

பொருட்பெண்டிர் பேரழகோ பெய்வளை யாளாய்
அருட்பெண்டிர் ஆள்வினை யாள். ... 6

தொழில் தன்மை அணி
மீன்வலைஞர் மேல்கடலில் வெள்ளெனவே செல்லுவதும்
மான்வலைஞர் மாலைமதி நேர். ... 7

ஓடிவரும் நீரும் உதவும் இருகரமும்
தேடிவரும் செல்வம் தெளி. ... 8

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்

பொருள் தன்மை அணி
தான்தனித் துண்ணாத தன்மையால் ஒற்றுமைக்குச்
சான்றாய் விளங்கும்கா கம். ... 1

இல்லாளின் இன்சொல் இடுங்கு வயிற்றோரின்
இல்லம் இனிதாக்கு மே. ... 2

குணத் தன்மை அணி
வெம்மையில் வாடியும் வெப்பம் தனக்கில்லை
இம்மையில் ஈசனத் தன்  ... 3
(வெப்பம் = ஆசை).

வயிறு பசித்திருக்க வாட்டம் முகத்தில்
இயம்பத் தயங்கும் மனம். ... 4

இனத் தன்மை அணி
வாலாட்டும் நாயும் வருமிரைப் பார்த்திருக்கும்
கோலெடுக்கப் பாயும் வெருண்டு. ... 5

கோலெடுக்க ஆடும் குரங்கு விடாததன்
சீலமாம் வால்தனத் தை. ... 6

தொழில் தன்மை அணி
எண்கால் சிலந்தி இயல்பாய் அமைத்திடும்
ஒண்மை நிறைபின் னலே. ... 7

சிற்றுளி கொண்டு செதுக்கும் சிலைகளில்
சிற்பியின் கற்பனைச் சீர். ... 8

★★★
கவிஞர் திசேசு

பொருள் தன்மை அணி
கடலிணைய வெள்ளந்தான் காவிரியில் ஏனோ
கடைமடையில் காயும் நிலம். ... 1

சுண்ணாம்பு பாலில்லை என்றக்கால் சொல்வாரோ
வெண்மையிலை பாலுக்கே என்று. ... 2

குணத் தன்மை அணி
அழகுதனை வாங்குதற்கு அங்காடி செல்வோர்
அழகெதுதான் என்பதறி யார். ... 3

பெற்றதெலாம் கொட்டிப் பிறர்க்குக் கொடுப்பாரை
நற்றவமே நாடும் நயந்து. ... 4

இனத் தன்மை அணி
எலியொடு நாயும் இணைந்திடும் காலம்
கலியினில் தேர்தலே காண். ... 5

வாக்குரிமை வாய்த்ததால் வாழுகின்ற ஏழையரை
தூக்குவரே பல்லக்கில் தோள். ... 6

தொழில் தன்மை அணி
காவல் தொழிலுற்றோர் கண்டவர்முன் கைகட்டி
ஏவலுக்கு நிற்பதுவோ ஏற்பு. ... 7

கற்றவர் கல்லார்ககுக் கற்றபடி சொல்வித்தல்
கற்றாலே கற்றவரா வார். ... 8

★★★
கவிஞர் குருநாதன் ரமணி

பொருள் தன்மை அணி
குழலில் மலரிருக்கும் கூந்தலிற் பின்னல்
அழைக்கும் பெயராம் அனு. ... 1

நெடிய உடலெங்கும் நீறு துலங்கும்
அடியாரின் தெய்வம் அரன். ... 2

***
குணத் தன்மை அணி
தொட்டாற் சிணுங்கும் சுழிக்கும் முகத்தினை
பட்டம்மாள் பெண்பெயர் பட்டு. ... 3

புன்னகை யில்மறையும் போலி மனம்கொண்ட
கன்னையா கட்சியவர் காப்பு. ... 4

***
இனத் தன்மை அணி
பொறிமேனி பல்நஞ்சு போக்குவயிற் றுந்தி
இறையனார் நாகம் இது. ... 5

ஆறறிவும் நாடுவதாய் ஐம்புலன் துய்ப்பதில்
மாறிலியாய் மாந்தர் மயல். ... 6

***
தொழில் தன்மை அணி
சிறகடித்துத் தூர்ந்துண்டு தேன்றுளி சேர்க்கும்
அறுபதம் தாங்கும் அலர். ... 7

வருவதெலாம் கொள்வர் வரவாக ஏதும்
செருவாக்கும் எத்தர் இவர். ... 8

★★★★★

பயிலிழை குவெ.17. அலங்காரக் குறள்: தன்மையணி

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.17. அலங்காரக் குறள்: தன்மையணி

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/294243851306153/

தன்மை அணி
(பிற பெயர்கள்: தன்மை நவிற்சி அணி, இயல்பு நவிற்சி அணி)

உவமை, உருவகம் போன்று ஏதும் இல்லாது ஒரு பொருளை உள்ளது உள்ளபடியே விளக்குவது தன்மை அணியாகும்.

குதிரைபோல் வந்தான் => உவமை
வந்தான் குதிரை => உருவகம்
ஓடி வந்தான் => தன்மை அணி

கண்கள் இரண்டும் மலர் => உவமை
மலர்க்கண் இரண்டும் => உருவகம்
கண்கள் இரண்டும் => தன்மை அணி

தன்மை அணி நால்வகையில் அமையும்.

* பொருள் தன்மை => ஒரு பொருளின் புறத்தோற்றத்தில் 
.. தெரியும் தன்மைகளை விளக்குவது
.. நீலமயில் நீள்தோகை என்பது போல்.

* குணத் தன்மை => ஒரு பொருளின் உள்ளியல்புகளை விளக்குவது
.. தண்ணீர் குளிர்ச்சி, தழல் வெம்மை என்பது போல்.

* இனத் தன்மை => ஒரு பொருளின் இனம் சார்ந்த தன்மைகளை விளக்குவது
.. வரிப்புலி பதுங்கும் பாயும் என்றாற் போல்.

* தொழில் தன்மை => ஒரு பொருளின் தொழிலில் காணும் 
.. தன்மைகளை விளக்குவது
.. தன் நிலையும் இரை நிலையும் ஆராய்ந்து பதுங்கிப் பாயும் புலி என்று விளக்கினாற் போல்.

தண்டியலங்காரச் சான்றுச் செய்யுள்கள்
(மேல் விவரம்: http://www.tamilvu.org/library/libindex.htm)

1. பொருள் தன்மையணி
(சிவன் உருவத் தோற்றம்)

நீல மணிமிடற்றன் நீண்ட சடைமுடியன்
நூலணிந்த மார்பன் நுதல்விழியன் - தோலுடையன்
கைம்மான் மறியன் கனல்மழுவன் கச்சாலை
எம்மான் இமையோர்க் கிறை.

2. குணத் தன்மையணி
(சிவனடியார், ஊர் குணம்)

உள்ளம் குளிர உரோமம் சிலிர்த்துரையும்
தள்ளவிழி நீர்‍அரும்பத் தன்மறந்தாள் - புள்ளலைக்கும்
தேன்தா மரைவயல்சூழ் தில்லைத் திருநடஞ்செய்
பூந்தா மரைதொழுத பொன்.

3. இனத் தன்மையணி
(சிவன் அணியும் பாம்பின் இனத்தன்மை)

பத்தித் தகட்ட கறைமிடற்ற பைவிரியும்
துத்திக் கவைநாத் துளையெயிற்ற - மெய்த்தவத்தோர்
ஆகத்தான் அம்பலத்தான் ஆரா அமுதணங்கின்
பாகத்தான் சாத்தும் பணி.

[பத்தி = வரிசை, அகடு = வயிறு, துத்தி = படம்,
எயிறு = பல், பணி = பாம்பு]

4. தொழில் தன்மையணி
(சிவனணி மலர்நாடும் வண்டின் தொழில்)

சூழ்ந்து மூரன்றணவி வாசம் துதைந்தாடித்
தாழ்ந்து மதுநுகர்ந்து தாதருந்தும் - வீழ்ந்தபெரும்
பாசத்தார் நீங்காப் பரஞ்சுடரின் பைங்கொன்றை
வாசத்தார் நீங்காத வண்டு.

பயிலிழை குவெ.17. அலங்காரக் குறள்: தன்மையணி

அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிலரங்கில் பங்கேற்கலாம்.
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.17. அலங்காரக் குறள்: தன்மையணி
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. ஒரு விகற்பப் பொழிப்பு மோனைக் குறளாக
.. மேற்சொன்ன நான்கு வகைகளில்
.. தன்மை அணி அமைவதாக
.. வகைக்கு இரண்டாக (2)
.. மொத்தம் எட்டு (8) குறட்பாக்கள் புனைந்தெழுதுவோம்.

குறிப்பு
தன்மையணி அமையும் குறட்பாக்களில்
.. உவமை, உருவகம் அல்லது
.. வேறு எந்த அணியும் அமைதல் கூடாது.

தொகுப்பு
07/09/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
தன்மையணி
(குறள் வெண்பா)

பொருள் தன்மை அணி
குழலில் மலரிருக்கும் கூந்தலிற் பின்னல்
அழைக்கும் பெயராம் அனு. ... 1

நெடிய உடலெங்கும் நீறு துலங்கும்
அடியாரின் தெய்வம் அரன். ... 2

குணத் தன்மை அணி
தொட்டாற் சிணுங்கும் சுழிக்கும் முகத்தினை
பட்டம்மாள் பெண்பெயர் பட்டு. ... 3

புன்னகை யில்மறையும் போலி மனம்கொண்ட
கன்னையா கட்சியவர் காப்பு. ... 4

இனத் தன்மை அணி
பொறிமேனி பல்நஞ்சு போக்குவயிற் றுந்தி
இறையனார் நாகம் இது. ... 5

ஆறறிவும் நாடுவதாய் ஐம்புலன் துய்ப்பதில்
மாறிலியாய் மாந்தர் மயல். ... 6

தொழில் தன்மை அணி
சிறகடித்துத் தூர்ந்துண்டு தேன்றுளி சேர்க்கும்
அறுபதம் தாங்கும் அலர். ... 7

வருவதெலாம் கொள்வர் வரவாக ஏதும்
செருவாக்கும் எத்தர் இவர். ... 8

--குருநாதன் ரமணி

★★★★★

Tuesday, February 12, 2019

பயிலிழை குவெ.16. அலங்காரக் குறள்: உருவகவணி தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.16. அலங்காரக் குறள்: உருவகவணி தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/301069487290256/
கவிஞர் திசேசு

விரி உருவக அணி
கூந்தலெனும் மேகமதும் கொஞ்சி விளையாடல்
ஏந்தும் முகமாம் மதி. ... 1 (உருவகம் 2)

நினைவெனும் கோவிலில் நித்தமும் பூசையெனில்
மனமே ஒலிக்கும் மணி. ... 2

தொகை உருவக அணி
மழைப்பேய் சூழ மலையாள தேசம்
இழைத்ததென்ன பாவம் இயம்பு. ... 3 (உருவகம் 1)

முத்தமழைச் சாரலும் மோதிரக்கை குட்டலும்
நித்தமென்றன் தந்தை நினைவு. ... 4

விரி, தொகை கலப்புருவக அணி
வீச புயலரக்கி வெள்ளமெனும் கூற்றுவன்
கூசா தழிப்பான் குடி. ... 5 (உருவகம் 2)

பாசநெய் யூற்றி பண்பாம் உணவூட்டி
நேசமிகல் அன்னை நினைவு. ... 6

ஏகதேச உருவக அணி
சினத்தீ பெருக்கிடும் வன்சொல்லால் மாந்தர்
மனம்-அது வாடி விடும். ... 7 (உருவகம் 1)

கல்விக் கடைவணிகம் கட்டித் தருவதுண்டோ
ஒல்கா அறிவின் உயர்வு. ... 8

உருவக உருவக அணி
இதழ்க்கனி உண்டு இழுத்தவலி மாற
உதட்டமுத ஒத்தட முண்டு. ... 9 (உருவகம் 2)

மொழிபேசும் கண்வேலால் மூர்ச்சித்த வீரன்
விழியமுதம் ப்ட்டெழுந்தான் மீண்டு. ... 10

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்

விரி உருவக அணி
விழிவண்டாய்த் தாள்மலர் வீழ்ந்து சுவைக்க 
மொழிகண்டாய்த் தித்திக்கும் முந்து. ... 1 (உருவகம் 3)

இன்பெனும் கேணி இயல்பழிந்து வற்றினும் 
அன்பெனும் ஊற்றால் அமைவு. ... 2

தொகை உருவக அணி
விழிமலர் வீசும் எழில்விரை மோந்தே 
விழிகுள மாகும் வியன். ... 3 (உருவகம் 2) 

நாசித்தும் பைப்பூ நறுமுல்லை மூரலை 
நேசித்தெம் மரையுள்ளம் நேடு. ... 4

விரி, தொகை கலப்புருவக அணி
குணக்குன்றைக் கட்டக் குழல்வேலி யாக 
மனக்கொன்றை வீசும் மணம். ... 5 (உருவகம் 3)

வாணிலா மூரல் வாசமலர்த் தேறல் 
நாணிலான் வேட்டநறுந் தேன். ... 6

ஏகதேச உருவக அணி
எண்ணக் கயிற்றினை எட்டும் வரையிலும்
விண்ணில் எறியும் விழைவு. ... 7 (உருவகம் 1)

[எண்ணம் = பிடிமானக் கொக்கி கொண்ட கயிறு. விண்ணை அது பற்றும் உச்சியாக உருவகிக்கவில்லை.]

உருவக உருவக அணி
விழிமலர் விந்தை விளைத்திடும் சிந்தை 
விழிகுள மாக்கும் வியன். ... 8 (உருவகம் 2)

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்

விரி உருவக அணி
விழிக்கோலம் கோபமாய் வீழ்பேச்சு தேளாய்
அழித்திடும் ஊழியாய்ப் பெண். ... 1 (உருவகம் 2)

தொகை உருவக அணி
குரல்கோகு கண்கூகை கூந்தலோ கோரை 
அரம்பை யவன்மன தில்.. ... 2 (உருவகம் 3)

விரி, தொகை கலப்புருவக அணி
மொழியது தேனாம் சிரிப்பது மொக்குள்
அழியுமோ கன்னி நினைப்பு?. ... 3 (உருவகம் 2)

ஏகதேச உருவக அணி
பாசமலர் பூத்தல் பகைநுனி குத்துதல்
நேசச்சொல் காட்டும் வினை.. ... 4 (உருவகம் 1)

உருவக உருவக அணி
கண்வடுக் காரிகையின் கண்மலர்ப் பாசமே
விண்ணில் பறக்கும் வியல்.. ... 5 (உருவகம் 2)

★★★
பாவலர் சீனி பழனி

விரி உருவக அணி
நடைநன்றாம் நங்கை நலிவுமொழி கண்கள்
இடைமின்னல் ஆவாள் இவள். ... 1 (உருவகம் 1)

தொகை உருவக அணி
பூந்தளிர் மேனி புதுப்புனல் நாறணி
கூந்தல் குளிர்குடை யாள். ... 2 (உருவகம் 2)

மார்கழி மென்பனி மண்மகள் கண்மலர்
வார்குழல் ஆல மருள். ... 3
பொருள்
மார்கழி மாத மென் பனியில் மண்ணாம் மகள் துயில்நீங்கித் தன் கண் மலர்ந்து பார்க்கிறாள்:
வாரிய நீண்ட குழல் போல் தொங்கும் ஆல விழுதுகளில் இன்னும் தங்கியிருக்கும் இருள்.

விரி, தொகை கலப்புருவக அணி
சொன்னடைப் பாக்களின் சொன்மலர் வாசத்தில்
இன்னிசையாம் தேனே இயல். ... 4 (உருவகம் 2)

ஏகதேச உருவக அணி
மேருவாம் ஆக்கம் விழைவு கவியேக்கம்
யாருக்கும் எப்போதும் உண்டு. ... 5 (உருவகம் 1)

(செல்வத்தை மேருவாக உருவகித்து, விழைவின் ஏக்கத்தை அதன்மேல் கவியும் முகிலாக உருவகிக்காததால் ஏகதேசம்.)

உருவக உருவக அணி.
குளிர்மதி வெண்ணிலா கூப்பும் விரல்கள்
தளிருடன் காந்தள்போ தாம். ... 6 (உருவகம் 2)

★★★
கவிஞர் குருநாதன் ரமணி

விரி உருவக அணி
கருவிழி வண்டாய்க் கனியிதழ் தேனாய்
உருவெடுத்து வந்தாள் உமா. ... 1

கொற்றம் குடையாம் கொடுகரம் வாழையாம்
குற்றம் ஒறுத்தாண்டான் கோ. ... 2

***
தொகை உருவக அணி
குழல்முகில் தாள்மரை கொற்றவையே உன்னை
வழுத்துவோர்க் கில்லை வலி. ... 3

குழல்மொழி கண்வண்டு குப்பத்தில் முத்தாள்
குழந்தை யொருமலர்க் கொத்து. ... 4

***
விரி, தொகை கலப்புருவக அணி
பாளையாம் புன்னகை பல்வரிசை முத்தாரம்
காளைமேல் கன்னி கணை. ... 5

குயில்மொழி கண்மரை கூந்தல் குடையாம்
கயல்விழி யாளென் கனவு. ... 6

***
ஏகதேச உருவக அணி
இன்சொற் பயிரென் இயல்பாய் வளர்த்தாலும்
வன்சொலால் வாடும் வயல். ... 7

பாகைக்கும் ஏனைப் பணத்துக்கும் தத்தமது
ஈகை உரைகல் என. ... 8

[பாகை = இங்கு பதவியைக் குறித்தது]

***
உருவக உருவக அணி
தாள்மலர் கைமரை சக்தியின் கைச்செம்பொன்
தாள்நிழற் கீழென் தலை. ... 9

[கை => தாமரை, செம்பொன்; தாள் => மலர், நிழல்]

கண்மலர்க் கன்னியின் கண்ணம்பால் கட்டுண்டேன்
எண்ணம் செயல்மொழி யென்று. ... 10

[கண் = மலர், அம்பு]

★★★★★

பயிலிழை குவெ.16. அலங்காரக் குறள்: உருவகவணி

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.16. அலங்காரக் குறள்: உருவகவணி

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/284906572239881/

உருவக அணி

கோமகன் மட்டுமல்லன், குப்பனும் சுப்பனும் கூடப் பேச்சில் உருவகத்தைச் சரளமாகக் கையாள்கின்றனர். ’நான்புலிடா. நீயெலிடா’ போன்ற சொல்லாடல்களில் ’நான் புலியாவேன், நீ எலியாவாய்’ என்று உருவகங்கள் தொக்கி நிற்பது காணலாம்.

ஆகிய, ஆக, ஆன, ஆகும், ஆம், என்று போன்றவை உருவக உருபுகள். மலர் போலும் பாதம் என்றால் அது உவமை. பாதமாகும் மலர் என்றால் அது உருவகம். இவ்வாறு, உருவகத்தில் உவமிக்கப்படும் பொருள் (உவமேயம்) முதல்நின்று அதன் பின்னால் உவமையாகும் பொருள் (உவமானம்) வரும்.

உருவக உருபு விரிந்தோ மறைந்தோ வரலாம்.
பாதமாம் மலர் => ஆம் என்ற உருவக உருபு விரித்து வந்தது => விரியுருவகவணி.
பாதமலர் => ஆம் என்ற உவம உருபு மறைந்து வந்தது => தொகையுருவகவணி.
மலரின் மென்மை, செழுமை இவ்வுருவகத்தின் பொதுத்தன்மை யாவன.

உருவக அணியில் பல வகைகள் உண்டு. அவற்றுள் மூன்றை ஐந்து குறள்களில் நாம் இப்பயிலரங்கத்தில் கையாள்கிறோம்.

திருக்குறள்/புனைகுறள் சான்றுகள்
1. விரி உருவக அணி
உவமேயம், உவமானம், உருவக உருபு மூன்றும் வெளிப்படையாக அமையும்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

உருவகம் => சினமாகும் பொருள் => சின்னத்தைப் பொருள் என்று

2. தொகை உருவக அணி
அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

உருவகம்: அறிவு => கருவி, அரண்

3. விரி, தொகை கலப்புருவக அணி

பாளையாம் புன்னகை பல்வரிசை முத்தாரம்
காளைமேல் கன்னி கணை.

4. ஏகதேச உருவக அணி
தொடர்புடைய பொருள்களில் ஒன்றை உருவகம் செய்து மற்றதை/மற்றவற்றை 
உருவகம் செய்யாது விடுவது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்.

பிறவியைப் பெருங்கடலாக உருவகித்து அதனுடன் தொடர்புடைய 
பிணையாக இறைவனடியை உருவகிக்காமை.

5. உருவக உருவக அணி
உருவகம் செய்த பொருளையே மீண்டும் (வேறு விதமாக) உருவகம் செய்வது.

கண்மலர்க் கன்னியின் கண்ணம்பால் கட்டுண்டேன்
எண்ணம் செயல்மொழி யென்று.

கண் என்பது மலருக்கும் அம்புக்கும் உருவகம் செய்யப்பட்டது.

அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிலரங்கில் பங்கேற்கலாம்.
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.16. அலங்காரக் குறள்: உருவகவணி
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. ஒவ்வொரு குறளிலும் 
.. ஒன்று முதல் மூன்று உருவகங்கள் வரை 
.. தேவைக் கேற்ப அமையுமாறு
.. ஒரு விகற்பப் பொழிப்பு மோனைக் குறளாக
.. மேற்சொன்ன ஐந்து வகைகளில்
.. வகைக்கு ஒன்றாக
.. மொத்தம் ஐந்து குறட்பாக்கள் புனைந்தெழுதுவோம்.

ஒருவர் பத்து (10) குறட்பாக்கள்
.. வரை புனைந்தெழுதலாம். 

தொகுப்பு
24/08/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
உருவகவணி
(குறள் வெண்பா)

விரி உருவக அணி
கருவிழி வண்டாய்க் கனியிதழ் தேனாய்
உருவெடுத்து வந்தாள் உமா. ... 1

கொற்றம் குடையாம் கொடுகரம் வாழையாம்
குற்றம் ஒறுத்தாண்டான் கோ. ... 2

தொகை உருவக அணி
குழல்முகில் தாள்மரை கொற்றவையே உன்னை
வழுத்துவோர்க் கில்லை வலி. ... 3

குழல்மொழி கண்வண்டு குப்பத்தில் முத்தாள்
குழந்தை யொருமலர்க் கொத்து. ... 4

விரி, தொகை கலப்புருவக அணி
பாளையாம் புன்னகை பல்வரிசை முத்தாரம்
காளைமேல் கன்னி கணை. ... 5

குயில்மொழி கண்மரை கூந்தல் குடையாம்
கயல்விழி யாளென் கனவு. ... 6

ஏகதேச உருவக அணி
இன்சொற் பயிரென் இயல்பாய் வளர்த்தாலும்
வன்சொலால் வாடும் வயல். ... 7

பாகைக்கும் ஏனைப் பணத்துக்கும் தத்தமது
ஈகை உரைகல் என. ... 8

[பாகை = இங்கு பதவியைக் குறித்தது]

உருவக உருவக அணி
தாள்மலர் கைமரை சக்தியின் கைச்செம்பொன்
தாள்நிழற் கீழென் தலை. ... 9

[கை => தாமரை, செம்பொன்; தாள் => மலர், நிழல்]

கண்மலர்க் கன்னியின் கண்ணம்பால் கட்டுண்டேன்
எண்ணம் செயல்மொழி யென்று. ... 10

[கண் = மலர், அம்பு]

--குருநாதன் ரமணி

★★★★★